Skip to main content

"அமித்ஷா கணக்கு தமிழ்நாட்டில் எடுபடாது; பாஜக பெரிய கட்சி என்றால் தனியா நிக்கட்டும் மோதி பாப்போம்..." - துரை வைகோ

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

lkj


தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம், நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " பாஜக கூறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வரும் சூழ்நிலையில் அதற்கான தேவை ஏற்படவில்லை. 

 

குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை அமித்ஷா விமர்சித்துப் பேசியுள்ளார். அவர்கள் இல்லை என்றால் இந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவர்களால் பெற முடியாது. அப்படி இருக்கையில் அதிமுகவை அவர்கள் விமர்சிப்பதை எப்படி அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள். அதிமுக கூட்டணியால் நாங்கள் வெற்றி பெறவில்லை; எங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றோம் என்றெல்லாம் தற்போது புது கோஷ்டி ஒன்று கிளம்பியுள்ளது. அவர்கள் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நிற்க வேண்டியதுதானே? இவர்களின் உண்மையான பலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு போதும் பாஜகவினர் தயார் இல்லை.

 

இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் தற்போது அதிமுக பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை சமூகநீதியில் அவர்கள் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் தற்போது அவர்கள் பாஜகவின் நிலைப்பாட்டுக்குச் சென்றுள்ளது அவர்களுக்குக் கட்சி ரீதியாகவே பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரிய தவற்றை தற்போது அதிமுக செய்துள்ளது. தவறான முன்னுதாரணத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அவர்களே ஏற்படுத்தி விடுவார்கள்.

 

தமிழகத்தில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளதைப் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். நான் முன்பே சொன்னதுபோல அதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அவர்கள் அதிமுகவின் துணையோடு பெற்றதுதான். தனியாக நின்றால் அவர்கள் மட்டும் தனியாகத் தெருவில் நிற்க வேண்டியதுதான் வரும். அதிமுக சிதைந்திருப்பதாக இவர் சொல்கிறார். ஆனால் அந்த இயக்கத்தைச் சிதைத்ததே இவர்கள்தான். அப்படி அதிமுக சிதறுவதால் கிடைக்கும் பலனை தாங்கள் அறுவடை செய்யலாம் என்று பார்க்கிறார்கள்" என்றார்.
 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.