Skip to main content

“எங்களையும் முற்பட்ட வகுப்பினராக்கு” என்ற குரல் எழுமா?

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அனைத்து சமூகத்தினரும் முற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர போராட்டம் நடத்துவார்கள் போல… தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி அந்த உரிமைகளை நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் பெற்றுத்தந்தன.
 

narendra modi

 

 

இட ஒதுக்கீடு அடிப்படையில் கடந்த  ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த சில சாதிகளும், முற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த பல சாதிகளும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும்படி கோரி போராடினார்கள்.
 

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தற்போது இருக்கும் பல சாதிகள் அப்படி இணைக்கப்பட்டவைதான். அதுபோக, முற்பட்ட சாதிகளில் இருப்போர்கூட அவர்களுடைய சாதிப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் அதையே தங்கள் சாதியாகக் குறிப்பிட்டு சான்றிதழ் பெறும் வழக்கமும் இங்கே இருக்கிறது. இப்போது, பாஜக அரசு கொண்டு வந்துள்ள முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஒதுக்கீடு என்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஆம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லாத சலுகை இந்த பிரிவினருக்கு கிடைத்திருக்கிறது.
 

ஆண்டுக்கு 8 லட்சத்திற்குள் வருமானம் வந்தால் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றார்கள். அப்போதே இதை எதிர்த்தார்கள். இந்த வருமான வரம்பில் நிறைய மோசடி செய்யலாம் என்று கூறினார்கள். எதிர்ப்பை மீறி பாஜக அரசு இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தியது. இப்போது, வேலைவாய்ப்பை பெறுவதற்கான மதிப்பெண்களிலும் பாஜக அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறிக்கும் வகையில் தலையிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 61 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் தமிழகத்தில் 28 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்றும், உ.பி., மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் அவர்கள் மதிப்பெண் பெறாவிட்டாலும் வேலையில் முன்னுரிமை பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தங்களை முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் சேர்க்கும்படி போராடத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சு பரவலாயிருக்கிறது. மத்திய அரசின் இந்த இடஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 


 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.