Skip to main content

'கண்டக்டர்' முதல் 'காம்ரேட்' வரை! - தோழர் நன்மாறனின் பயணம்!

Published on 28/10/2021 | Edited on 29/10/2021

 

History of Ex Mla Nanmarans Life

 

எளிமையான ஆளுமைகளுக்கு எல்லாம் முகவரி தருவது மரணம் மட்டுமே. அப்படி, மரணம் அறிமுகப்படுத்தி வைத்துள்ள புதிய ஆளுமை நன்மாறன்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான நன்மாறன், உடல்நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் காலமாகியுள்ளார். இரண்டு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ஒருவரின் மரணம், அரசு மருத்துவமனையில் நிகழ்வது என்பது, அரசியல் அதிசயம். காலமெல்லாம் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த நன்மாறன், தனி வீட்டில் குடியேற நினைத்தார். ஆனால், அந்த எண்ணம் இறுதிவரை கைகூடவே இல்லை.


சாதாரண குடும்பத்தில் பிறந்த நன்மாறன், 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கண்டக்டராக சில காலம் பணியாற்றினார். பிறகு, மார்க்ஸிய சிந்தனையில் ஏற்பட்ட ஈடுபாட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார். 1968-ல் தொடங்கிய நன்மாறனின் அரசியல் பயணம், 2021 வரை தொடர்ந்துள்ளது. கடந்த 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில், மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட நன்மாறன், மகத்தான வெற்றியைப் பெற்றார். தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் ஆளுமைகளுடனும் தொடர்பில் இருந்த நன்மாறன், அவர்களிடம் இருந்து எந்த உதவியையும் வாழ்நாள் இறுதிவரை கேட்டதேயில்லை. இவர் எம்.எல்.ஏ.-வாக இருந்த காலகட்டத்தில்தான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உருவாக்கப்பட்டது. அதில், இவரின் பங்கு மகத்தானது.

History of Ex Mla Nanmarans Life


அரசியல் என்ற சிமிழுக்குள் மட்டும் நன்மாறனை அடைப்பது சாத்தியமற்ற ஒன்று. மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர், குழந்தைக் கவிஞர், கதை சொல்லி எனப் பன்முகம் கொண்டவர். நகைச்சுவையுடன் முற்போக்கு கருத்துகளைத் தூவிச்செல்லும் 'மேடை கலைவாணர்' அவர். சங்க இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம்கொண்ட நன்மாறன், மாபொசி, கலைஞர், குன்றக்குடி அடிகளார் போன்றோரின் பேச்சுக்கு எப்போதும் ரசிகனாக இருந்தவர். நூலகத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்த புத்தகப் பறவையாகவே இறுதி மூச்சு வரை இருந்துவந்தார்.


ஒருமுறை கட்சி நிகழ்ச்சிக்காகப் பேருந்தில் புறப்பட்ட நன்மாறன், தவறுதலாக ஒற்றைக் கால் செருப்பைத் தவறவிட்டுள்ளார். 'ஐயா.. ஒரு நிமிஷம் பஸ்ஸ நிப்பாட்டுறீங்களா.. என் செருப்பு கீழ விழுந்துட்டு..' என கண்டக்டரிடம் கேட்டுவிட்டு, கீழே இறங்கி செருப்பைத் தேடியுள்ளார். அவரின் செருப்பு மிக நீண்ட தூரத்தில் கிடந்துள்ளது. அதனை எடுக்கச் சென்றுள்ளார் நன்மாறன். அதற்குள் ஒரு ஆட்டோ டிரைவர் அவரை வழிமறித்து, 'ஐயா எங்க போறீங்க..?' எனக் கேட்டுள்ளார். 'நான் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் போறேன்பா..' எனக் கூறிய அவர், பஸ்ஸை நோக்கி நடையைக் கட்டியுள்ளார். இடைமறித்த ஆட்டோ டிரைவர், 'வாங்க ஆட்டோவுல போகலாம்..' எனக் கூறியுள்ளார். 'ஆட்டோவுல வரலாம்.. ஆனா என் கிட்ட வெறும் 20 ரூபா தான் இருக்குப்பா..' என வெகுளித்தனத்துடன் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரோ, 'அட வாங்கய்யா.. போகலாம்..' என அழைத்துச் சென்றுள்ளார். பின்னாளில், இந்தச் சம்பவத்தை வியந்து எழுதிய ஆட்டோ டிரைவரால்தான் இது வெளியே தெரியவந்தது.

 

History of Ex Mla Nanmarans Life

 

மேற்சொன்ன விவகாரம், அவர் பதவியில் இல்லாதபோது நடந்த ஒன்று. அவர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒருமுறை பேருந்துக்காக காத்திருந்த நன்மாறனுக்கு பசி எடுத்துள்ளது. அருகில் இருந்த டீ கடைக்குச் சென்று டீ குடிக்க விரும்பியுள்ளார். ஆனால், பாக்கெட் காலியாக இருந்துள்ளது. கையில் பணமில்லாமல், எப்படி டீ குடிப்பது எனத் தயங்கியபடியே நின்றுகொண்டு இருந்துள்ளார். அந்த டீக்கடையின் வாசலிலேயே சுமார் ஒரு மணிநேரமாக தயக்கத்துடன் காத்திருந்துள்ளார் அந்த எம்எல்ஏ. அப்போது அந்த வழியாக வந்த கட்சித் தோழர் ஒருவரிடம், 'தோழர்.. டீ குடிக்கணும் போல இருக்குது. கையில காசு இல்ல' என அப்பாவியாகக் கேட்டுள்ளார்.


இதனால், பதறித் துடித்துப் போன அந்த கட்சித் தோழர், ஐயா என்ன இப்படி கேட்டுட்டீங்க.. வாங்க டீக்கடைக்கு" என அவரை உள்ளே அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்துள்ளார். பிறகு, டீக்கடைக்காரரை பார்த்து.. "அண்ணே.. ஐயாட்டபோய் காசு கேக்குறீங்களே.." எனச் சின்னதாகக் கோபப்பட்டுள்ளார். அதற்கு டீக்கடைக்காரரோ... "சார் என்ன இப்டி சொல்றீங்க.. நான் போய் ஐயாகிட்ட காசு கேட்பேனா.." அவரு யாருக்காகவோ காத்திருக்கிறார் என நினைத்தேன்" என அவர்களிடம் பணமே வாங்காமல் வழியனுப்பி வைத்துள்ளார். அப்போது அவர் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

History of Ex Mla Nanmarans Life


அதைப்போலவே ஒருமுறை கட்சித் தோழர்களுடன் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார் நன்மாறன். அப்போது, அவருக்கு எதிரில் ஒரு வடமாநில இளைஞர் வந்தமர்ந்துள்ளார். அவர் கால் மீது கால் போட்டு அமர்ந்துள்ளார். அப்போது, எதிரே அமர்ந்திருந்த நன்மாறன் மீது கால் பட்டுவிட்டது. பதறிவிட்டனர் அவருடன் இருந்த தோழர்கள். அவருடன் சண்டைக்குப் போய்விட்டனர். "விடுங்கப்பா... அந்த பையனுக்கு தெரிஞ்சா பண்ணான்.. தெரியாமதான பண்ணான் விடுங்க.." எனச் சொல்லிக்கொண்டே தனது வேட்டியில் இருந்த மண்ணைத் தட்டிவிட்டுள்ளார் அந்தப் பண்பாளர்.


இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், அரசு வழங்கிய ஊதியத்தைக் கட்சிப் பணிகளுக்கே கொடுத்துவிட்டார். பதிலுக்கு, கட்சி கொடுத்த ரூ12,000 ரூபாயில்தான் குடும்பம் நடத்தி வந்தார் நன்மாறன். மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் இறுதிவரை, 6000 ரூபாய் வாடகைக்கு வசித்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம், மதுரை ஆட்சியரைச் சந்தித்த நன்மாறன் ஒரு மனு கொடுத்தார். அதில், ஏழை எளிய மக்களுக்காகக் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படுகிற வீடுகளில் ஒன்றைத் தமக்கு ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். ஒட்டுமொத்த தமிழகமுமே இப்போதுதான் இவரைத் திரும்பிப் பார்த்தது. இப்படி ஒரு எம்.எல்.ஏ.-வாக வாழ முடியுமா எனப் பலரும் வேதனைக் குரல் எழுப்பினர்.

 

​  History of Ex Mla Nanmarans Life [Click and drag to move] ​


72 வயதிலும் துடிப்புடன் கட்சிப் பணி ஆற்றி வந்த நன்மாறன், நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று (28.10.2021) மாலை மரணமடைந்துள்ளார். நன்மாறனின் மரணத்திற்குக் கட்சி கடந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எளிமையின் தூதுவராக வாழ்ந்து வந்த தோழர் நன்மாறனின் புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

 

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.