Skip to main content

அன்பழகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக இருப்பார் கலைஞர்... -வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.! 

Published on 10/06/2020 | Edited on 11/06/2020

 

kkkk


கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். ஜெ.அன்பழகனுடன் நெருக்கமாகப் பழகி வந்தவர் நடிகரும், வேளச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர். ஜெ.அன்பழகனுடன் பழகிய தருணங்களை நம்மிடம் நினைவு கூர்ந்தார்.
 


''ஜெ.அன்பழகன் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். நான் தி.மு.க.வில் இணைந்ததில் இருந்து அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். அவர் மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய பகுதியில் பல இடங்களில் என்னை அழைத்து பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார். கலைத்துறையில் சிறந்த ஈடுபாடு கொண்டவர். 'இது நல்ல படம், சிறந்த படம், வியாபார ரீதியிலான படம், சிறந்த கலைக்கான படம்' என்று சொல்லக் கூடிய அளவுக்கு கலைத்துறையையும் நேசித்தவர். அரசியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு கலைத்துறையையும் எப்படிக் கவனிக்கிறார் என நான் ஆச்சரியப்பட்டதும் உண்டு. 

கட்சிப் பணி என எடுத்துக்கொண்டால், அவரைப்போல தி.மு.க.வில் பணியாற்றுவதைப் பார்க்க முடியாது. ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அதற்குப் பிறகும் 10, 15 ஆண்டு காலமாக அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், மிகவும் மன தைரியத்தோடு இரவு பகல் பாராமல் பணியாற்றுவார். மன வலிமை அவருக்கு அதிகம். 
 

sssmks


கலைஞர், அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என அன்பழகனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் மிகுந்த நம்பிக்கையோடு ரிலாக்ஸாக இருப்பார் கலைஞர். தான் நினைத்ததைவிட சிறப்பாக அன்பழகன் செய்வார் எனும் நம்பிக்கையில் கலைஞர் இருப்பார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அன்பழகனை கலைஞர் பாராட்டுவார். பாராட்டாமல் ஒருமுறைக் கூட இருந்ததில்லை. கலைஞரிடம் பாராட்டுப் பெறுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்தப் பாராட்டைப் பெறும்போது சாதனையாக நினைப்பார் அன்பழகன். 
 

 

vagai chandrasekar mla

 

தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கிய காலத்தில் இருந்து சென்னையில் இருக்கிற காரணத்தினால் மு.க.ஸ்டாலினோடு மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அதேபோல அன்பழகன்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார். 

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை முடியும் வரைக்கும் ஜெ.அன்பழகனின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. மைக் கொடுக்க மாட்டார்கள். மைக் அணைக்கப்பட்டால் கூட, அவர் எழுந்தவுடனேயே ஆளுங்கட்சியினர் அனைவரும் அலர்ட் ஆயிடுவார்கள். சபை அமைதியாக இருக்கும்போது ஒரே ஒரு வார்த்தை சொல்வார்; அப்போது சபையே ஆடிப்போகும்! நமக்குக் கோபம் வரும்போது, இந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும் என பொங்கும்போது நாம் உணர்ச்சிவசப்பட்டுவோம். ஆனால், அன்பழகன் கோபமாக ஒரு கருத்தைச் சொல்லும்போது ரொம்ப ரிலாக்ஸாக, ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். வார்த்தை ஒவ்வொன்றும் கனலாக வந்து விழும்; அக்னியாக வந்து விழும். 
 

vagai chandrasekar mla


உண்மையிலேயே எங்கள் கழகத்திற்கு அன்பழகன் தூண்தான்! எங்கள் இயக்கத்தின் ஆற்றல் மிக்க செயல் வீரர். மாவட்டச் செயலாளராக இருந்து. அந்த மாவட்டத்தில் கட்சியினரை ராணுவக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தவர். பொறுப்பில் உள்ளவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர். அதேநேரத்தில் மென்மையானவர். எல்லாரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர். 
 

http://onelink.to/nknapp


'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சிகளில் தானே கலந்து கொண்டு, முன்னின்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போதுகூட தலைவர் ஸ்டாலின், ''அன்பு... நீங்க இந்த வேலையைச் செய்ய வேண்டாம்! நீங்க உங்க உடல்நிலையைப் பாருங்க! நீங்க பத்திரமா இருங்க! நீங்க பத்திரமா இருங்க''ன்னு பார்க்கிற இடத்திலெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அன்பழகன் பணியாற்றியதால் இக்கட்டான சூழ்நிலை வந்துவிட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நட்போடு பழகியவர். அவரது இழப்பு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பு'' என நா தழுதழுக்க கூறினார். 
 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.