Skip to main content

ஓபிஎஸ்ஸின் கட்சி பதவி பறிபோகும் வாய்ப்பு? சசிகலாவிற்கு முக்கியத்துவம்... ஓபிஎஸ்ஸிற்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கடந்த இரண்டாண்டுகளாக கூடாமல் இருந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை எப்பொழுதும் பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழுவை ஓ.பி.எஸ்.சின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டி, ஒழித்து கட்டும் பொதுக்குழுவாக எடப்பாடியார் நடத்தினார் என்கிறார்கள் அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. வினர்.

 

admk



சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டாலும் அவரை டி.டி.வி. தினகரனை நீக்கியது போல அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை. சசிகலா தனது உறுப்பினர் பதிவை வருடா வருடம் தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம் மூலம் புதுப்பித்து வருகிறார். வருகிற மார்ச் மாதம் அவர் சிறையிலிருந்து வெளியே வருகிறார் என மன்னார்குடி வகையறாக்கள் சொல்லி வரும் வேளையில், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பார்களா? என்கிற கேள்வி தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அத்துடன் உள்ளாட்சி தேர்தல் உண்மையில் நடக்குமா என்கிற ஆவல் மிகுந்த கேள்வியும் அ.தி.மு.க. வினர் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த கேள்விகளுடன் தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப் பாளர்கள் என அழைக்கப்பட்ட 3410 அழைப்பாளர்களில் 2300 பேர் மட்டும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். மாநில சுயாட்சி, திராவிட இயக்கத்தின் அடித்தளமான இருமொழிக் கொள்கை எல்லோருக்கும் பயன்பெறும் கல்விமுறை, நீட் தேர்வில் இருந்து விலக்கு, மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு, அ.தி.மு.க. அரசை விமர்சிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஓ.பி.எஸ். அணியிலிருந்து எடப்பாடி ஆதரவாளராக லேட்டஸ்ட்டாக மாறியுள்ள மைத்ரேயன் போன்றவர்களுக்கு தீர்மானங்களை முன்மொழிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. செயற்குழு முடிந்து நடந்த பொதுக்குழுவில் பேசிய கே.பி.முனுசாமியின் பேச்சில் அனல் பறந்தது.

 

admk



சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியபோது சசி குடும்பத்தை எதிர்த்து அனல் தெறிக்க பேசியவர் கே.பி.முனுசாமி. "ஆட்சி ஒருவிதமாகவும் கட்சி வேறு விதமாகவும் ஒன்றோடொன்று ஒட்டாமல் செயல்படுகிறது'' என்கிற விமர்சனத்தை முன்வைத்தார். "இந்த ஏற்றத்தாழ்வு உடனடியாக களையப்பட வேண்டும். இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஒன்றாக இருந்தால் மட்டும் போதாது. ஆட்சியும் கட்சியும் இணைய வேண்டும்; இல்லையேல் அது ஆபத்து'' என எச்சரித்தார் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி.

 

admk



மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கமும் "எடப்பாடி அரசில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் மகிழ்ச்சியுடன் இல்லை. அவன் ஒருவிதமான விரக்தியில் இருக்கிறான்'' என சுட்டிக் காட்டினார். இந்த இருவருக்கும் நேர்மாறாக எடப்பாடியின் உறவுக்காரரும் அமைச்சருமான தங்கமணியின் பேச்சு அமைந்தது. எடப்பாடி அரசின் சாதனைகளை பட்டியலிட்ட தங்கமணி "2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியை முதல்வர் எடப்பாடி காலடியில் சமர்ப்பிப்போம்'' என்றார்.


கடந்த முறை நடந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.சை ஒருங்கிணைப்பாளராகவும் இ.பி.எஸ்.சை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுத்தனர். அந்த பொதுக்குழுவில் பேசிய தங்கமணி "அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் அதை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கால்களில் சமர்ப்பிப்போம்' என பேசினார். அவரே இன்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இ.பி.எஸ். காலில் சமர்ப்பிப்போம் என்கிறார். ஜெ. பொதுச்செயலாளராக இருந்த பொழுது ஜெ.வின் கால்களில் வெற்றியை சமர்ப்பிப்போம் என பேசுவார்கள். ஜெ.வின் இடத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இருவர் ஆட்சியை வழி நடத்தும் போது இ.பி.எஸ்.சை ஜெ.வின் இடத்தில் வைத்து தங்கமணி பேசியது அ.தி. மு.க.வில் முக்குலத்தோர் இன பிரதிநிதிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். கைகாட்டி அந்த சலசலப்பை அமைதிப்படுத்தினார்.

அதன்பிறகு கட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து ஒரு தீர்மானம் நிறை வேற்றினார்கள். புதிதாக உருவான மாவட்டங்களோடு சேர்த்து மொத்தம் 52 மாவட்டங்களாக இருந்த அ.தி.மு.க., 57 மாவட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டதோடு இணையதளங்களில் அ.தி. மு.க.வின் செயல்பாடுகளின் முன்னோடியான தகவல் தொழில்நுட்ப அணி முக்கியமான அணியாக உருப்பெற்றது. கே.ஏ.செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக உறுப்பினராக இருக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.


மேலோட்டமாக பார்த்தால் கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் உட்பட மன்னார்குடி வகையறாக்கள் கட்சி நிர்வாகிகளாக வருவதற்கு தடைசெய்ய போட்ட தீர் மானம். சசிகலா இணைப்பு மன்னார்குடி ஆதிக்கம் மறுபடியும் வரும் என்கிற பயத்தை இந்த தீர்மானம் ஏற்படுத்தியுள்ளது. உள்ளர்த்தத்தில் இது வேறு நோக்கத்திற்காக எடப்பாடியால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கட்சி பதவிக்கு வரமுடியாது. பேரவை போன்ற துணை அமைப்புகளில் பதவிக்கு வரலாம். தொடர்ந்து ஐந்து வருடம் கட்சியில் இருந்தால் அவர்கள் கட்சியின் பதவிகளுக்கு வரலாம் என்பது ஜெ. காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள ஒரு அமைப்புச் சட்டம். இந்த சட்டம் அமலில் இருக்கும்போதே ஜெ.வால் அரசியலில் அதிரடியாக விரட்டியடிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் ஆனார். அந்த சட்டத்தில் திருத்தமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த பதவிகளை இணைத்தது ஓ.பி.எஸ்.சை மட்டம் தட்டும் வேலை. இந்த சட்டத்தின்படி ஓ.பி.எஸ்.சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகும் வாய்ப்பு உள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபொழுது அவருக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்பட ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குப் போனார். 2016-ல் நடைபெற்ற இந்த நீக்கம் ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இல்லை என்கிற நிலையை உருவாக்குகிறது. எடப்பாடியை யாரும் எந்த காலத்திலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கவில்லை. அதேபோல் சசிகலாவும் நீக்கப்படவில்லை.

கர்நாடகாவில் ஆளும்கட்சியை எதிர்த்து கலகம் செய்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது போல் ஓ.பி.எஸ்.சுடன் சேர்த்து எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது என்றால் என்ன செய்வது என்பதை சிந்தித்தே எடப்பாடி இந்த விதியை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் பொருத்தியுள்ளார். 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்து ஓ.பி.எஸ். துணை முதல்வர் பதவியை இழந்து தனித்து விடப்பட்டாலும்... நாளை சசிகலா வெளியே வந்து அவர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக வருவதற்கும், அதை ஓ.பி.எஸ். எதிர்த்து போட்டி போடாமல் இருப்பதற்குமான செக் தான் இந்த சட்டத் திருத்தம் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களை தெரிந்த இரண்டாம் கட்ட தலைவர்கள்.

அ.தி.மு.க.விலிருந்து வெளியேறி தனி அணி கண்டு ஓ.பி.எஸ். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எடப்பாடி அணியை எதிர்த்தே நின்றார். இரு அணிகள் இணைந்ததும் அதில் எடப்பாடி தலைமையிலான அணிக்கே பெரும்பான்மை இருந்தது. அந்த வரலாறுகளின் வழியே பார்த்தால் ஓ.பி.எஸ். மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி அவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க முடியும் என்கிறார் எடப்பாடியின் முக்கிய தளபதியான அமைச்சர் ஒருவர். பொதுக்குழுவின்மைய நோக்கமாக, ஓ.பி.எஸ்.சுக்கு வேட்டு வைக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார் இபி.எஸ். பொதுக்குழு முடிந்தபிறகும் அ.தி.மு.க.வினர் ரகசியமாக கூடி விவாதித்தனர். உள்ளாட்சித் தேர்தல் தேவையில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்க, கடைசியில் தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு 200 கொடுத்தால்தான் முழுமையான வெற்றி கிடைக்கும் என 250 கோடி கட்சி நிதியாக வைத்துள்ள ஆளுந்தரப்பு ரகசியமாக முடிவு செய்தது.


 

 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.