Skip to main content

“ஆளுநருக்கு கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லை..” - கே. பாலகிருஷ்ணன் தாக்கு 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

 

இவ்விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “கலைஞர் நூற்றாண்டு விழாவாக மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெல்லாம் கலைஞர் செய்த மாபெரும் சாதனைகளை விளக்குவதைப் பற்றி நமது முதல்வர் திட்டமிட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கலைஞர் எந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இந்தியாவில் நிலை நிறுத்த விரும்பினாரோ அதை மக்களுக்கு நினைவூட்டும் விழாவாகவும் இந்த கலைஞர் நூற்றாண்டு விழா இருக்கிறது. 

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

கலைஞர் சிறு வயதில் செய்த சாதனைகள் நம்மை வியக்க வைக்கிறது. ‘ஃப்ரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகை கலைஞரை பற்றி ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டிருந்தது.  அந்த இதழில் உள்ள கட்டுரையில், தனது 13 வயதிலேயே ‘செல்ல சந்திரா’ என்ற சரித்திர நாவலை தமிழில் எழுதியவர் டாக்டர். கலைஞர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த கட்டுரையை படித்தபோது நான் அதிர்ந்து போனேன். எப்படி தனது 13 வயதில் நாவலை எழுத முடியும்? ஏதாவது இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள் என்று எண்ணி அந்த கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொண்டு, நமது இந்து பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கலைஞரை பற்றி ஆய்வு நூல் வெளியிட்டிருக்கையில் இப்படி எழுதி இருக்கிறீர்களே இது உண்மையா என்று கேட்டபோது, அந்த கட்டுரையின் ஆசிரியர் இது நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறினார். 

 

அந்த செல்ல சந்திரா என்ற நாவல் தற்போது  திமுகவின் அலுவலகமாக இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் அரை பக்க நூலாக இருக்கிறது. முழு நூல் கிடைக்காத காரணத்தினாலேயே அந்த நூலை பதிப்பிடம் செய்யவில்லை என்று அந்த ஆசிரியர் கூறினார். 

 

இந்த நாவலுக்கு கலைஞர் முன்னுரையும் எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும் நாகரிகத்தையும் இழந்து சாதிய மூட நம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை ஒழிக்க சதி வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு, துளு ஆகிய திராவிட மொழிகளில் பழம்பெருமைமிக்க தமிழை அழிக்க விரும்புகிறார்கள். திராவிடர்கள் விழித்து எழ வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த நாவலில் எந்த ஒரு எழுத்து பிழையும், இலக்கண பிழையும் இல்லை என்று அந்த ஆசிரியர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.  

 

தனது 13 வயதில் திராவிடத்தை பற்றியும், திராவிட இயக்கத்தை பற்றியும் புரிந்து கொண்டிருக்கின்ற தனி வார்ப்பாக தான் கலைஞர் இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கிற ஆளுநருக்கு, கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது. தமிழை பற்றியும், திராவிடத்தை பற்றியும் தெரியாமல் அரசாங்கத்தின் மாளிகையில் அமர்ந்து கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?   

 

கலைஞர், 13 வயதிலே எப்படிப்பட்ட கொள்கைகளை தூக்கி நிறுத்த விரும்பினாரோ, அந்த கொள்கைகளுக்கு எல்லாம் சாவு மணி அடிக்கும் வகையில் இன்றைக்கு சனாதன சக்திகள் இந்தியாவில் வேகமாக பணியாற்றி கொண்டிருக்கின்றன. அந்த சனாதன சக்திகள் ஏவப்பட்ட அம்பாகத்தான் நமது ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.