Skip to main content

கிராமத்தில் பகை வளர்த்த பிளக்ஸ்; வெட்டிச் சாய்க்கப்பட்ட நால்வர்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

four people passes away in tiruvaru on banner issue

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகிலுள்ள கோவிலூர் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கோயில் திருவிழாவில் இரு சமூகத்திற்கிடையே பதாகை வைப்பதில் தொடங்கிய மோதல் அடுத்தடுத்து 4 பேரின் தலைகளைச் சீவுமளவுக்கான கொடூரமாக மாறியுள்ளது.

 

கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் சசிகலா, தினகரனின் உறவினராவார். அ.தி.மு.க. பிரமுகராக இருந்து 2 முறை ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருமுறை ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர். ஜெகனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸுக்கும் கோயிலில் பதாகை வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை நாளடைவில் இருதரப்பு பிரச்சினையானது.

 

இதன் காரணமாக ஜெகன் தரப்பு ராஜேஸை முடிக்கத் திட்டமிட்டு 2015 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கூலிப்படையுடன் ராஜேஸின் மீன் பண்ணைக்குச் சென்று அங்கு படுத்திருந்த நபரை வெட்டிக் குதறியது. அங்கு படுத்திருந்தது ராஜேஸ் தம்பி வீரபாண்டியன். இந்த வழக்கில் அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் ஜெகனின் அண்ணன் மதன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனால் ஊருக்குள் பதற்றம் நிலவிய நிலையில், அதே ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி மதனை வெட்டிப் படுகொலை செய்து பழிக்குப் பழி தீர்த்துக் கொண்டது. இந்த வழக்கில் ராஜேஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஒற்றுமையாக இருந்த அந்த கிராமத்தில் பகை மேலோங்கியது.

 

ஒரே கிராமத்தில் இரு தரப்பினரின் மோதல்களையும், உயிர்ப் பலிகளையும் தவிர்க்க வேண்டும் என்று இரு தரப்பு முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் தலையிட்டு இரு தரப்பிலும் சமாதானம் செய்து வைத்தனர். அதனால் இனி ஊர் அமைதியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

 

அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெகனை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜேஸ் வெற்றி பெற்று மாஜி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் இருந்த ஜெகன் அ.ம.மு.க.வில் இணைந்து மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு வந்தார். முன்பகையோடு தேர்தல் பகையும் சேர்ந்து கொண்டது.

 

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி 22 ஆம் தேதி கிராமத்தினரின் சமாதானத்தையும் மீறி அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டி, தலையைத் தனியாக எடுத்து வந்து மக்கள் அதிகம் கூடும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பிரதான சாலையில் வீசிச் சென்றுவிட்டனர். இந்த வழக்கில் அ.ம.மு.க. பிரமுகரான ஜெகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

 

அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ் கொல்லப்பட்ட பிறகு தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய ஜெகன், சிறையிலிருந்து பிணையில் வந்து தன் தாயாரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். ஜெகன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு ஒருமுறை ரகசியமாக வீட்டிற்கு வந்து தன் தாயாரை பார்த்துவிட்டு உடனே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ஜெகன் தன் தாயாரைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்துவிட்டுச் சென்ற 3வது நாள், 2023 செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் சாலையிலுள்ள அவரது மீன் கடை வாசலில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அடுத்த நாள் ராஜேஸ் அண்ணன் மகேஷ் உள்பட முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

 

“கிராமப் பெரியவர்களின் சமாதானத்தையும் மீறி ராஜேஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் ராஜேஸ் தரப்பினர் 2 ஆண்டுகளாகச் சென்னையில் பதுங்கியிருந்து மீன் கடை நடத்தி வந்த ஜெகனை தேடி வந்து வெட்டிச் சரித்துள்ளனர் என்று கூறும் முத்துப்பேட்டை பகுதியினர், 2015ல் கோயில் பிரச்சனை தொடங்கும் முன்பு ஜெகன் முத்துப்பேட்டை பகுதியில் அ.தி.மு.க.வில் வளர்ந்து வந்த இளம் தலைவராக இருந்தார். பணம், செல்வாக்கு நிறையவே இருந்தது. ஆனால் சாதாரணமாக ஒரு பிளக்ஸ் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று இரு தரப்பிலும் 4 உயிர்கள் பலியாகிவிட்டது. இதில் மதன், ராஜேஸ், ஜெகன் என 3 பேருக்கும் சின்னக் குழந்தைகள் உள்ளதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்