Skip to main content

இரு நாடுகளும் படைகளைக் குவித்தது ஏன்? சீனாவின் ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

bjp

 

இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி. ஊடுருவவில்லை என்றால் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தது ஏன்? சண்டை நடந்தது ஏன்? 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? சீனாவுக்கு நமது பிரதமர் நற்சான்றிதழ் கொடுக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

 

என்னதான் நடக்கிறது இந்திய-சீன எல்லையில்?

 

சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கக்கூடிய வடக்குப்பகுதி ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கர்னல் இ.ஜெ.சான்டிஸ் கூறுகையில், (பிரதமர் சொல்லியிருப்பது) "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. அவருடைய கணக்கின் அடிப்படையில் சீனர்கள் தங்களது எல்லையைத் தாண்டி வரவில்லை. அப்படியென்றால் சீன ராணுவம் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் ஏற்பட்ட இழப்பை திரும்ப கைப்பற்றியிருக்கிறார்கள் என பிரதமர் சொல்கிறாரா எனக் கேட்டுள்ளார். லடாக் பகுதியில் லெப்டினட் ஜெனரலாக வேலை பார்த்த பிரகாஷ்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடக் கடவுளே... இந்திய பகுதியை ஆக்கிரமிக்க வில்லை என சீன ராணுவம் கூறுகிறது. அதையே தான் மோடியும் சொல்கிறார். இது விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய தேசத் துரோகம் என்கிறார்.

 

congress

 

இவர்கள் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வேலை செய்த எட்டு ஜெனரல்கள் இந்தியாவின் பகுதிகளை சீனா சமீபத்தில் நடந்த போரில் ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜெனரல் நரசிம்மன், வி.பி.மாலிக், பனாக், சதீஷ்நம்பியார், குல்கர்னி, மேஜர் டி.பி.சிங், தமிழரான சிவசங்கர், தங்கராஜ், அம்புராஜ், ரமேஷ்ராய் போன்றவர்கள் மோடி சொல்வது பொய்யென சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.

 

லண்டனில் இருந்து வரும் டெலிகிராப் பத்திரிகை, அதனுடைய டெல்லி நிருபர் ஜோவேலஸ், பெய்ஜிங் நிருபர் சோபியாயான், இஸ்லாமாபாத் நிருபர் பென் பார்மர் ஆகியோர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி எழுதப்பட்ட கட்டுரையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்தியப் பகுதிகளில் 60 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் போர் வீரர்களை நிறுத்தி யிருக்கிறது எனத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

 

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள லடாக் பகுதியில் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் பல பகுதிகளை இந்தியா சீனாவிடம் பறிகொடுத்தது. அவற்றை 1967ஆம் ஆண்டு நடந்த போரில் மறுபடியும் கைப்பற்றியது. 2013ஆம் ஆண்டு முதல் இந்தியா அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியது. அதே நேரத்தில் சீனாவும் அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியுள்ளது. பனகவ் என்கிற சர்வதேச சுற்றுலா தலமான ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இந்தியா 262 கி.மீ. சாலை அமைத்துள்ளது. ஆனால் சீனா அந்தப் பகுதியில் 600 கி.மீ. சாலை அமைத்து, படைகளை விரைந்து நிறுத்தும் வலிமை பெற்றுள்ளது.

 

நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. திபெத் விவகாரம், ஹாங்காங் போராட்டம் எதிலும் சீனாவை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் பாகிஸ்தானைச் சார்ந்த தீவிரவாதியான மசூத் அசாரை கைது செய்யச் சொல்லிய இந்தியாவின் நடவடிக்கைகளை சீனா எதிர்த்தது. அத்துடன், சீனா லடாக் பகுதியில் இந்திய நிலங்களில் கால் வைத்து முன்னேறிக்கொண்டே இருந்தது. 60 ச.கி.மீ. இந்தியப் பகுதிகளைச் சீனா பிடித்துவிட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டப் பிறகுதான் இந்தியா அதை எதிர்க்கத் துணிந்தது. அப்போது கூட பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை.

 

twit

 

ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 15ஆம் தேதி கைகளாலும் இரும்பு ராடுகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் இருபது இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். பலர் சீன ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் லெப்டினல் கர்னல் அந்தஸ்து கொண்ட அதிகாரி. ஒருவர் மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. அவர்களை விடுவித்த சீனா, பனகங் ஏரி எங்களுடைய ஏரி என்கிறது. இந்திய பிரதமர் இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இதில் எது உண்மை? எனக் கேள்வி கேட்கிறார்கள் ராணுவத்துறை யைச் சார்ந்த வல்லுனர்கள்.

 

http://onelink.to/nknapp

 

இதைப்பற்றி நம்மிடம் பேசிய டெல்லியைச் சார்ந்த பத்திரிகையாளரும் டிஃபன்ஸ் துறையில் பல கட்டுரைகளை எழுதியவருமான மேத்யூஸ் சாமுவேல், "இந்தியா ஒரு பலத்த இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது ஏதோ இந்த மாதம் நடந்த சம்பவமல்ல. சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது கவலைக்குரிய விசயம்'' என்கிறார்.


 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.