Skip to main content

பிரசாந்த் கிஷோர் தேவை இல்லை! ஐ-பேக்கிற்கு எதிராகக் கச்சைக்கட்டிய திமுக மா.செ.! 

Published on 21/05/2020 | Edited on 21/05/2020


 

i pac prashant kishore dmk party leaders mk stalin


திமுகவின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.கே.வின் ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. அன்பழகனின் அதிரடி பேச்சுதான் தி.மு.க.வில் இப்போது ஹை-லைட்டாக இருக்கிறது. 
 


’ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தின் மூலம் நடக்கும் நிவாரணப் பணிகள் குறித்தும்,  கரோனாவை தடுப்பதில் தி.மு.க.வினரின் பங்களிப்பு குறித்தும் திமுக மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின். அப்போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக முடித்ததையும், என்னென்ன பிரச்சனைகள் இருந்தது; அதனை எப்படிச் சரி செய்தோம் எனவும் விவரித்தார்கள். 

மற்றபடி, நிவாரணம் வழங்குவதில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஸ்டாலினிடம் அவர்கள் விவரிக்கவில்லை. குறிப்பாக, பி.கே.வின் ஐ-பேக் நிறுவன தரப்பிலிருந்து தரப்படும் நெருக்கடிகளை அவர்கள் தெரிவிக்க அச்சப்பட்டனர். இந்த நிலையில்தான், ஜெ.அன்பழகனின் பேச்சு தி.மு.க. மா.செ.க்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

பொதுவாக, தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் என்றாலே அதிரடியாகப் பேசுபவர் ஜெ.அன்பழகன். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி பழகியவர். கலைஞர் உயிரோடு இருந்தபோது அவர் கொடுத்த சுதந்திரம்தான் அன்பழகனை வெளிப்படையாகப் பிரச்சனைகளைப் பேச வைத்தது. அதனை இப்போது வரை கடைப்பிடித்து வருகிறார். 
 

i pac prashant kishore dmk party leaders mk stalin


மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ’’தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அல்லது 2021-இல் தேர்தல் வந்தாலும் தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும். நீங்கள்தான் (ஸ்டாலின்) முதல்வர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தி.மு.க.வின் உழைப்பு, தி.மு.க. மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஆகியவைகள் அனைத்தும் தி.மு.க.வை இயல்பாகவே ஜெயிக்க வைக்கும். இன்னும் சொல்லப்போனால் கூட்டணி இல்லாமலே தி.மு.க.வால் ஜெயிக்க முடியும். 
 


அப்படியிருக்கும் போது, நம்மை ஜெயிக்க வைக்க ஐ-பேக் என்கிற கம்பெனி எதுக்கு? தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் சொல்ல ஒரு நிறுவனம் நமக்குத் தேவையா? மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது; அவர்கள் உங்களை முதல்வராக்க முடிவு செய்து விட்டனர். ஐ-பேக் நிறுவனத்தால் தி.மு.க.வுக்கு லாபமில்லை. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்திருக்கும் நிலையில், அந்த வெற்றியில் ஐ-பேக் குளிர் காய நினைக்கிறது. 

அந்தக் கம்பெனி உங்ளுக்கு வேலை செய்யட்டும்; எங்களுக்கு வேண்டாம். நான் அரசியலுக்கு வந்த போது பிறக்காத சின்னச் சின்ன பொடியன்கள் எல்லாம் என்னிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள். இது சரியில்லை. மனதில் பட்டதையும் இருக்கும் சூழலையும் வெளிப்படையாகப் பேசுகிறேன். என்னுடைய ஆதங்கம் போல, எல்லா மா.செ.க்களுக்கும் இருக்கிறது. அவர்களுக்குப் பேசுவதற்குத் தைரியம் இல்லை. நான் பேசுகிறேன். 

மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களோடு நெருக்கமாக இருக்கும் கட்சி தான் திமுக. மக்களுக்காக நாம் அரசியல் கட்சி நடத்துகிறோம். கம்பெனி நடத்தவில்லை. கம்பெனிகளுக்குத்தான் ஆலோசனை சொல்ல டீம் வேண்டும்? நமக்கு எதற்கு?’’ என மிக அதிரடியாகப் பேசினார் ஜெ.அன்பழகன். அவருடைய பேச்சில் மா.செ.க்கள் எல்லோரும் மகிழ்ந்து போனார்கள். தங்களால் பேச முடியாததை அன்பழகன் வழியாகப் பலரும் பேச வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி. 
 

http://onelink.to/nknapp


அன்பழகனின் பேச்சைக் கவனமாகக் கவனித்த மு.க.ஸ்டாலின், இறுதியாக பேசிய போது, ’’ஐ.பேக் நிறுவனம் நம் கட்சி சீனியர்களையோ நிர்வாகிகளையோ வழி நடத்தாது என்பதை பல முறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் என்னிடம் மட்டும்தான் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். கட்சி நிர்வாகத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள்’’ என  உறுதி தந்திருக்கிறார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.