Skip to main content

ஹெலிகாப்டரை வணங்கியவர்கள்..! மக்களிடம் கனிமொழி! - களத்தில் கனல் மொழி!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

ddd

 

கலைஞர் இல்லாத தி.மு.கவில் சி.ஐ.டி. காலனி இல்லம் மீண்டும் பரபரப்படைந்தது, கடந்த ஜனவரி 5ஆம் நாள் அன்றுதான். தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்தநாளுக்காக நேரில் வாழ்த்தியவர்கள் ஏராளம். கட்சித் தலைவரின் அன்பான வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கனிமொழி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.

 

தூத்துக்குடியில் பெண்களைத் திரட்டி சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கெதிராகப் போராட்டம் நடத்திய கனிமொழி, "மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் நாங்கள் மத்திய அரசுக்கெதிராக போராடுவோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலின் விலை குறைந்தபோதும் ஏன் இந்த விலையேற்றம்?'' என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்பினார்.

 

தென்காசி மாவட்டத்தின் ராயகிரி பகுதியில் மலைவாழ் பழங்குடியினரை கனிமொழி சந்தித்தபோது, வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் துயரங்களை முன்வைத்தனர். “தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைந்தவுடன் உங்களின் நியாயமான உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

சிவகிரி பகுதியில் கனிமொழி மக்களைச் சந்தித்தபோது, கிருஷ்ணவேணி என்பவர், “கொரோனா நேரத்தில் வேலை வெட்டியில்லாம முடங்கிக் கிடந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், ஏற்கனவே வாங்கிய கடன் தொகைக்கு அரசு தெரிவித்தபடி வட்டிச் சலுகை இல்லை. வட்டியும் அதிகமாகிறது. வட்டி தள்ளுபடி பண்ணனும் இல்லன்னா வட்டியைக் குறைத்தாலும் போதும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லியிருக்கிறார்.

 

தாமரை என்ற பெண்மணியோ, "புள்ளைகளப் படிங்க படிங்கன்னு சொல்லுதாவ. படிச்சிப்புட்டுப் பதினோரு வருஷமா எங்க புள்ளைக வேலையில்லாம இருக்கிறப்ப, ஏம் புள்ளைகளப் படிக்கவைக்கணும்'' என்றார். கனிமொழி, "ஆட்சி மாற்றம் நிலைமையை மாற்றும்” என அவருக்கு ஆறுதல் கூறினார்.

 

கிராமப்புறங்களில் "கழிப்பிட வசதியில்ல... கழிவுநீர் போக வழிவகை செய்யல்ல' என்று தெரிவித்த பெண்களிடம், “மத்திய அரசு, தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் இதுவரை தொடர்ந்து கொடுத்து வந்தது. மோடி அரசு அந்த நிதியை நிறுத்திவிட்டு அதனைக் கொண்டு ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்றம் அமைக்கிறார்கள். நாங்கள் தொகுதிநலன் பொருட்டு அதற்காகப் போராடிவருகிறோம். நிச்சயம் உங்கள் கவலை தீரும்'' என்று பிரச்சனையின் மையத்தையும் அதன் காரணத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

புளியங்குடியில் கனிமொழி விவசாயிகளைச் சந்தித்தபோது "கொல்லம் - மதுரை நான்கு வழிச் சாலைய வேற வழியில போடுங்க. விவசாய நிலம் பாதிக்கிறது' என்றவர்களிடம் “இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களே கொண்டுவரப்படுகிறது. ஹெலிகாப்டரில் பறந்து வந்தவங்கள வணங்கினவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்’’ என்று பஞ்ச் வைத்தார்.

 

சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவுத்தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நகரமான சங்கரன்கோவிலில் விசைத்தறிக் கூடம் சென்ற கனிமொழியிடம் பொங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்களும், ஜவுளி உற்பத்தியாளர்களும்.

 

மணி, சங்கரன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் "விசைத்தறிக்குன்னு 500 யூனிட் கரண்ட் இலவசமாகக் குடுத்தவர் கலைஞர். இந்த அரசு இந்தத் தொழிலுக்குன்னு எதுவும் செய்யல. மாதந்தோறும் கரண்ட் பில் கட்டுறத விட்டுப்புட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ கணக்கு எடுக்குறது தொழில் செலவை அதிகரிக்குது'' என்றனர்

 

“ரகக் கட்டுப்பாடுன்னு சொல்லிக்கிட்டு மத்திய அரசின் என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இன்ன ரகம் உற்பத்தி பண்ணக்கூடாதுன்னு எங்க மேல கிரிமினல் கேஸ் போடுறாங்க. நெசவுத் தொழில் பண்ற நாங்க என்ன கிரிமினல்களா? உற்பத்தி பண்ணுன ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகட்டுன எங்களுக்கு, வருஷங்கள் போயும் ரீபண்ட் கெடைக்கல்ல. தொழில்சிக்கல் வேற, இதுல ஜி.எஸ்.டி. ரீபண்ட்லயே எங்க முதல் முடங்கிப் போனதால தொழில நகர்த்தமுடியல. தமிழகம் முழுதும் நெசவுத்தொழிலின் நிலை இதுதான்’’ என்ற புலம்பலைக் கேட்டு அதிர்ந்த கனிமொழி,

 

"இதுபோன்ற சிறு தொழில்களை எல்லாம் மத்திய, மாநில, அரசுகள் கவனிக்காது. உங்களின் இந்தக் குறைகளைப்போக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' என்று நம்பிக்கையளித்திருக்கிறார். விசைத்தறி தொழில்கூடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் பக்கம் கூட்டம் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் சென்றிருந்த விசைத்தறிக்கூடம் எதிரில், தொகுதியின் அமைச்சர் ராஜலட்சுமிக்கு நன்றி சொல்கிற மக்கள் நிகழ்ச்சியைத் திடீரென ஏற்பாடு செய்த நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் பாணியில் கூட்டம் சேர்த்துப் பார்த்தனர். ஆனால் அதையும் தாண்டி, நகர மக்கள் கனிமொழியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூடியிருந்தனர்.

 

"இதுபோன்று தொகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றி டைமிங்காக எடுத்து வைக்கும் கனிமொழி, அரசுகளைத் தெறிக்கவிடுகிறார். அவரின் பரப்புரையில் ஏற்படும் நிகழ்வுகளை, எதிரொலிப்பை அறியும் பொருட்டு அரசு இயந்திரங்கள் அவரைப் பின்தொடர்கின்றன.

 

மக்களிடம் பேசுகையில் கனிவான மொழி, அரசை விமர்சிக்கையில் கனல்மொழி எனும் பிரச்சார யுக்தி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு தி.மு.க.வின் வாக்குப் பலத்தையும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.