Skip to main content

தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தவர்!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இதுவரை தி.மு.க. ஏழு முறையும், அ.தி.மு.க. ஆறு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆர்.பி.மருதராஜ் 4,62,693 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தி.மு.க.வின் சீமானூர் பிரபு 2,49,645 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 2,38,887 வாக்குகள் பெற்று, தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தார். 

தற்போது தி.மு.க. கூட்டணியில் பாரிவேந்தர் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களிடையே பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, "நலத்திட்ட உதவிகளுக்காக அரசு பணத்தை மட்டும் நம்பியிருக்காமல், என் சொந்தப் பணத்தையும் தொகுதிக்காக செலவுசெய்வேன். வெற்றி கிடைக்காவிட்டாலும் இது உறுதி. சென்றமுறை அதிக வாக்குகள் கொடுத்த மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு வாசனை திரவிய ஆலை, கலை அறிவியல் கல்லூரி கொண்டுவருவேன்'’என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி கவர் செய்கிறார். 

 

parivendar



மேலும், "நான் ஜெயிச்ச பிறகு ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா இலவச கல்வி, ஆண்டுக்கு 300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன். பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, விவசாய விளைபொருட்களை நியாயமான விலைக்கு எஸ்.ஆர்.எம். நிறுவனமே கொள்முதல் செய்யும்'' என தொகுதி முழுக்க வாக்குறுதிகளாலேயே அதிக கவனம் பெறுகிறார் பாரிவேந்தர். "லால்குடி, புள்ளம்பாடி பகுதியில்தான் என் மூதாதையர்கள் வாழ்ந்தனர். என் குலதெய்வம் கல்லக்குடியை அடுத்த மால்வாய் கிராமத்தில்தான் உள்ளது'' என்று சென்ட்டிமெண்டாக பேசி கவரவும் தவறவில்லை. 

 

parivendar



அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சிவபதி, வெற்றிபெற்று எம்.பி.யாகி விட்டதுபோன்ற தோரணையிலேயே தொகுதிக்குள் வலம்வருகிறார். இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்திரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் தெம்பில் இருக்கிறார். இதே சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட பலரும் சீட்டுக்கு அடிபோட்டும், எடப்பாடியுடன் நெருங்கிப் பழகுபவர் மற்றும் செலவு செய்வார் என்பதாலும் சிவபதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக செலவு செய்வதில் சுணக்கம் காட்டுவதால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே சோர்வைக் காணமுடிகிறது. 

 

sivapathi



வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கும் முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைவர் ஆர்.விஸ்வநாதன் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கே ஆதரவு தருவார். இந்தமுறையும் அதே மனநிலையில் இருந்தவர், தனது எதிர் குரூப்பான செல்வகுமாரை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்குக் கூட்டிச்சென்றதால் கடுப்பாகி விட்டார். இதனால், தனது பங்காளியும் அ.ம.மு.க. வேட்பாளருமான ராஜசேகரனுக்கே ஆதரவளிப்பதாக தெரிவித்துவிட்டார். இது அ.தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க.வுக்கும் பின்னடைவு என்பதால், முத்தரையர் ஓட்டு யாருக்கு என்கிற போட்டா போட்டி பெரம்பலூரில் நிலவுகிறது. 

இந்த விஷயங்களை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட எடப்பாடி, "சீட்டு வாங்குறது மட்டும் முக்கியமில்லை. ஜெயிச்சும் காட்டணும்'’என சிவபதியைக் கடிந்துகொண்டாராம். இதற்கிடையே தெய்வபக்தியில் அதீத நாட்டம் கொண்டவரான சிவபதி, கூகூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே "உங்களுக்கு வெற்றி உறுதி' என்று பூசாரி சொன்னதால் முகமலர்ச்சியுடன் இருக்கிறார் சிவபதி. 

அ.ம.மு.க. வேட்பாளரான ராஜசேகர், சென்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 31,998 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்தமுறை முத்தரையர் சமுதாயத்தின் ஆர்.வி. ஆதரவு இருப்பதால், தொகுதிக்கு 90 ஆயிரம் வாக்குகள் வீதம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கிடைக்கும்; நமக்கே வெற்றி என்ற கணக்கில் வலம்வருகிறார். "வெற்றி பெற்றதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி என எல்லோரையும் கைது செய்து ஜெயிலில் தள்ளுவதுதான் முதல் வேலை' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 

பாரிவேந்தரும் அவரது தேர்தல் ரதத்தை ஓட்டும் தி.மு.க. மா.செ. நேருவும் படு ஸ்பீடாக இருக்கிறார்கள். 
 

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.