Skip to main content

''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்! ஆன்லைன் அவஸ்தை!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
work from home

 

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளர்கள் படும் துயரங்கள் குறித்து, கடந்த வாரம் நக்கீரன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அது தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தக் கட்டுரையை படித்த வாசகர்கள் பலரும், தங்களின் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா காலத்தில், அது எளிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது, வலிமையான சக்திகள் எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

 

தொழில் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் கொரோனா மூலம் லாபம் பார்க்கின்றன என்று விவரிக்கும் ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேஷ், ""ஐ.டி ஊழியர்களுக்கும் இது சோதனைக் காலம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை செய்வார்கள். ஆனால் தற்போது இந்த ஊரடங்கில் தங்களின் வேலையை நிலைநிறுத்திக் கொள்ளவே அதிகநேரம் அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் நல சட்டம் ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது உழைக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால், ஒவ்வொரு மணி நேரமும் உயர்அதிகாரி தொலைபேசியில் "என்ன நடக்கிறது? வேலை முடிந்ததா?' என்று சோதனை செய்துகொண்டே இருப்பார். இதனால் அவர்கள் பயந்து கண்கொத்திப் பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

திடீர் திடீரென மீட்டிங் போடுவார் உயர் அதிகாரி. அதனால் அவர்களால் சரியான நேரத்தில் உணவுகூட உண்ண முடிவதில்லை. அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறார்கள். குறிப்பாக டார்கெட் முடிக்கவில்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்கு வதால் உடலும் அவர்கள் இருப்பிடமும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க வீட்டில் குளிர்சாதனக் கருவி பொருத்தவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவைக் கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை. ஆனால் ஊழியர்களுக்காக நிறுவனம் அளிக்கும் வாகன சேவை, அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் போன்ற பல செலவுகள் நிறுவனத் தரப்புக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் அதிகரித்துள்ளது'' என்று பட்டியலிடுகிறார்.

 

wfhஇந்த நிலை குறித்து தனியார் நிறுவன மனிதவள அதிகாரி ராஜராஜன் சொல்லும் போது...“""தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் எங்களது நிறுவனம் அடுத்த வருடம் முதல், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையைக் கையாளுவது என்று திட்டமிட்டுள்ளோம் கொரோனா காலத்தில் எங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்களை நாங்கள் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வீட்டிலிருந்து எங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் பல தனிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மின்சாரத் துண்டிப்பு, உடல் ரீதியான பிரச்சனைகள் என. குறிப்பாக, ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பதால் இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அவர்களால் வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படியான தனிப்பட்ட காரணங்களை எங்களின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் போது தான் இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்''’என்கிறார் ஆன்லைன் வேலைகளின் எதார்த்தத்தை உணர்ந்தவராய்.

 

சமீபத்தில் "லிங்க் டு இன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாக'த் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் "இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்' என்று கூறியுள்ளனர். "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக' 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, "இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக' 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை (ஒர்க் ஃப்ரம் ஹோம்) விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழுமனதுடன் முழுவீச்சுடன் வேலைபார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகிறதாம். அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இப்படி பல காரணங்களால், "போதுமடா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.

 

இவர்களின் கவலைகலந்த எதிர்பார்ப்பிற்கு எப்போது கொரோனா முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதோ?

 

-சேகுவேரா

 

 

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.