Skip to main content

தர்மயுத்தம் அல்ல! சிவமாகிய சித்தம்! -இது வேற ராஜேந்திரபாலாஜி!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

உடுத்தியிருந்த மஞ்சள் உடையும், மாலையும் கழுத்துமாக தரையில் அமர்ந்திருந்த விதமும், ‘என்ன இது? தர்மயுத்தத்துக்கு தயாராகிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?’ எனக் கேள்வி கேட்க வைத்தது. ‘அப்படியெல்லாம் கிடையாது, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது ஆன்மிக ஈடுபாடு..’ என்று பதில் கிடைத்தது.  

 

எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி அந்தக் கோவிலை நோக்கிச் சென்றார். வாசலில் அவர் கால் பதித்ததும், மங்கல இசையால் அந்தக் கோவிலே அதிர்ந்தது. அங்கிருந்த இருவர் முணுமுணுத்ததும் கேட்டது. 

 

“அந்தக் காலத்துல கோவில்களைக் கட்டினதெல்லாம் மன்னர்கள்தான். இங்கே என்னடான்னா.. மந்திரியா இருக்கிற ராஜேந்திரபாலாஜி.. கோடிகளைக் கொட்டி ஒரு கோவில் கட்டிருக்காரு. இன்ஜினியரிங் காலேஜ்.. மெடிக்கல் காலேஜ்னு கட்டிய முன்னாள்.. இந்நாள் மந்திரிங்க எத்தனையோ பேரு தமிழ்நாட்டுல இருக்காங்க. ஏன்னா.. கல்விச் சேவைங்கிறது இங்கே பணம் காய்க்கிற மரம். ஆனா.. ஊருக்கு ஒதுக்குப்புறமா.. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துல.. மந்திரி ஒருத்தர்  இம்புட்டு செலவழிச்சு  ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறது  ஆச்சரியமா இருக்கு.” என்று விழிகளை விரித்தனர். 

 

‘இதோ இந்த அமாவாசை.. இல்ல.. அடுத்த அமாவாசை.. நிச்சயமா கட்டம் கட்டிருவாங்க..’ என்று விருதுநகர் மாவட்டத்தில் சிலர் ராஜேந்திரபாலாஜி மீதான நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க, அவரோ, முழு முயற்சி எடுத்து, பழைய கோவில் ஒன்றை முற்றிலுமாக புனரமைத்து, வரும் 28-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தவிருக்கிறார்.  

 

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூர் - மூளிப்பட்டியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோவில். பல சமூகத்தினரும் வழிபாடு நடத்திவரும் இந்தக் கோவில், ராஜேந்திரபாலாஜிக்கு குலதெய்வக் கோவிலாம். பேட்டியோ, அறிக்கையோ,  ட்வீட்டோ, எதிலும் வம்பிழுப்பதில் வல்லவராக இருப்பதால், சர்ச்சையில் சிக்கிக்கொள்வது அவருக்கு வாடிக்கையாகிப் போனது.  இந்த அரசியல் அக்கப்போர், நிம்மதிக்கு வேட்டு வைக்கும்போதெல்லாம், மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தருவது ஆன்மிகம் மட்டுமே என்பதை அனுபவ ரீதியாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையைச் சொல்வதென்றால், ரஜினி பயணிப்பது போல்,  ஆன்மிகத் தேடலோடு,  இவரும் சத்தமில்லாமல் அடிக்கடி வடக்கே போய்விடுகிறார். 

 

மஹா கும்பாபிஷேகத்துக்கு முன், கோயில் மூலஸ்தானத்தில் கலசங்களை வைத்து, விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மூலஸ்தான ராஜகோபுரம், பெரிய அளவில் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சிவன் சிலை, முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள், அய்யனார் சிலை போன்றவற்றைக் காட்டி,  “முழுக்க முழுக்க ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோவில் இது..” என்றார் பரவசத்துடன்.   


 
‘கரோனா காலக்கட்டத்தில் கும்பாபிஷேகமா?’ என்று கேட்டபோது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும்.” என்றார். 

 

இறைவன் வாழுமிடம் என்றும், ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடமென்றும், கோவிலுக்கு விளக்கம் தரப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவை! ஆன்மிகம் என்பது தன்னை இயக்கும் சக்தியை தனக்குள்ளே பயணித்து உணர்வது! அப்படியென்றால், ‘ஆன்மிக அரசியல்’ என்பது என்னவாம்? தன்னை உணர்ந்து மக்கள் சேவையாற்றுவதே! ஆம்.. மக்கள் சேவையே மகேசன் சேவை! 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.