Skip to main content

தப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

ராஜீவ் படுகொலை வழக்கின் சிறைவாசிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதத்தை நடத்தியது தி.மு.க. இந்த நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி அதிர்ச்சியை தந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

 

admk



நீண்ட வருடங்களாக சிறைக் கொட்டடியில் தவிக்கும் 7 பேரின் விடுதலையை மாநில அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்தது முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவை. அதன் மீது எவ்வித முடிவையும் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 11-ந்தேதி நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் வந்தபோது, "ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018-ல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தற்போது வரை நிலுவையில் இருக்கிறது'' என தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டது.
 

issues



அதனை உற்றுக் கவனித்த நீதிபதிகள், "ஆளுநர் என்பவர் ஒரு அரசின் பிரதிநிதி. உயர் அதிகாரம் படைத்தவர். இந்த விவகாரத்தில் அவருக்கு எப்படி நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியும்? கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தாங்கள் பரிந்துரைத்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என ஆளுநரிடம் மாநில அரசுதான் கேட்க வேண்டும். ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் கவர்னரிடம் ஏன் இவ்வளவு காலம் நிலுவையில் உள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

இந்தச் சூழலில்தான், 7 பேர் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து சட்டப் பேரவையில் 19-ந்தேதி கேள்வி எழுப்பிய தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "தர்மபுரி பஸ் எரிப்பில் மாட்டிக்கொண்ட அ.தி.மு.க. கட்சிக்காரர்களை உடனடியாக விடுதலை செய்த இந்த அரசு, ஏழு பேர் விடுதலையில் மெத்தனமாக இருக்கிறது'' என குற்றம்சாட்டினார்.

 

dmk



அப்போது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டு மென்பதுதான் இந்த அரசின் கொள்கை. அதனால்தான் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதுமே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அவர்களின் விடுதலையில் அரசுக்கு உரிய அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் கவர்னர் முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இருந்தாலும் நல்ல முடிவை விரைந்து எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என தெரிவித்தார்.

 

dmk



இதில் திருப்தியடையாத தி.மு.க. தலைவரும் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை என கேட்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள நிலையில், கவர்னரிடம் கேள்வி எழுப்பினீர்களா? முடிவெடுக்க வலியுறுத்தும் சூழ்நிலையை எடுத்தீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் பேரவையில் வாதங்கள் சூடுபிடித்தன. ஒரு கட்டத்தில், "கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். இதே கருத்தைத்தான் மத்திய அரசும் சொல்லியிருக்கிறது. அதனால் நல்ல முடிவு வரும். அந்த நம்பிக்கை இருக்கிறது'' என்றார் முதல்வர் எடப்பாடி. இதனையடுத்து சபை அமைதியானது.


பேரவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், இரண்டு வாரத்துக்குள் அவர்களின் விடுதலை குறித்த முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கவர்னரின் முடிவை தெரிந்து கொள்ள எவ்வித அக்கறையையும் காட்டவில்லை எடப்பாடி அரசு.


அதேசமயம், "கவர்னர் முடிவெடுக்க காலதாமதம் செய்வதால் நாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்'' என்பதை சுட்டிக்காட்டி நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் 20-ந்தேதி வந்தபோது, "சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் விடுதலை செய்ய முடியாது. அவர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானமும், அவர்களது பரிந்துரைகளும் வெறும் பூஜ்ஜியம்தான். விடுதலை செய்ய எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது என கடுமையாக வாதிட்டார் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபால். இந்த வாதம் வழக்கறிஞர்களிடம் ஏக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், கவர்னருக்கு பரிந்துரைப்பதோடு எங்களின் கடமை முடிந்துவிட்டது. அதனால் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட முடியாது'' என தெரிவித்ததோடு அமைதியானார். இதனால் மேலும் மேலும் அதிர்ச்சிகள் அதிகரிக்க, மத்திய அரசு வழக்கறிஞர் கூறுவது சரி அல்ல. அவர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்க வேண்டும்'' என வலியுறுத்தினார் நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

இதே நீதிமன்றத்தில் இதே வழக்கின் முந்தைய விசாரணையின் போது, "இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'' என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் முடிவெடுக்க முடியாது என அவர் தெரிவித்திருப்பது 7 பேர் விடுதலையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளையும் ஜன நாயக அமைப்புகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதன் பின்னணிகள் குறித்து விசாரித்தபோது, "ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது விந்தையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, ராஜ்பவன் மூன்றுமே அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் "விடுதலைக்கு நாங்கள் எதிரி இல்லை' என காட்டிக்கொள்கிறது எடப்பாடி அரசு. அமைச்சரவையில் முடிவெடுத்தாலும் கவர்னரின் முடிவில்தான் அவர்களின் விடுதலை இருக்கிறது என அரசுக்கு தெரியும் என்பதால், கவர்னரை சுட்டிக்காட்டி எடப்பாடி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

அரசுக்கு அக்கறை இருக்குமானால், "எனது அமைச்சரவையின் பரிந்துரை மீது என்ன முடிவு எடுத்தீர்கள்? ஏன், காலதாமதம்?' என கேள்வி கேட்க எடப்பாடி அரசால் முடியும். சட்ட ரீதியாக இதற்கு இடமில்லையெனினும் தார்மீக அடிப்படையில் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமையை பயன்படுத்த அரசு நினைக்கவில்லை. அதேபோல, இந்த விவகாரத்தில் சுயமாக முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரமிருந்தாலும் மத்திய அரசின் விருப்பத்தை அறிந்துகொள்ளவே ஆர்வமாக இருக்கிறது ராஜ்பவன்.

மத்திய அரசோ, 7 பேரையும் விடுதலை செய்வதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது என திட்டமிடுகிறது. அதனாலேயே, அவர்களின் விடுதலைக்கு தற்கால தடையை கவர்னர் மூலம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசு நினைத்தால் மட்டுமே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பும் சூழலும் தமிழகத்தில் பரபரப்பாக இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காகத் தான் நீதிமன்றங்களின் மூலம் அதிர்ச்சிகளையும், ஆனந்தத்தையும், பரபரப்புகளையும் மாற்றி மாற்றி உருவாக்கி வருகின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்.

இந்த விவகாரத்தில் இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறது டெல்லி. அதாவது, எடப்பாடி ஆட்சி நீடித்தால், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஆளுநருக்கு சில உத்தரவுகள் பறக்கும். அப்போது, அவர் டெல்லிக்கு பறப்பதும் சென்னைக்குத் திரும்புவதுமான சூழலை உருவாக்கி அதன்பிறகு விடுதலைக்கான கோப்பில் கையெழுத்திடுவார்.

ஒருவேளை எடப்பாடி ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும் சூழலை உருவாக்கி அப்போது விடுதலை கோப்பில் கவர்னர் கையெழுத்திடுவது போன்ற நிலையை ஏற்படுத்துவது என்கிற 2 திட்டங்களை போட்டு வைத்திருக்கிறது. அதனால், தேர்தலுக்காக அவர்களின் விடுதலையை தடுத்து நிறுத்தியிருக்கும் மத்திய அரசு, தேர்தல் சமயத்தில் மட்டுமே தடையை உடைக்கும். அதுவரை இப்படி கண்ணாமூச்சி ஆட்டங்களை மூன்று தரப்புமே ஆடிக்கொண்டிருக்கும்'' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

இந்த விவகாரத்தில் இப்படியான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், 7 பேர் விடுதலையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கும் ஒரே திசையில் பயணிக்கின்றன. அதாவது, ஒரு பிரச்சனையின் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற காலக்கெடுவிற்கான சட்ட விதிகள் எதுவும் கவர்னருக்கும், சட்டமன்ற சபாநாயகருக்கும் கிடையாது. குறிப்பிட்ட பிரச்சனை மீது எவ்வித முடிவையும் இவர்கள் எடுக்காத நிலையில், எடுத்தே தீர வேண்டும் என அவர்களுக்கு சட்ட ரீதியிலான எவ்வித அதிகார நெருக்கடியை தர முடியாது. அதனால், காலநிர்ணயம் குறிப்பிடப்படவில்லை என்கிற விதியை சாதகமாக பயன்படுத்தி கவர்னரும் சபாநாயகரும் தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து விலகி நிற்கிறார்கள்.


 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.