Skip to main content

“ஓபிஎஸ் என் பக்கத்துல உட்காரக் கூடாது...” சீட்டுக்காக சண்டைபோட்ட அதிமுக; அமளிதுமளியான சட்டசபை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

eps said ops should not occupy seat Opposition Leader tn Assembly

 

ஓபிஎஸ் என் பக்கத்துல உட்காரக் கூடாது... என சீட்டுக்காக ரகளையில் ஈடுபட்ட இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்ட சபாநாயகரின் அறிவிப்பால் சட்டசபையே அமளிதுமளியாக காட்சியளித்தது.

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பல முட்டல் மோதல்கள் நீடித்துவரும் நிலையில், அதிமுக என்ற பெரிய கட்சி மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒருபுறம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்-சும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில், கட்சியிலேயே இல்லாத சசிகலா நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி வருகிறார். அதிமுக தொண்டர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல்வேறு குழப்பங்கள் அதிமுகவில் நிலவி வருகிறது.

 

இந்த சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்திலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அமர வேண்டியிருக்கும். கடந்த 4, 5 மாதங்களாக எலியும் பூனையுமாக இருந்து வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக உட்காரும்போது என்ன நடக்கப் போகிறதோ என்பதைக் காண அதிமுக தொண்டர்கள் பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அந்தக் கடிதம் மீது சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்த முடிவையும் எடுக்காமலேயே இருந்தார்.

 

மேலும், சட்டமன்ற இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அவரது தரப்பு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வரவில்லை.

 

இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் 2வது நாளாக இன்று கூடியது. அதற்கு முன்கூட்டியே இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவுவை, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதன்பிறகு அவைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பக்கத்தில் அமர்ந்தார். ஒருபக்கம் வாங்க பழகுவோம் என்ற பாணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், மறுபக்கம் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக உட்கார்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இருக்கைகள் மாற்றம் செய்யப்படாத காரணத்தால் சட்டசபை கூட்டம் தொடங்கியதுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

 

முதலில் மக்கள் பிரச்சினை குறித்துப் பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் என எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்காத எடப்பாடி தரப்பு கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் 'சட்டமன்ற கூட்டத்தொடரை கெடுப்பதற்காகவே எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வந்ததுபோல் இருக்கிறது. அவையில் தேவையில்லாத பிரச்சனைகளை பற்றிப் பேசி சபையில் குந்தகம் விளைவிக்க வேண்டாம் என சபாநாயகர் தெரிவித்தார். அப்போதும் எதையும் பொருட்படுத்தாது எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று ஒருநாள் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் சட்டசபை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.