Skip to main content

அதிமுகவை வழிநடத்தப்போவது சசிகலாதான்! மிகப்பெரிய அரசியல் சரிவில் EPS விழப்போகிறார்! -நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு!

Published on 19/01/2021 | Edited on 27/01/2021
dddd

 

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.01.2021) டெல்லி சென்றார். மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அரசியல் ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை, பேசவில்லை என்று அவர் சொல்லியிருப்பது அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.

 

பாஜக என்கிற கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் அதிமுகவை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்கவில்லை. இவர்தான் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக வழிமொழிந்ததற்குப் பிறகு பாஜக அதனை வழிமொழியவில்லை. 

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லி தலைமை அறிவிக்கும் என்று அடுத்த நிமிடத்திலேயே அறிக்கை விட்டார் தமிழக பாஜக தலைவர். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அண்டப் புழுகு என நான் சொல்வதற்கு காரணம், தேர்தல் தேதி அறிவிக்கிற நாள் நெருங்கி வருகிற காலக்கட்டத்தில் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும், கோரிக்கைகளை வைப்பதற்கும் டெல்லி சென்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. திட்டங்களை நிறைவேற்றவும், கோரிக்கைகளை வைப்பதற்கும் இது உகந்த நேரமல்ல. 

 

ஆட்சியில் அந்திசாயும் நேரத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி இனிமேல் தமிழ்நாட்டில் திட்டங்களைத் தொடங்கவும், அதனை நிறைவேற்றவும் காலம் வாய்ப்பு கொடுக்காது. பாஜகவும் அதை இவரிடத்தில் எதிர்பார்க்காது. ஆகவே இவர் என்ன நினைத்து அங்கு சென்றாரோ, நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். திட்டமிட்டே முதலமைச்சர் ஒரு உண்மையை மூடி மறைத்திருக்கிறார். 

 

தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் குறித்துதான் பேசியிருந்தால் எந்த திட்டங்கள் குறித்துப் பேசினார். இன்று காலை பத்திரிகை செய்தி, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 19 ஆயிரம் கோடி என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அந்த நிலுவைத் தொகை பற்றி எடப்பாடி பேசியிருக்கிறாரா? 

 

dddd

 

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியிருக்கிறாரே? 

 

சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்வது, இவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடிய வார்த்தைதான். சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஒரு மிகப்பெரிய அரசியல் சரிவில் இவர் விழப்போகிறார். முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஆபத்து வரப்போகிறது. நன்றி கொன்ற மகற்கு உரிய தண்டனையை இவர் அனுபவிக்கப்போகிறார். அதனால் சசிகலாவை ஏற்க மனமில்லாத அருவடைய நிலையை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறாரேயொழிய வேறொன்றும் இல்லை. 

 

சசிகலா சிறையில் இருந்து திரும்ப வந்ததற்குப் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்தப்போவது அவர்தான். அது நடக்கப்போகிறது. ஓ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அதற்கான வேலைகளில்தான் இப்போது கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். 

 

சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறாரே? 

 

ஜெயலலிதா இருந்தபோதே அவர் அதிமுகவில் இருந்தாரா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. சசிகலாதான் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து கலந்தாலோசித்து இவரை முதலமைச்சராக்கியவர். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள்தான் தன்னை தேர்ந்தெடுத்தார்கள், சசிகலாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே இவர் நன்றி கொன்றிருக்கிறார் என்பதைவிட, நாளை நடக்கப்போவதை அனுமானிப்பதற்கான ஆற்றலும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.