Skip to main content

டெல்டா மாவட்டங்களில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்... அள்ளிவிடும் அரசியல் தலைவர்கள்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து விட்டது. அதையும் மிஞ்சி கொண்டிருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார களம். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை மக்கள் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் விதமும், அவர்கள் அள்ளிவிடும் வாக்குறுதிகளும் தேர்தல்களத்தில் படு சுவாரசியங்களாகவே இருக்கின்றன.

அந்தவகையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள நாகை, மயிலாடுதுறை, நாடாளுமன்றத்தொகுதிகளிலும், திருவாரூர் இடைத்தேர்தல் தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசும் பேச்சு அலப்பறைகள் மக்களின் மண்டையை உடைத்துக்கொள்ளும் படியே உள்ளது. அப்படி அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் பார்ப்போம்.

 

o.s. manian

 

பிரச்சாரத்தில்  பேசிய அதிமுக அமைச்சர் ஒ.எஸ்.மணியன், "மண்ணைக் காக்க மத்திய அரசும், மக்களை காக்க மாநில அரசும், செயல்படுவது அவசியம். அந்த வகையில் பாஜக மண்ணைகாக்கிறது, அதிமுக அரசு மக்களைக்காக்கிறது, ஆக மண்ணை, மக்களை காப்பதற்காக பாஜக அதிமுக கூட்டணிக்கு வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஒரு இடத்தில் கூட கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.  "என்னது மக்களை காக்குறீங்களா, கஜாபுயலில் ஒரு ஆளக்கானும்," என்று நக்கலடித்துவருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
 

அதிமுக அமைச்சர் காமராஜ் பேசுகையில், "எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி, வேட்பாளர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்." என்று பேசினார்.

 

mutharasan

 

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராஜை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பிற நாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஆபத்தும் இல்லை. இந்தியாவில் ஆட்சி செய்யும் மோடியால்தான் நாட்டுக்கு ஆபத்து. இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள் இந்தியாவில் பாசிச கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இரண்டாவது உலக போருக்கு காரணமான ஹிட்லரின் மறு உருவமாக மோடி செயல்படுகிறார்.
 

நீட் தேர்வு விவகாரம், காவிரி நீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளார் மோடி. இயற்கை சீற்றத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது மோடி கண்டுகொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் சேர்த்து விடுதலை பெரும் நாள்" என்றார்.

 

k veeramani

 

மன்னார்குடியில் தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கத்தை ஆதரித்து வாக்கு கேட்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், "கால்பந்தாட்டத்தில் விளையாடுபவர்கள் வெற்றி வாய்ப்பு பறிபோகும்போது, தோல்வி பயம் தெரிந்த உடனே பந்தை உதைப்பதை விட்டுவிட்டு எதிர் வீரரின் காலை உதைப்பதுபோல், மக்களவைத் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட பாஜக அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர்.
 

கடந்த மக்களவைத் தேர்தலில் செய்வீர்களா செய்வீர்களா என்று மேடைக்கு மேடை பேசி பதவிக்கு வந்தவர்கள், மீண்டும் ஐந்து ஆண்டுகள் கழித்து தேர்தல் மேடைக்கு வருகின்றனர். அவர்களைப் பார்த்து சொன்னதையெல்லாம் செய்தீர்களா செய்தீர்களா என பொதுமக்கள் கேட்க தயாராகிவிட்டனர்." என்று பேசினார்.

 

ops

 

துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார், அப்போது அவர் பேசியது, "நாட்டை வலிமையாக ஆளும் பிரதமராக மோடி இருப்பதால் நம் நாட்டை தொட்டுப் பார்க்கக்கூட பிறநாட்டினர் அஞ்சுகின்றனர். அந்த அளவுக்கு நிர்வாக திறன் கொண்டவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒரே நாளில் சட்டத்திருத்தம் செய்ய மோடிதான் உதவினார். சிறுபான்மை மக்களுக்கு மோடி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அதிமுகவில்தான் ஒரு தொண்டன் முதல்வராகவும் வர முடியும் என்கிற அதிசயம் நடக்கும். வேறு எந்த கட்சியிலும் இப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது. பிரச்சாரத்தில் திமுக தொண்டரையும் முதல்வராக்குவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கட்டும் பார்ப்போம்" என்றார்.
 

திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் பேசுகையில், "பிரதமர் மோடியால் இந்திய தேசத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தின் நிலைமையும் மோசமடைந்துள்ளது. மோடியால் இப்போது எல்லோருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.  92 வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கில் செலவிட்ட மோடி, நாட்டு மக்களுக்காக சாதித்தது எதுவும் இல்லை. சாட்டிலைட்டை விண்வெளி மையம் வீழ்த்தியதில் மோடிக்கு என்ன பங்கு இருக்கிறது என்பது தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும். கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. மக்களை ஏமாற்றிய மோடி இப்போது மக்களின் காவலன் என்கிறார். காவலாளியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அது மோடியிடம் கிடையாது, மோடி ஆட்சியில் எல்லைப்பகுதியில் ஆயிரத்து 900 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,000 முறை பாகிஸ்தான் நம் எல்லையில் அத்துமீறி உள்ளது. 448 போர்வீரர்கள் எல்லையில் உயிரிழந்துள்ளனர் இதுதான் மோடி ஆட்சியின் சாதனை. இவருடன்தான் கூட்டணி வைத்துள்ளார் பழனிசாமி" என்றார் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில்.

அடக்கடவுளே இன்னும் என்னென்னவெல்லாம்  தேர்தல் வரைக்கும் கேட்க போறோமோ என மண்டை குழம்பி நிற்கிறார்கள் பொதுமக்கள்.
 

 

 

 

Next Story

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு...

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

political reservation for scheduled caste extended

 

 

70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.

இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்" என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.

 

 

Next Story

வேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது. தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்ற முயலும் என தி.மு.க. தரப்புக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை குழு தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அனைத்து வாக்குச்சாவடிகளையும பதட்டமானவை என அறிவிக்க வேண்டும் என மனு தந்ததால் அனைத்து சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலமாக போடப்பட்டது.
 

dmk



வாக்குப்பதிவன்று தொகுதியை வலம்வந்தபோது, காலை 10 மணி நிலவரப்படி 7 சதவிகிதம் தான் வாக்குப்பதிவு நடை பெற்றிருந்தது. இதுபற்றி மையத்துக்கு வெளியே அமர்ந் திருந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""இந்த ஒற்றைத் தொகுதி தேர்தல் இடைத்தேர்தல் போல் நடைபெற்றதால் மக்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு சப்பென போய்விட்டது. நாங்கள் 300 ரூபாய் தந்தோம், தி.மு.க. 200 ரூபாய் தந்தது. இந்தப் பணத்தை தந்தபோது மக்கள் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இதுதான் என உறுதியாக தெரிந்தபின் சோர்ந்துவிட்டார்கள். இதனால்தான் நாங்களும் வீடு வீடாகப் போய் ஓட்டுப்போட வா என அழைத்து வரவில்லை'' என்றார்கள்.

 

vellore



வாக்குப்பதிவன்று பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு தி.மு.க. 15 ஆயிரமும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 25 ஆயிரமும் தந்து ஊக்கப்படுத்தினர். இன்னும் கூடுதலாக தருவார்கள் என எதிர்பார்த்த பூத் கமிட்டி நிர்வாகிகள் நொந்துபோய் விட்டனர். இதேபோல் பூத்துக்கு வெளியே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் களத் தில் நின்றன. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க. நிர்வாகிகள் யாரும் கண்ணில்கூட தென்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளைத் தேடியும் கிடைக்கவில்லை. தொகுதியில் உள்ள பா.ம.க. வாக்குகளை, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வளைத்து விட்டார், அதேபோல் தலித் ஓட்டுக்களை ஏ.சி.சண்முகம் வளைத்துவிட்டார் என்கிறார்கள் களத்தில் உள்ள கட்சியினரே.

 

dmk



இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் ஓட்டு, காட்பாடி காந்திநகர் முகவரியில் உள்ளது. அது வேலூர் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், காட்பாடி சட்ட மன்றத் தொகுதிக்குள் -அதாவது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதேபோல் ஏ.சி.சண்முகத்தின் ஓட்டு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இத னால் இருவராலும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல சில சுயேட்சை வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, குடியாத்தம் நகரில் காந்திநகர் பகுதி மக்களுக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் பதட்டமான சாவடி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், அந்த அறையை திறக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அறையின் பூட்டை உடைத்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டுப் போயிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து புகார் தரப்பட்டது.

மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவின் சதவிகிதம் மந்தமாக இருந்ததால், தொகுதியின் எம்.எல்.ஏ. நந்தகுமார் களத்தில் இறங்கி, இறுதியில் 62% வாக்குப் பதிவாகும்படி பார்த்துக் கொண்டார். இதே போல்தான் ஆம்பூர் தொகுதியில் எ.வ.வேலுவின் ஆட்கள் சுறுசுறுப்பு காட்டியதால் வாக்குப் பதிவின் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடியில் கடைசி வரை 52% இருந்ததைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிவிட்டனர்.

இறுதிக்கட்ட நிலவரமாக வேலூர் எம்.பி. தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமுதாய வாக்குகள் அதே அளவில் பதிவானாலும் அச்சமுதாயத்தின் பெண்கள் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வளவாக பதிவாகவில்லை. ஆனால் துரைமுருகன் எதிர்பார்த்திருந்த மற்ற சமுதாய வாக்குகள் அதிக அளவில் பதிவாகி, தி.மு.க. தரப்பிற்கு தெம்பைத் தந்துள்ளன. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் இரவு, ஓட்டுக்கு தலா 1,000 என ரேட்டை உயர்த்திய ஏ.சி.சண்முகம், வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் வரை இதே டெக்னிக்கை கையாண்டார். தி.மு.க. தனது வாக்குகளை உறுதிப்படுத்தியது. ஆனாலும் வாக்குப்பதிவு முடிந்தபின் இரு கழகங்களுமே பதற்றத்தில்தான் இருந்தன.