Skip to main content

நெருக்கடி காலமும் தொழுகையும்!- இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020


ஐம்பெருங் கடமைகளில் தலையானது தொழுகை என்று சொல்லும் இஸ்லாம் மார்க்கம், இஸ்லாமிய  ஆண்கள் பள்ளி வாசல்களில் தவறாமல் கூட்டுத் தொழுவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. கரோனாவின் பகீர்  நெருக்கடியில் உலகமே சிக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதற்கு ஏது சாத்தியம்?  முடக்கம், 144 உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு நடுவில் இதை எல்லாம் எப்படி இஸ்லாமியர்களால் பின்பற்ற முடியும்? பள்ளிவாசல்களுக்கு வருவது கட்டாயமல்ல என்று சில அமைப்புகள் அறிவித்த  நிலையிலும், பலரிடம்  இது குறித்த குழப்பம் நீடிக்கிறது. 
 

இது குறித்த சந்தேகங்களை த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனியிடம் வைத்தோம். அவற்றிற்குச் சற்று விரிவாகவே பதிலளித்தார் அவர்... 

”பள்ளிவாசல்களில் ஐவேளைக் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவது என்பது முஸ்லீம் ஆண்களுக்குக் கட்டாயக் கடமைதான். பெண்களைப் பொருத்தவரை, இது கட்டாயமில்லை. அது அவர்களின் விருப்புரிமை சார்ந்தது என்று இதில் பெண்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது இஸ்லாம். 
 

கரோனா பரவிவரும்  இதுபோன்ற நெருக்கடி காலத்தில் கூட்டுத் தொழுகைக்கும் ஐவேளைத் தொழுகைக்கும் சலுகை அளித்திருக்கிறது இஸ்லாம்.  நெருக்கடியான நேரங்களில் ஐந்து வேளைத் தொழுகையை இரண்டு வேளையாக சுருக்கிக் கொள்ளலாம். அதேபோல் கூட்டுத் தொழுகையையும்  தவிர்க்கலாம். இப்போதுள்ள நெருக்கடியில் கூட்டுத் தொழுகையைக்   தவிர்க்க வேண்டும்  என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.  இதை உணராமல்,  முரட்டுபக்தி கொண்டு, உயிரே போனாலும் இறைவனுக்காக நான் பள்ளிவாசல் சென்று தொழுதே தீருவேன் என்று எவரேனும் அடம்பிடித்தால் அதற்கு  இஸ்லாத்தில்  இடமில்லை. 

 

tm


 

ஒருவருக்கு பசியில் உயிர் போகிற நிலை என்ற ஒன்று வந்தால், இஸ்லாம் மார்க்கம் தடுத்துள்ள உணவைக் கூட  அவர் உண்ண அனுமதி உண்டு. ஏனெனில் மனித உயிர்களின் மதிப்பை அறிந்த மார்க்கம் இஸ்லாம்.


 அதேபோல், கொள்ளை நோய் காலத்தில் அது உருவான ஊரில் உள்ளோர் அவ்வூரிலிருந்து வெளியேறுவதும், வெளியூரில் உள்ளோர் அவ்வூருக்குச்  செல்வதும்  கூடாது என,  நபிகள் நாயகம் தடைசெய்துள்ளார். 
 

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை இதன் மூலம் அவர் போதித்திருக்கிறார் என்றால், அவரது அறிவியல் பார்வையை  எவ்வளவு உயர்வானது என்பது  புரியும். அதைத்தான் இன்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்திவருகிறது.” என்றவர், கரோனா தொற்றைத் தடுக்க கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி இப்போது சுகாதாரத்துரையால் அரிவுருத்தப்படுவதைச் சுட்டிகாட்டிவிட்டு...




”பரிசுத்தம் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்கிறது இஸ்லாம் மார்க்கம் . உடல் சுத்தம், உடை சுத்தம், உறைவிட சுத்தம் உள்ளிட்ட புறத்தூய்மையும், உள்ளத்தின் சுத்தம் என்னும் அகத்தூய்மையும் கலந்ததே இஸ்லாமாகும்.  
 

புறந்தூய்மை நீரான் அமையும். அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்ற அய்யன் திருவள்ளுவரின் நெறியை அண்ணல் நபியின் அழகிய வாழ்க்கை முறையில் காணமுடியும்.  பள்ளிவாசலுக்குள் நுழையும் முன்பே  உடல் தூய்மை செய்த பிறகுதான் உள் நுழைய முடியும். 1,400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் நடைமுறைப்படுத்திய இந்த வாழ்க்கை முறை, இன்றைய அறிவியலும் எதிரொலிப்பது சிந்திக்கத்தக்கது.


 ஐவேளைத் தொழுகைக்கு முன் முழங்கை, கைகள்,  நாசி,  மூக்குத் துளைகள்,  என முகத்தையும்,  கணுக்கால் வரை இரு பாதங்களையும் தூய்மை செய்திட வேண்டும். தலையையும் ஈரக் கையால் துடைத்து விட வேண்டும் . இது  இஸ்லாமிய நீதியாகும்.  

 

இப்போது சுத்தம்தானே  கோவியட் -9  என்ற கரோனா கிருமிக்கு எதிரான யுத்தமாக ஆகி இருக்கிறது. இக்காலத்தில் வீடுகளிலும் அல்லது இருக்கும் இடங்களிலும் தனியாகவோ கூட்டாகவோ தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.  புனித மக்கா மதினா, பள்ளிவாசல்களில், அவற்றின்  உள் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. சவுதி, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
 

எனவே தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் நலன் கருதி பள்ளிவாசலில் கூட்டுத்  தொழுகைகளை தற்காலிகமாக தள்ளி வைக்கவேண்டும்.  ஜமாத் உலமா உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் கூட்டமைப்புகளும் இதையே சொல்கின்றன. இறை வழிபாடு என்பது இடம் சார்ந்தது மட்டுமல்ல. இதயங்களைச் சார்ந்ததும் கூட.  பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாத இதுபோன்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும்  நிலையில், எல்லா நாளும் தொழுகையை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள்,  இருக்கும் இடத்திலேயே இறைவனை வணங்குவது தவறல்ல. 
 

பயண காலத்திலும், போர்க்களத்திலும் தொழுகையில் மார்க்கம் சில சலுகைகளை வழங்கியுள்ளது. எனவே இப்படிப்பட்ட காலத்தில் இல்லத்தில் இருந்து தொழு வேண்டும்” என்கிறார் ஹாஜாகனி.
 

 

 


 

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.