Skip to main content

ஸ்டாலின் முதல்வரானால் என்ன பண்றது... அதிமுகவை விட்டு பாமக போகக் கூடாது... திமுகவிற்கு எதிராக எடப்பாடியின் திட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறிவிடாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் கடந்த வாரம் முடிந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி. பட்ஜெட் விவாதங்களில் தி.மு.க. முன்வைத்த சிலபல விசயங்கள் குறித்த கமெண்ட் அங்கே எதிரொலித்திருக்கிறது.

 

dmk



குறிப்பாக, குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என சட்டமன்றத்தில் அண்ணன் எடப்பாடி எழுப்பிய கேள்விகளுக்கு மறுநாள் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நிறைய பாயிண்டுகளை தயாரித்து வந்தோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை நமக்கு ஸ்டாலின் கொடுக்கவே இல்லை'' என அமைச்சர்கள் சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார் எடப்பாடி.

துறை ரீதியிலான மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற மார்ச்-15 முதல் மீண்டும் சட்ட மன்றத்தை கூட்டுவது பற்றியும் விவாதித்தனர். இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை குறித்தும், ராஜ்யசபா தேர்தல் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, ராஜ்யசபா தேர்தலில் 3 இடங்களை நம்மால் ஜெயிக்க முடியும். ஆனால், முந்தைய தேர்தலில் பா.ம.க.வுக்கு கொடுத்தது போல தற்போது ஒரு இடத்தை கேட்டு பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வும் நெருக்கடி கொடுக்கும். அதற்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. மூன்று இடங்களிலும் அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும். லோக்சபாவில் நமக்கு ஒரே ஒரு எம்.பி. இருக்கும் நிலையில் ராஜ்யசபாவில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தோழமைக் கட்சிகளுக்கு தாரை வார்த்தால் கட்சிக்குள் மனக்கசப்புகள் உருவாகும் என அமைச்சர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

 

pmk



அப்போது, அ.தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க. விலகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் போன முறை பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கினோம். அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வலிமையாக உள்ள வட தமிழகத்தில் அதனை நாம் எதிர்கொள்ள நம் கூட்டணியில் பா.ம.க. இருப்பது அவசியம். சட்டமன்றத் தேர்தலின் போது நேரடி அரசியலில் ரஜினி இறங்கினால் அப்போது கூட்டணி கணக்குகள் தாறுமாறாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரஜினி பின்னால் பா.ம.க.வும் பா.ஜ.க.வும் போவதற்கும் வாய்ப்பு உண்டு. பா.ம.க. அப்படி ஒரு நிலையை எடுத்தால் வட தமிழகத்தில் நமக்கு சிக்கல்தான் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினியுடன் பா.ம.க. நட்பை வளர்த்து வருவதையறிந்து அவ்வப்போது டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்து வருகிறார் எடப்பாடி. அதேசமயம், அ.தி.மு.க.வை விட்டு பா.ம.க. விலகி ரஜினியை ஆதரித்து விடக்கூடாது என்பது மூத்த அமைச்சர்கள் இருவர் மூலம் ராமதாசிடம் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பா.ம.க.வின் கிச்சன் கேபினெட்டில் சட்டமன்றத் தேர்தல் பற்றி அடிக்கடி விவாதங்களும் நடக்கின்றன.

 

admk



பா.ம.க.வின் உள்வட்டங்களிடம் பேசியபோது, சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற விட்டு விடக் கூடாது என டாக்டர் ராமதாசும் அன்புமணி ராமதாசும் அழுத்தமாக இருக்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அன்புமணியின் முதல்வர் கனவு நிறைவேறாது. அதாவது, 2026 தேர்தலில் அன்புமணியை முதல்வராக்க 2021 தேர்தலிருந்தே அதற்கான அரசியலைத் துவக்க வேண்டும் என்பது பா.ம.க.வின் அஜெண்டா! ஆனால், 2021-ல் ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அதன் பிறகு தி.மு.க. அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும்.


அதனால், தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல் 2021-ல் தடுத்துவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் அரசியல் ரீதியாக பலகீனமாகிவிடுவார் என டாக்டர் ராமதாசும் அன்புமணியும் கணக்குப் போட்டுள்ளனர். அதற்காக பா.ம.க.வின் அரசியல் நிலைப்பாடுகளை அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினி என்கிற மூன்று வட்டங்களை மையப்படுத்தியே அடிக்கடி ஆலோசிக்கிறார்கள். மத்தியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் சட்டமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.வையும் மனதில் வைத்தே கூட்டணி அமைப்பது. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை எனில் பா.ம.க.வை மட்டுமே முன்னிறுத்தி கூட்டணி பேசுவது என்கிற நிலைப்பாட்டுக்கும் வந்திருக்கிறார்கள்.


அந்த வகையில், ரஜினி கட்சி ஆரம்பிக்கிற நிலையில், அவருடன் கூட்டணி வைப்பது பா.ம.க.வுக்கு பலம் என திட்டமிடுகிறார் அன்புமணி. ஆனால், ராமதாசோ, அ.தி. மு.க.வா? ரஜினியா? என்கிற போது அ.தி.மு.க. கூட்டணி தான் சரியாக இருக்கும் என கருதுகிறார். காரணம், ரஜினி இன்னும் அரசியல் ரீதியாக தன்னை நிரூபிக்கவில்லை என்பதுதான். டாக்டரின் இந்த மனநிலையை அறிந்து, ரஜினியுடனான கூட்டணிதான் சரியாக இருக்கும் என தேவைப்படுகிற போதெல்லாம் அவரிடம் வலியுறுத்தி வருகிறது பா.ம.க. கிச்சன் கேபினெட்! பா.ம.க.வின் இப்படிப்பட்ட அரசியலை உள்வாங்கியிருப்பதால்தான் பா.ம.க.வை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள டாக்டரோடு அழுத்தமான தொடர்பில் இருக்கிறது அ.தி.மு.க. தலைமை! என விவரிக்கின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.