Skip to main content

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் முழுப் பின்னணி...

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்று கைது செய்தது.

 

inx media case full details

 

 

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடான அந்நிய முதலீடுகளை பெற அனுமதி வழங்கப்பட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்று, வெளிநாட்டிலிருந்து நிதி திரட்ட அனுமதி வேண்டி நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகினர். அப்போது அவர்களது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திராணி முகர்ஜி, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தை அணுகினார். அதன்பின் 4.6 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவ வேண்டும் என சிதம்பரம் கூறியதாக கைது செய்யப்பட்டபின் கொடுத்த வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 3.6 கோடி ரூபாய் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

inx media case full details

 

மேலும் அதே ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, மொரிஷியஸ் நாட்டை சேர்ந்த 3 நிறுவனங்கள் மூலம் 305 கோடி ரூபாய் வரை அந்நிய நேரடி முதலீடு வழக்கப்பட்டிருப்பதாக சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இந்தியாவின் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் தான் இந்த முதலீட்டுக்கான ஒப்புதலை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகப்பட்ட நிதி அமைச்சகத்தின் புலனாய்வுத்துறை, சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவரின் ஆடிட்டர் பாஸ்கர்ராமன் என்பவரின் கணினியில் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான சில ஆவணங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. அதில் ஐஎன்எக்ஸ் மீடியா மூலமாக கார்த்தி சிதம்பரம் பெற்ற நிதி குறித்து தகவல்கள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பரிந்துரையின் பெயரில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மத்தியில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐயின் ஊழல் வழக்குக்கு எதிராக முன்ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தார் சிதம்பரம். பின்னர் அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கிலும் முன்ஜாமீன் பெற மனு தாக்கல் செய்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி தனது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் உள்ள அவர், கடந்த ஜூலை மாதம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறுவதாக அறிவித்தார். இதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்தது. அதன்பின் ப.சிதம்பரம் தரப்பு நேற்று உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து நிலையில், நேற்று இரவு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

 

 

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

மக்களவைத் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
P. Chidambaram challenge to BJP on Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, ப.சிதம்பரம் இன்று (06-04-24) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா?. 

தி.மு.க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், தி.மு.க அமைக்கவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும்” என்று கூறினார்.