Skip to main content

“என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா...என்று கேட்டார் ஜெயலலிதா...” - சுவாரஸ்யம் பகிரும் ஜாகுவார் தங்கம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Jaguar Thangam Spoke about Jayalalitha

 

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கிப் பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது நட்பை நமக்களித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது; 

 

1981 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். அப்போது எம்.ஜி.ஆர் என்னை அழைத்து ஜெயலலிதாவின் கூடவே இருந்து பார்த்துக்க சொன்னார். அவரின் ஆரம்ப கால அரசியலில் ஒரு வருட காலம் அவருடன் இருந்தேன். ஜெயலலிதா கட்சியில் சேரும்போது, நான் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் முன் வரிசையிலேயே அமரும் அளவிற்கு அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் போது, போலீஸ் எல்லாம் நிறைய அவருடன் இருக்கமாட்டார்கள். அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் காருக்கு முன்பாக சென்று சிலம்பம் சுற்ற  காருக்கு வழி ஏற்படுத்தி தருவேன். நீங்க சோர்வடையவே மாட்டீங்களா என்று கேட்டார். இப்படியே இருவரும் சகோதர சகோதரியாக பழகினோம்.

 

ஒருமுறை அவரது டிவி நிகழ்ச்சி தொடர்பாக வேலை செய்யும் போது, நிர்வாகத்தினர் என் சம்பளம் தொடர்பாக பேசினார்கள். நான் சம்பளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மூன்று நான்கு நாட்கள் கழித்து ஜெயலலிதா என்னை அழைத்தார். அவரைச் சந்தித்தபோது, “என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா” என்று கேட்டார். நான் சம்பளத்திற்கு எல்லாம் வேலை செய்யவில்லை. அன்புக்காகத்தான் வேலை செய்கிறேன் என்றேன். ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னார். வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஒரு ரூபாய் மட்டும் தாருங்கள் என்றேன். உங்கள் அன்பு மட்டும் போதும் என்றேன். உடனே அவர் தனது உதவியாளரைப் பார்த்து கண் அசைத்தார். அவர் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதிலிருந்து ஒரு யானை பொம்மையை எடுத்து ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். அதனை எப்போதும் பத்திரமாக வைத்துக்கச் சொன்னார். 

 

Jaguar Thangam Spoke about Jayalalitha

 

கொரோனா காலத்தில் நான் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, எம்.ஜி.ஆர், ஜப்பான் நரம்பியல் டாக்டருக்கு இதேபோல் தங்க யானை பொம்மையைப் பரிசாகத் தரும் படம் இருந்தது. அப்போது ஜெயலலிதா கொடுத்த அந்த யானை பற்றிய ஞாபகம் வந்து அது தங்கமாக இருக்குமோ என உடனே அருகிலிருந்த ஒரு அடகு கடையில் கொடுத்து பரிசோதித்தபோது அது உண்மையான தங்கம் என்றும் அதன் கண்கள் வைரம் என்பதும் தெரிந்தது. அதனுடைய தற்போதைய மதிப்பு ஒன்னரை கோடி. அப்போதைய மதிப்பு நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை இருக்கும். ஜெயலலிதாவிடம் கொடுக்கும் மனம் இருந்தது.  

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.