Skip to main content

அந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

அதிமுக ஆட்சி இருப்பதாலேயே ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோரை அனுசரித்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் செல்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்றும், உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் தொடங்கப்பட்டதுதான் அமமுக. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக தோல்வி அடைந்ததால் அமமுகவை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர். 

ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் விரும்பும் தலைமை யார்? என்ற கேள்விக்கு நக்கீரன் இணைத்தளத்திற்கு பதில் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி.


''இன்றைக்கு அதிமுகவுக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தினகரன், சசிகலா என யாரும் தலைமை கிடையாது. யார் அந்த தலைமை என்றால், அந்த தலைமை பெயரை சொல்லி பல இடங்களில் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி தமிழகம் முழுவதும் ஓட்டு கேட்டோம். ஜெயலலிதா பெயரை சொல்லி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அதுதான் தன்னிகரற்ற தலைமை. 

 

K. C. Palanisamy



உடனே இவர்கள் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றினார் என்பார்கள். இந்த ஒன்பது தொகுதிகளில் அதிமுக வெற்றி என்பது, ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதுபோலத்தான். இப்போது ஆர்.கே.நகரில் தினகரனுக்கு என்ன வாக்கு கிடைத்தது என்பதை பாருங்கள். 

கட்சிக்குள் எல்லா முக்கியஸ்தர்களையும் அனுசரித்து, எல்லோரையும் அரவணைத்து போகிற தலைமைதான் இன்றைய தேவை அதிமுகவுக்கு. மிகப்பெரிய ஆளுமையான தலைவர் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவதற்கு இன்று இல்லை. அது யதார்த்தமான சூழ்நிலை. அந்த இடத்திற்கு வருபவர்கள், ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு பிரச்சனை, போட்டி, பொறாமை, விருப்பு, வெறுப்புகள் இருக்கும். நடுநிலையோட எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து போகக்கூடிய ஒரு நபர் வரணும். அந்த தகுதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தினகரன், சசிகலாவுக்கு இல்லை. காலமும் தொண்டர்களும்தான் அந்த தலைமையை உருவாக்கும். 

 

ops-eps-ttvd


 

செந்தில்பாலாஜி வந்தால் எடப்பாடி பழனிசாமி தனக்கு போட்டியாக நினைக்கிறார். அதனால் அவரை அதிமுகவுக்கு வரவிடவில்லை. கலைராஜன் வந்தால் ஜெயக்குமாருக்கு போட்டியாகும் என நினைத்து அவரை சேர்க்கவில்லை. என்னை அதிமுகவில் சேர்த்தால் கட்சியில் தனக்கான ஆதிக்கம் போய்விடும் என்று தங்கமணி, வேலுமணி நினைக்கிறார்கள். குறிப்பாக வேலுமணி நினைக்கிறார். தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. மார்க்கண்டேயன் அதிமுகவுக்கு வரக்கூடாது என்று கடம்பூர் ராஜூ நினைக்கிறார். இப்படியே போனால் அதிமுக எப்படி அடுத்த தேர்தலில் வெற்றி பெறும். ஒவ்வொருவருக்கும் அந்த பகுதியில் சுயநலப்போக்கு உள்ளது. அவர்கள் நன்றாக வர வேண்டும் என்று நினைக்கிறார்களேயொழிய கட்சி நன்றாக வர வேண்டும் என்று நினைக்கவில்லை. 

இவர்களின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்தால் கட்சி பலவீனமாகி ஆட்சி முடிந்தவுடன் கட்சி காணாமல் போய்விடும். ஆட்சிதான் தற்போது கட்சியை நடத்துகிறது. கட்சி ஆட்சியை நடத்தவில்லை. கட்சி பலமாக இருந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும். 

எம்.ஜி.ஆர். காலத்திலேயும், ஜெயலலிதா காலத்திலேயும் சில உதாரணங்களை சொல்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தையும், தங்க தமிழ்செல்வனையும் ஒன்றாக ஜெயலலிதா வளர்த்து கொண்டுவரவில்லையா. எம்.ஜி.ஆர். காலத்தில் ஆம்.எம்.வி.யையும், கருப்புசாமி பாண்டியனையும், திருநாவுக்கரசரையும் வளர்த்து கொண்டுவரவில்லையா. இதுதான் எல்லோரையும் அனுசரித்து போவது. அந்த அணுகுமுறை இவர்களிடம் இல்லை''. 


 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.