Skip to main content

மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு! ஜோதிமணி கடும் தாக்கு!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இதுதொடர்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், ''விவசாய விரோத வேளாண் மசோதாவைக் கொண்டு வந்ததில் இருந்து பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க அந்நிய முதலீட்டார்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளை அடகு வைக்கும் மசோதா.

 

உரிய நேரத்தில் கடன் வழங்க வேண்டும், குளிர்பதனக் கிடங்குகள் இருக்க வேண்டும், சரியான விற்பனை சந்தைகள் இருக்க வேண்டும், நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும், மண் பரிசோதனை உள்பட பல்வேறு விஷயங்களில் உரிய நேரத்தில் அரசு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கடன் பிரச்சனைகளால் விவசாயிகள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். ஆகையால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. 

 

ddd

 

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் சரி செய்தால்தான் ஒரு விவசாயி, ஒரு உற்பத்திப் பொருளை விளைவிக்க முடியும். இந்த இடத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இல்லாத அரசு, கடன் பட்டு, கஷ்டப்பட்டு எந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் உருவாக்குகிற ஒரு விளைபொருட்களை மட்டும் அந்நிய முதலீட்டார்களும், கார்ப்பரேட்டுகளும் அனுபவிக்கனும் என்று நினைக்கிறது. அதனால் இந்த மசோதா எவ்வளவு மோசமானது என்று விவசாயிகளுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் போராடுகிறார்கள். 

 

விவசாயிகளுக்கு வங்கியில் கடன் கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகளை ஏமாற்றியவர்களை இந்த அரசு பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. போராடுகிற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும், தடியடியையும், வன்முறையும் இந்த அரசு ஏவுகிறது.

 

இந்த விவசாயிகள் இல்லையென்றால், இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் பட்டினிதான் கிடக்க வேண்டும். இந்தத் தேசம் ஒரு காலத்தில் பட்டினியாலும், பஞ்சத்தாலும் பிரிக்கப்பட்டதாக இருந்தது. அப்படிப்பட்ட தேசத்தை, விவசாயிகளின் உதவியோடு, விவசாயிகளின் கடும் உழைப்பின் காரணமாக, இந்திரா காந்தி 'பசுமைப் புரட்சி' மூலமாக மாற்றினார். இதனால், இன்றைக்கு உணவு தானியங்கள் தேவைக்கு அதிகமாகக் கையிருப்பு இருக்கிறது. இந்த அளவுக்கு இந்தியா வருவதற்குக் காரணம், நம் இந்திய விவசாயிகள். இந்த அளவுக்குக் கொண்டு வந்த விவசாயிகளின் பின்னணியில் நிறைய கண்ணீர்க் கதைகள் இருக்கிறது.

 

ddd

 

இந்திய பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு, விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்து எந்த உதவியும் செய்ய மறுக்கிறது. உதவி செய்யாதது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு எதிரான விசயங்களிலும் இந்த மோடி அரசாங்கம் ஈடுபடுகிறது. 

 

இதே காலக்கட்டத்தில் சில கம்பெனிகளுக்கு, கடன் தள்ளுபடி செய்துகிறது. ஐந்து லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, வரிச்சலுகை கொடுக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அழித்து, பத்து கார்ப்பரேட்டுகளுக்கான சமுகத்தை உருவாக்குவதற்கு மோடி தீவிரமாக இருக்கிறார். அதனால்தான் விவசாயிகள் இதனை எதிர்த்துப் போராடுகிறார்கள். போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச அரசு தயாராக இல்லை. 
 

cnc


நரேந்திர மோடி பதவியேற்று ஏழு வருடங்கள் ஆகப்போகிறது. அந்நிய முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள், சினிமா பிரபலங்கள் ஆகியரோடு அவர் ஃபோட்டோ எடுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், எங்கேயாவது விவசாயிகளோடு, அவர்களை சந்தித்துப் பேசியதுபோன்று ஃபோட்டோ எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? 100 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக் கண்ணுவை ராகுல்காந்திதான் வந்து பார்த்தார். மோடி பார்க்கவில்லை. 

 

இந்த தேசத்தில், விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், அவர்களுக்காக குரல் கொடுத்து நிற்பது ராகுல்காந்தி மட்டும்தான். உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராடியபோது, அவர்களுடன் ராகுல்காந்தி நடந்தார். அதன் பிறகுதான், நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் வந்தது. அந்தச் சட்டம் விவசாய நிலம் அரசுக்குச் சொந்தம் என்ற நிலைமையை மாற்றி, விவசாய நிலங்கள் விவசாயிக்கே சொந்தம் என்ற நிலைமைக்குக் கொண்டு வந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்டம். 

 

மோடி அரசு வந்தவுடன் அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு, எல்லா முயற்சிகளையும் எடுத்தது. காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி அந்தச் சட்டத்தைக் காப்பாற்றியது. ஆனால், இன்று பல விதங்களில், அந்தச் சட்டத்தை, நீர்த்துப்போக வைக்கிறார்கள். இன்று, தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, விவசாய நிலங்கள் மீது போகிறது. மின் கோபுரங்கள், விவசாய நிலங்கள் மீது போகிறது. இவையெல்லாமே சட்டத்திற்குப் புறம்பாகவே நடக்கிறது. ஒருபக்கம் விவசாய நிலங்களை, விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் கையகப்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளை, அந்நிய முதலீட்டார்களிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அடகு வைக்கிறார்கள். இன்னொரு பக்கம், விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகளை இந்த அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது. 

 

விவசாயிகளுக்கு ஒரு பொருளை விளைவிக்கிற காலக்கட்டத்தில், இந்த அரசு எந்த உதவியும் செய்வதில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளை எல்லா இடத்திலும் ஓடவிட்டு அடிக்கிற அரசாங்கமாகத்தான் இருக்கிறது. 

 

விவசாய விரோத வேளாண் மசோதா, நாடாளுமன்றத்தில் வரும்போது, காங்கிரஸ், தி.மு.க கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக, நாடாளுமன்றத்தில் நான் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். ஆனால், இங்குள்ள அ.தி.மு.க அரசாங்கம் இந்த மசோதாவைப் பகிரங்கமாகவே ஆதரித்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்து இருக்கிற போலி விவசாயி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறார்.

 

ddd

 

இந்தியா முழுவதும் விவசாயிகள் எதிர்க்கிற இந்த மசோதாவை தாங்களும் எதிர்க்கிறோம் என்று பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வக் கூட்டணிக் கட்சியாக இருந்த, அமைச்சரவையில் பங்கு வகித்த சிரோன்மணி அகாலி தளம் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. 
 

nkn


இந்த அரசால் எஸ்.வி.சேகரை பிடித்து உள்ளே வைக்க முடியவில்லை. டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, இந்த அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. விவசாயி நிலத்தில் விதை விதைத்தால் அது பயிராகும். ஆனால், எந்த விவசாயியாவது தன்னுடைய நிலத்தில், ஒரு சொட்டு கண்ணீரை விதைத்தார்கள் என்றால், அது ஆட்சியாளர்களின் அழிவுக்குத்தான் வழி வகுக்கும். இந்தத் தேசமும், இந்திய விவசாயிகளும், இந்த அரசாங்கத்தைத் திருப்பி அடிக்கும் காலம், வெகு விரைவில் இருக்கிறது. 

 

விவசாயிகளுக்கு வருடத்தற்கு ஆறாயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று பா.ஜ.க பிரச்சாரங்களில் சொல்லி வருகிறது. தமிழ்நாடு முழுக்க இந்தப் பணத்தை பாஜகவினரும், அதிமுகவினரும் எடுத்துக் கொண்டனர். விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரியும். விவசாயிகளுக்கு இந்த அரசு நன்மை செய்திருந்தால், ஏன் விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கிப் போராடப் போகிறார்கள்?'' எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக.  

 

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.