Skip to main content

பாலியல் புகார்களை விசாரிப்பவர்கள் மீதே சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு! -குழந்தைகள் நலக்குழும சர்ச்சை!

Published on 17/10/2020 | Edited on 22/10/2020

 

Girls home incident - Child Welfare Group Controversy!

 

 

குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிராக மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ தீங்கு விளைவித்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதோடு அவர்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள சி.டபுள்யூ.சி எனப்படும் குழந்தைகள் நலக் குழுமத்தின் அதிகாரிகள் மீதே, பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் அம்பலமானதோடு தமிழகம் முழுக்க உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தின் நிலமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

 

அடிக்கடி சிறுமியை சந்தித்த ஆண் உறுப்பினர்!

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது சிறுமி தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

 

தனது அம்மா வானதி (சிறுமியின் நலன் கருதி அம்மாவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) தன்னை இரண்டாவது கணவனுக்கே திருமணம் செய்துவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று சைல்டுலைன் என்கிற என்.ஜி.ஓ தொலைபேசி எண் 1098 மூலம் பகீர் புகாரை கொடுத்தார். இதனால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ (The Protection of Children from Sexual Offences (POCSO) Act) சட்டத்தின்படி அச்சிறுமியின் இரண்டாவது தந்தை அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

 

சிறுமி  தீபிகாவை பாதுகாப்பாக தங்க வைக்க காஞ்சிபுரம் மாவட்ட சி.டபுள்யூ.சி எனப்படும் குழந்தைகள் நலக்குழுமத்தலைவர் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தார்கள். அவரது, வாய்மொழி உத்தரவின்மூலம் தாம்பரம் சானட்டோரியம் அரசு சேவை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டாள் சிறுமி தீபிகா. அதற்குப்பிறகு, சி.டபுள்யூ.சி கமிட்டியின் முன் கொண்டுவந்து விசாரித்து பிறகு அச்சிறுமி, அரசு இல்லத்தில் தங்குவதற்கான ஆர்டரை வழங்கவேண்டும். ஒருவேளை, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி கமிட்டிக்கு வருவதற்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால்  பெண் உறுப்பினருடன் சென்று அச்சிறுமியிடம் விசாரித்து பிறகு,  சிறுமி தங்குவதற்கான ஆர்டரை இல்லத்தினரை வரவழைத்து கொடுக்கலாம். ஆனால், காஞ்சிபுரம் சி.டபுள்.சி உறுப்பினர் தாமோதரன் என்பவர் பெண் உறுப்பினரை அழைத்துச்செல்லாமலேயே தனியாக சென்று சிறுமியை சந்தித்து பேசியதுடன்  சி.டபுள்யூ.சி சீல், ஃபார்ம் எல்லாம் விதிக்குப்புறம்பாக தனது பையிலேயே வைத்துக்கொண்டு ஆர்டரையும் அவரே நேரில் சென்று வழங்கியது விதிக்கு புறம்பானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அடிக்கடி சிறுமியை சந்திக்க சென்றதோடு, தன்னிடம் தவறாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் சிறுமி தீபிகா.

 


சிறுமியை பெற்றோர் மற்றும் சமூகத்தின் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கத்தான் அரசாங்கத்தின் பெற்றோர்களான சி.டபுள்யூ.சியிடம் ஒப்படைக்கிறது போலீஸ். ஆனால், வேலியே பயிரை மேயலாமா என்ற அதிர்ச்சிக் கேள்வி எழும்பியிருக்கிறது. இதற்கிடையே, இவ்வில்லத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை இச்சிறுமி வெளியில் கூறிவிட்டதாலும் சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரன் குறித்து குற்றஞ்சாட்டியதாலும் இல்லத்தின் கண்காணிப்பாளர் மாசிலாமணி, பாதுகாவலர் அலமேலு மற்றும் சி.டபுள்யூ.சி உறுப்பினர்கள் கொடுத்த டார்ச்சரால் சிறுமி தீபிகா இல்லத்தை விட்டு வெளியேறி மூன்று மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், அடிக்கடி கைகளை கீறிக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

வாட்ஸ்-அப் குரூப்பில் சிறுமியின் ஆடியோ!

சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைகள் தொடர்பான வாக்குமூலங்களின் வீடியோக்களையோ, ஆடியோக்களையோ, புகைப்படங்களையோ யாருமே பொதுவெளியில் பகிரக்கூடாது. அப்படியிருக்க, இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சி.டபுள்யூ.சி தமிழ்நாடு’ என்ற வாட்ஸ் அப் குரூப்பிலேயே, சிறுமி பாலியல் ரீதியான புகாருக்கு வாக்குமூலம் கொடுத்த ஆடியோவை காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திலுள்ள உறுப்பினர் பகிர்ந்தது தமிழ்நாடு முழுக்க இருக்கிற 32 மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

 

காரணம், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் தாமோதரன் மீது சிறுமி தீபிகா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதிலிருந்து, தாமோதரனை தப்பிக்க வைக்கவே இந்த ஆடியோ வாக்குமூலத்தை சிறுமி தீபிகாவிடம் வாங்கியிருக்கிறார்கள் சக்திவேல் மற்றும் நிர்மலா உள்ளிட்ட சக உறுப்பினர்கள். மேலும், அந்த ஆடியோவை சக்திவேல் என்கிற உறுப்பினர் பொது வெளியில் பகிர்ந்தது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

டிவிட்டரில் ஷேர் ஆன ஆபாச வீடியோக்கள்!

சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரனின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களும்  வீடியோக்களும் ஷேர் ஆகியுள்ளன.  கமேண்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பாலியல் புகார் மற்றும் இதரப் புகார்கள் குறித்து விசாரிக்கும்  அரசாங்க உறுப்பினரின்  டிவிட்டர் பக்கம் இப்படியிருக்கலாமா? என்று கேள்வி எழுப்புகிறவர்கள்  மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு விதிமீறல்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

குற்றச்சாட்டு-1

‘சைல்டு லைன்’ போலவே மற்றொரு அமைப்பான  ‘சைல்டு ஹெல்ப் டெஸ்க்’ அமைப்பு  மூலம் மீட்கப்பட்ட 14 வயது நாகலாந்து சிறுமியையும் இப்படித்தான் பெண் உறுப்பினரைக்கொண்டு விசாரிக்காமலேயே 2020 மார்ச் 18 ந் தேதி தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கவைத்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவிட்டார்கள். இதனால், வேறு யார் மூலமாவது பாலியல் ரீதியாக அச்சிறுமி துன்புறுத்தப்பட்டாரா என்பதுகூட மறைக்கப்பட்டுவிட்டது.

 

குற்றச்சாட்டு-2

இதேபோல்தான், பெங்களூரிலிருந்து சென்னைக்கு சினிமா ஆசையில் வந்துவிட்டதாக கூறினார் செங்கல்பட்டு டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமி. சினிமா ஆசையில் பெங்களூரிலிருந்து சிறுமி எப்படி யார் மூலம் வந்தார்? அல்லது சினிமா ஆசை கூறி கடத்தப்பட்டவரா? என்பதையெல்லாம் விசாரித்தவர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை எதுவும் செய்யாமல், கர்நாடக மாநில குழந்தைகள் நலக் குழுமத்துக்கும் தெரியப்படுத்தாமல் அவளது பெற்றோரிடமே அனுப்பிவைத்துவிட்டார்கள். இதனால், சிறுமிக்கு என்ன நேர்ந்தது? சிறுமியை ஏமாற்றி அழைத்த; அழைத்துவந்த குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள்.

 

குற்றச்சாட்டு-3

திருமணமாகி  மூன்று  குழந்தைகள் உள்ள கூவத்தூரைச்சேர்ந்த சுரேஷ் என்பவன் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்துலுக்குள்ளாக்கி கர்ப்பமாக்கிவிட்டான். அம்மாவும் இல்லை, அப்பாவும் வேறு திருமணம் செய்துகொண்ட சூழலில், கர்ப்பமான அச்சிறுமியை தங்கவைத்து பிரசவமும் பார்த்து சட்டப்படி பராமரித்து பாதுகாக்கும் அரசின் அனுமதி பெற்ற இல்லங்கள் இருந்தும்கூட அச்சிறுமியை அவர்களது தூரத்து உறவினர் வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள். இரட்டை குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தையை பாதுகாக்கத் தெரியாததால் ஒரு குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்துவிட்டது.

 

இப்படி, குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யவேண்டியவர்களுக்கே குழந்தைகள் நலன் என்றால் என்ன அவர்களை எப்படியெல்லாம் பாதுக்காக்கவேண்டுமென்று அரசு விதிகள் உள்ளன? என்பதெல்லாம் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

குற்றஞ்சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட சி.டபுள்யூ.சி. உறுப்பினர் தாமோதரனைத் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது,  முதலில் உங்களிடம்  நான் ஏன் இதுகுறித்தெல்லாம் விளக்கமளிக்க வேண்டும் என்றெல்லாம் கெத்தாக அதிகார தோரணையில் கேட்டவர் பிறகு தனக்கு தெரிந்த சைபர் நிபுணரையும் வழக்கறிஞரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்களிடம் ஒவ்வொருமுறையும்  ஆலோசித்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார், “சக பெண் உறுப்பினர் குளோரி என்பவர் என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்  சிறுமி  தீபிகாவை அப்படி பேசச்சொல்லி புகார் எழுதி வாங்கிவிட்டார்.

 

இதை, சிறுமி தீபிகாவே எங்கள் கமிட்டி உறுப்பினர்களிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அதுதான், அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பகிரப்பட்டது. அதேபோல், எனது டிவிட்டர் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். இதனால், நான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளேன். ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை எனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 2020 செப்டம்பர்-28 ந் தேதி செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்றவரிடம்,

 

‘உங்களது டிவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்கிறீர்கள். கடைசியாக நீங்கள் டிவிட்டரில் ஷேர் செய்த ஃபோட்டோக்களில் இருக்கும் இளம்பெண் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர். அதாவது, காஞ்சிபுரம் படூர் அருகிலுள்ள பாஞ்சாப் அசோசியேஷன் டெஸ்டிடியூட் ஹோம் ஃபார் சில்ட்ரன் என்கிற இல்லத்திலிருந்து உங்களிடம் குழந்தைகளுக்கான ஆணைகள் வாங்க அடிக்கடி வந்து செல்பவர். அவரது, தனிப்பட்ட புகைப்படம் எப்படி உங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் ஆனது?’ என்று நாம் கேட்டபோது, “அவர், எனது மாணவியும்கூட. அவரது, ஃபோட்டோ எனது செல்ஃபோனில் இருந்தது. அதையும் யாரோ எடுத்து எனது டிவிட்டரில் ஷேர் செய்துவிட்டார்கள்”என்றார்.

 

மற்றொரு சிறுமியும் குற்றச்சாட்டு!

சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரனின் புகார் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணையில்தான் உண்மை வெளிவரும். ஆனால், சிறுமி தீபிகா தாமோதரன் தன்னிடம் நடந்துகொண்டதாக மட்டும் எழுதிக்கொடுக்கவில்லை. இன்னொரு, சிறுமியிடமும் அப்படி தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டி எழுதிக்கொடுத்துள்ளார். யார், அந்த சிறுமி என்று தெரிந்தால் அச்சிறுமியிடமும் தாமோதரன் தரப்பு விசாரணை என்கிற பெயரில் தாமோதரனுக்கு சார்பாக பேசவைத்து வீடியோ எடுத்துவைத்துக்கொள்ளும். அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் அச்சிறுமியும் மாற்றி வாக்குமூலம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள்மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால் காவல்துறையோ அல்லது வேறொரு அமைப்போ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்கிறார்கள்.

 

சி.டபுள்யூ.சி உறுப்பினர் நியமன குளறுபடி!

ஒரு மாவட்டத்திலேயே இப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எப்படியிருக்கும்? குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ‘தோழமை’ அமைப்பின் தலைவர் தேவநேயனிடம் நாம் கேட்டபோது, “குழந்தைகள் நலக்குழுமத்திற்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தில் தமிழ்நாடு முழுக்க நடந்த குளறுபடியும்கூட இதற்கு மிகமுக்கியக் காரணம்” என்கிறவர்,  “குழந்தைகளுடன் பணிசெய்தவர்கள் என்பது வேறு, குழந்தைகளின் உரிமைகளுக்காக பணியாற்றியவர்கள் என்பது வேறு. ஆனால்,  ஆசிரியர்கள், டியூஷன் எடுக்கிறவர்கள், டாக்டர்கள், குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தவர்கள் என குழந்தைகளோடு பணி செய்தவர்கள்தான் குழந்தைகள் நலக்குழுமத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

 

ஜே.ஜே. ஆக்ட் (Juvenile Justice (Care and Protection of Children- Act, 2015) எனப்படும் இளம் சிறார் நீதி சட்டத்தின் கீழ் இரண்டுவிதமான அமைப்புகள் செயல்படுகின்றன. வீட்டைவிட்டு ஓடிவரும் குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழைந்தகள், காணாமல் போய்விடுகிற குழந்தைகள், பெற்றோரின் அரவணைப்பு இல்லாத  என அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படுகின்ற குழந்தைகளுக்கு சி.டபுள்யூ.சி (Child Welfare Committee) எனப்படும்  குழந்தைகள் நலக்குழுமம் செயல்படுகிறது.  

 

மற்றொன்று, சட்டத்துக்கு முரணான செயல் செய்யப்பட்டதாக கருதப்படும் குழந்தைகள். இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஜே.ஜே. போர்டு ( Juvenile Justice Board ) எனப்படும்  இளம் சிறார் நீதிக்குழுமம். காவல்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்கூட தங்களது சீறுடையில் வரக்கூடாது. காரணம், ஒரு குழந்தையை திருடன், திருடி, கொலைகாரன், கொலைகாரி என்று சொல்லிவிட்டால் எதிர்காலத்தில் வாழ்நாள் முழுக்க அப்படி மாறிவிடும்  என்பதால்தான் நீதிமன்றம்போல் விசாரிக்காமல் குழுவாக அமர்ந்து பேசுவார்கள். இச்சிறுவர்களை தங்கவைக்கும் இடத்தை சிறுவர் ஜெயில் என்றெல்லாம் சொல்லக்கூடாது. கூர்நோக்கு இல்லம், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி என்றுதான் அழைக்கவேண்டும்.

 

இப்படிப்பட்ட குழுமங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்களை அரசாங்கம் தேர்வுசெய்யவேண்டும்? ஆனால், ஆள் தேர்வில் சமூக நலத்துறை முழுமையாக கவனம் செலுத்தாததன் விளைவுதான் அவர்கள்மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்புகின்றன.

 

இரட்டைச்சம்பள மோசடி!

ஒரு உறுப்பினருக்கு ஒருநாளைக்கு 1500 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் என்றால் ஒருநாளைக்கு, 7,500 ரூபாய். மாதத்தில் 20 நாட்கள் என்று  கணக்கிட்டால் 30,000 ரூபாய்.  32 மாவட்டங்களுக்கு ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சிறப்பூதியமாக 1 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. எல்லா, நாட்களிலும் 5 உறுப்பினர்கள் ஒன்றாக அமர்வதில்லை. அமராமலேயே, ஊதியம் பெற்றுக்கொள்வார்கள். ஒரு சில, குழுமத்தில் ஒருவர் உட்கார்ந்துவிட்டு மற்ற நான்கு பேருக்கு ஊதியம் எடுத்துக்கொள்வதெல்லாம் நடக்கிறது.  இதில், பெரும்பாலனவர்கள் வேறொரு இடத்தில் பணியில் இருந்துகொண்டு சம்பளம் வாங்கிக்கொண்டே இந்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பணிகளிலும் ஈடுபடமுடியும்?

 

பயிற்சியே இல்லாத சி.டபுள்யூ.சி உறுப்பினர்கள்!

கணவன், மனைவி இரண்டு பேருக்கெல்லாம்கூட சி.டபுள்யூ.சி பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதைவிடக்கொடுமை, ஒரு மாவட்ட உறுப்பினர்களாக இருப்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே இருக்கமாட்டார்கள். இளம் சிறார் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய இவர்களுக்கே தங்களது பணிகள் விதிமுறைகள் தெரிவதில்லை. இவர்களுக்கான முழுமையான பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. ஒரே ஒருமுறைதான் பெங்களூரில் பயிற்சி அளிக்கப்பட்டது.  இவர்களை, சமூக பாதுகாப்புத்துறை முறையாக கண்காணிக்கிறதா? மாவட்ட ஆட்சியர்கள் இவர்களிடம் அறிக்கை கேட்கிறார்களா? எத்தனை வழக்குகள் பார்த்தார்கள்? அதில், என்ன தீர்வு கொடுத்தார்கள்? எத்தனை குழந்தைகளின் உரிமைக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினார்கள்? அதற்கான, ஆண்டறிக்கையை எந்த குழந்தைகள் நலக்குழுமமாவது வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்களா?  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தனை பள்ளிக்கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறீர்கள்? இப்படி எதுவுமே செய்யாமல் ஏற்கனவே பாலியல் துன்புறுத்தப்பட்டு வரும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தவா இருக்கிறீர்கள்?” என்று சராமாரியான கேள்விகளை எழுப்புகிறார்.

 

ஆக, சீர்திருத்தப்படவேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல… சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும்  குழந்தைகள் நலக்குழுமமும், இளம் சிறார் நீதிக்குழுமமும்தான்.

 

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.