Skip to main content

"என்னுடைய கரியரில் மிக முக்கியமான படமாக இதைப் பார்க்கிறேன்" -  'சர்தார்' பட விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"I see this as the most important film of my career"- Actor Karthi speaks at the 'Sardaar' film festival!

 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

 

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.

 

சென்னையில் நடைபெற்ற சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "மித்ரன் 'இரும்புத்திரை' என்று ஒரு படம் எடுத்தார். அந்த படம் முடிந்ததற்கு பிறகு எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. என் நெஞ்செல்லாம் அடைச்ச மாதிரி இருந்தது. ஒரு பேங்கில் இருந்து வரக்கூடிய மெசேஜ் இவ்வளவு பயமுறுத்த முடியுமா என்பது, அந்த படம் பார்த்ததற்கு பிறகுதான் தெரிந்தது. அந்த படம் எல்லா இடத்திலும் வெற்றிகரமாக ஓடியது. ஹிந்தியில் டப் செய்யப்பட்டு, 3 மில்லியனைத் தாண்டிப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

 

1980- களில் உளவாளிகளுக்காக சிறிய குழுவை உருவாக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு எவ்வளோ நடிக்க சொல்லிக் கொடுத்தும், நடிப்பே வரவில்லை. ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், ஒரு நடிகனே ராணுவ வீரராக மாறினால், என்ன என சொல்லி, ஒரு டீம் ஒரு நாடக நடிகனை எடுத்து, பயிற்சி கொடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக மித்ரன் கூறினார். அந்த ஐடியா அவ்வளவு ஸ்டன்னிங்காக இருந்தது. அந்த ஐடியா அதிக ஆர்வமாக இருந்தது. ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நீங்கள் ஸ்கிரிப்ட் எழுதுங்கள் என்று கூறினேன். ஒரு ஸ்கிரிப்ட் எழுதினார். இரண்டு மூன்று வெர்சன் போயிட்டு வந்தது. 

 

மறுபடியும் என்னை அவர் சந்தித்தபோது, சார் இரட்டை வேடக் கதையாக மாறியுள்ளது. அண்ணா ‘அயன்’ என்ற படத்தில் நிறைய லுக் பண்ணிருக்கார். ஆனால், எனக்கு இந்த சர்தார் படத்தில் லுக் அமைந்துள்ளது. என்னுடைய கரியரில் மிக முக்கியமானப் படமாக இதைப் பார்க்கிறேன். இந்த மாதிரியான லுக்ஸ் எப்படி பண்ணுகிறார்கள், எதுக்காக பண்ணுகிறார்கள் என்பதுதான் அந்த லுக்ஸுக்கு மரியாதை. 

 

நமது ஊர், நமது மண்ணில் இருந்து வந்த ஒருவர் எப்படி சிந்திப்பார்கள். அவர் எப்படி ஆப்ரேட் செய்திருப்பார்? என்ன பிரச்சனைக்காக உள்ளே இறங்கிருப்பார்?, அவர் எடுத்துக்கிட்ட விசயம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. அதை ரியலாக எப்படி பண்ண முடியும்? என்பதற்காகத் தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. இவ்வளவு வருட அனுபவத்தையும் பரிசோதிக்கும் கதாபாத்திரமாக சர்தார் அமைந்தது. 

 

நடிகர் சங்கத்திற்காக லைலாவிடம் ஒருமுறை பேசியுள்ளேன். அவர் அப்படியே இருக்கிறார். பிதாமகனில் பார்த்த கேரக்டராகவே இன்னும் அதே போலவே இருக்கிறார். அவர் உடனே சரி என்று சொன்னது படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. சராசரி வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட விசயமாக காண்பிக்க வேண்டியிருக்கிறது. அதுவும், இன்டலிஜென்டாக இருக்க வேண்டும்; அதற்கு நிறைய மெனக்கெடல் இருந்தது. என்னுடைய கரியரில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லக்‌ஷ்மனுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு கார்த்தி பேசினார்.

 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.