Skip to main content

இது முதலில் சேம்பிள் வீடியோ... ஆதாரம் இருந்ததால்தான் பேசுறோம்... என் பெயர் சர்மிளா! அமைச்சரை குறி வைக்கும் வில்லங்க வீடியோ!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
 Sharmila

 

 

"என் பெயர் சர்மிளா. நான் கேரளாவைச் சேர்ந்தவள். நான் திருமணமானவள். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்ப இந்த வீடியோ பண்ணுறதுக்கு மெயின் காரணமே வந்து உங்கள் தமிழ் மக்களோட எல்லோரோட ஹெல்ப்பும் எனக்கு தேவைப்படுது. ஏன்னா அங்க உங்க தமிழ்நாட்ல அமைச்சராக இருக்கிற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், என்னென்ன பண்ணிருக்காருன்னு ஆதாரங்களுடன் உங்களுக்கு மீடியா முன்னாடி கொண்டு வர்றேன்.

 

இது இரண்டு வருடங்களாக நடக்கும் போராட்டம். அவுங்க என்ன சொல்றாங்கன்னா, இந்த வீடியோ வெளியே வந்தாக்கூட எனக்கு தெரியாது, எனக்கும் அவுங்களுக்கும் உறவு கிடையாது. எனக்கும் அவுங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லுவாங்க. நாங்க ஆதாரம் இருந்ததால்தான் பேசுறோம் உங்க கிட்ட. எல்லோரோட சப்போர்ட் டும் இதுல எனக்கு தேவைப்படுது. இந்த வீடியோ வெளியிடும்போது நீங்க எல்லோரும் எனக்காக சப்போர்ட் பண்ணனும். அதுக்காகத் தான் இந்த வீடியோ. அவுங்க என்னப் பண்ணியிருக்காங்கன்னு டீடெயிலா சொல்றேன். என்னுடைய குடும்பத்தில் அறிமுகம் ஆகிறார்கள். எங்களுக்குள்ள நிறைய வியாபார உறவுகள் இருந்தது. அது என்னென்ன எப்படி என விரிவாக சொல்கிறேன். இது முதலில் சேம்பிள் வீடியோ. இதை தவறாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது.

 

இந்த பரபரப்பான வீடியோ வெளியாகி ஒரு மாதம் ஆகிறது. சர்மிளா, வீடியோவை மட்டும் வெளியிடவில்லை. அவருக்கு ssநெருக்கமான வட்டாரங்களில் சில செய்திகளையும் கசிய விட்டுள்ளார். அதில், அவர் விஜயபாஸ்கர் சில தொலைபேசி எண்களில் என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார். அவர் மொத்தம் 12 தொலைபேசி எண்களை பயன்படுத்துகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நெருக்கமானவள் என்று குறிப்பிட்டதோடு, சர்மிளாவும் விஜயபாஸ்கரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களையும் அவரே வெளியிட்டார்.

 

Sharmila

 

யார் இந்த சர்மிளா என அறிய அவர் குறிப்பிட்டிருந்த எண்கள் விஜயபாஸ்கரின் எண்களா என நாம் சோதனை செய்தோம். அதில் 99621 என ஆரம்பிக்கும் நம்பர் விஜயபாஸ்கரின் தனிப்பட்ட எண் என ட்ரு காலர் எனும் தொலைபேசி எண் காட்டும் செயலி சொல்லியது. 98400ல் ஆரம்பிக்கும் எண் டாக்டர் தேன்மொழி என்பவருக்கு சொந்தமானது என செயலி கூறியது. 63809 என்கிற எண் சரவண ராஜா என்பவரின் பெயரை காட்டியது. மற்ற இரண்டு எண்களும் செயல்படாத நிலையில் இருக்க 63809 எண் மட்டும் செயல்பட்டது. அந்த போனை எடுத்தவர், மெல்லிய குரலில் முதலில் பேசினார். அவரிடம் நாம், "நக்கீரனில் இருந்து பேசுகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம். சர்மிளா என்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த எண்ணில் இருந்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார் என கூறுகிறார். யார் இந்த சர்மிளா? அவர் ஏன் இந்த எண்ணைக் குறிப்பிட வேண்டும்'' என்று கேட்டோம்.

 

சன்னமான குரலிலிருந்து தெளிவாக பேச ஆரம்பித்த அவர், "சார் நீங்கள் நக்கீரன் என்பதால் பேசுகிறேன். சரவண ராஜா என்பவர் என்னுடைய மேனேஜர், என் பெயர் டாக்டர் ஸ்ரீதர்'' என்றார். "நானும் விஜயபாஸ்கரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1990ம் ஆண்டு ஒரே அறையில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்தோம்'' என்றார். சர்மிளா இந்த நம்பர் பற்றி குறிப்பிடுகிறாரே, அவரைத் தெரியுமா எனக் கேட்டோம். "எனக்கு அவரை நன்றாகத் தெரியும், எனக்கு மட்டுமல்ல என் நண்பர்கள் பத்து பேருக்கும் அவரை நன்றாக தெரியும்'' என்றார்.

 

 

vijaybaskar


அவருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அறிமுகம் உள்ளதா எனக் கேட்டோம். "விஜயபாஸ்கரை சர்மிளா சந்தித்திருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் உண்டு'' என ஒத்துக்கொண்டார். மேலும், "சர்மிளா என்னைத் தேடி வந்தார். இந்த எண் மூலம் விஜயபாஸ்கர் அவரை தொடர்பு கொண்டதாகக் கூறி என்னிடம் வந்து, விஜயபாஸ்கர் மேல் புகார்களை கூறினார்'' என்றார். எதற்காக அமைச்சர் மீது ஒரு பெண் புகார் கூறுகிறார் எனத் திரும்பவும் கேட்டோம். உங்கள் எண்ணில் இருந்து விஜயபாஸ்கர் சர்மிளாவை தொடர்பு கொண்டு பேசினார் என்பது உண்மையா? பொய் என்றால் நீங்கள் ஏன் சர்மிளா மேல் புகார் கொடுக்கக் கூடாது எனக் கேட்டோம்.

 

அதற்கு அவர், "சர்மிளா விஜய பாஸ்கரை நான் கிழித்துவிடுவேன், அம்பலப்படுத்துவேன், அசிங்கப்படுத்துவேன் எனக் கூறி வந்தார். நான் மட்டுமல்ல விஜயபாஸ்கருக்கு நெருக்கமான பத்து நண்பர்களின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு 10 பேரிடமும் இதேபோல் விஜயபாஸ்கரை அம்பலப்படுத்துவேன் என சவால் விட்டார். என்னதான் பிரச்சனையென நாங்கள் கேட்டோம். அவர் தெளிவான பதில் எதையும் சொல்லவில்லை. இப்பொழுது வெளிவந்துள்ள வீடியோவில் பேசியது போலவே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடுவது போல பேசிக்கொண்டே இருந்தார்.

 

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன நாங்கள், சர்மிளா விவகாரம் பற்றி அவர் வீடியோ வெளியிட்ட பிறகு காவல்துறையில் புகார் கொடுக்க தீர்மானித்தோம்'' என்றார்.

 

நீங்கள் மட்டும் புகார் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது உங்கள் நண்பர் விஜயபாஸ்கரும் இணைந்து புகார் கொடுக்கப் போகிறாரா? தமிழகத்தில் மிக முக்கியமான அமைச்சரானவர் நினைத்தால் ஒரு நொடியில் புகார் கொடுத்து சர்மிளாவை கைது செய்துவிட முடியும் அல்லவா எனக் கேட்டோம். அதற்கு, "சார் இந்த விவகாரம் கடந்த ஒரு வருடமாக சுற்றி வருகிறது. வீடியோ வந்து ஒரு மாதம் ஆகிறது. புகார் கொடுப்பது பற்றி அரசு வழக்கறிஞர்களிடம் விஜயபாஸ்கர் விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் கொரோனா களப்பணியில் இருப்பதால் பணிச்சுமை காரணமாக தாமதம் ஏற்படுகிறது'' என்றார்.

 

vijaybaskar

 

இது தொடர்பான விளக்கத்திற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் பர்சனல் நம்பருக்கு தொடர்பு கொண்டோம். சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. ஒரு மெசேஜ் போடுங்கள். அவரே லைனுக்கு வருவார் என அவர் தரப்பில் தெரிவித்தனர். மெசேஜ் போட்டுவிட்டு காத்திருந்தும், பதில் அளிக்கவில்லை. நாம் விசாரணையை தொடர்ந்தோம்.

 

சர்மிளா ஒரு வியாபாரி. அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். அவர் விஜயபாஸ்கர் தரப்பின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய உதவி செய்தார். அப்படி முதலீடுகளுக்கு கமிஷன் உண்டு. அந்த கமிஷன் சரியாக வழங்கப்படாததால் சர்மிளா விஜயபாஸ்கருக்கு எதிராக வீடியோ மிரட்டல் விடுகிறார். மொத்தம் 240 கோடி ரூபாய் சர்மிளா மூலம் வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என விஜய பாஸ்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இதுபற்றி விஜயபாஸ்கரின் நண்பரான டாக்டர் ஸ்ரீதரிடம் கேட்டோம். "அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை சார்'' என மறுத்தார்.

 

ஏற்கனவே துறை ரீதியாக தொடர்பில் இருந்த பெண் அதிகாரிக்கு வெளிநாட்டுப் பயணத்தின்போது லண்டனில் வைர நகைகள், சென்னைக்கு வந்ததும் பென்ஸ் கார் வாங்கிக் கொடுத்தார் என்றெல்லாம் செய்திகள் அடிபட்டன. அத்துடன் முதல்வர் பதவிக்கு விஜயபாஸ்கர் குறி வைத்திருப்பதும் பரபரப்பானது.

 

புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் பேன்ஸ் என வாட்ஸ்-அப் குரூப்பை ஆரம்பித்து அதில் வருங்கால முதல்வர் விஜயபாஸ்கர் எனப் பதிவு செய்து வருகிறார். இதற்காக 10 இளைஞர்களை சுகாதாரத்துறை பணியாளர்கள் என வேலைக்கு வைத்துக்கொண்டு அவர் எங்கு சென்றாலும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஏற்பாடு செய்துள்ளார். இந்த சர்மிளா விவகாரம் மற்றும் வாட்ஸ் அப் செய்திகள் வருங்கால முதல்வர் கோஷம் இவற்றால் விஜயபாஸ்கர் மீது கடுப்பில் இருக்கிறார் எடப்பாடி. அவர் மேற்கொண்டு வரும் மாவட்டச் சுற்றுப் பயணத்திற்கு "அண்ணா... நான் வரட்டா'' என விஜயபாஸ்கர் கேட்டும், வர வேண்டாம் என மறுத்து, வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.

 

 

 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.