Skip to main content

எம்.பி.யின் அராஜகமான பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு - இள. புகழேந்தி விளாசல்!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ela Pugazhenthi | Ramesh Bidhuri | Annamalai | Modi | BJP

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தற்போது நடைபெறுவது சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அல்ல. அது வெறுப்பு கூட்டமாக மாறிவிட்டது. இந்தக் கூட்டத்தில் சந்திரயான் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, இதுவரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே சக எம்.பி மீது பயன்படுத்தாத வார்த்தையை பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்.பி.டானிஷ் அலி மீது பிரயோகித்துள்ளார். இதற்கு, அருகில் இருந்த பாஜக எம்.பிக்களும் கை தட்டி மகிழ்கின்றனர். இதன் பின்னர், சபாநாயகர் இந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு வருத்தம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் சார்பாக மன்னிப்பு கேட்டு நாடகமாடுகிறார்கள். இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இருந்தும், டானிஷ் அலி கூறுகையில், ‘கூட்டத்திற்கு அழைத்து வந்து என்னை என் சமூகத்துடன் சேர்த்து கேவலப்படுத்துவதை உலகம் பார்க்கத் தான் அழைத்தீர்களா’ என்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி20க்கு பின்னர் ‘இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை மோசமாகவுள்ளது’ எனவும் கூறினார். மேலும், மணிப்பூர் முதலான விவகாரங்களையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. பேசியதும் தெரிய வந்துள்ளது. 

 

இது ஒவ்வொரு முறையும் மோடி அண்ட் கோ செய்யும் நாடகம் தான். ஏனென்றால், பா.ஜ.க. எம்.பி. பேசியதற்கு அவரை உடனே சஸ்பெண்ட் செய்து விடாமல் விளக்கம் கேட்பதால் சொல்கிறேன். அதுமட்டுமின்றி, இந்திய நாடு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து உலகம் முழுதும் இருக்கிறது. இந்நிலையில், மோடி அவர்கள் அந்த சம்பவத்தை கண்டித்திருந்தால் கூட உலக நாடுகள் தனது சிந்தனையை சற்று மாற்றியிருக்கும். ஏற்கனவே, அதானியும் மோடியும் உள்ள படத்தை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் காண்பித்து விமர்சித்தார். அதற்குத் தான், மோடி, நேரு குடும்பம் குறித்து பேசினார். எனவே, அவரின் ஆளாகத்தான் ரமேஷ் இன்று பேசியுள்ளார். இப்படிப்பட்ட பாஜக கட்சி வருகிற தேர்தலுடன் முடிந்துவிட்டால், இந்தியாவிற்கு நல்லது. இதனை நான் முன்பே சொல்லியிருந்தேன். ஒருவேளை, மீண்டும் பா.ஜ.க. வருமேயானால், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்கு வேலை இருக்காது. மாறாக அது சந்தைக் கடையாக மாறும்.

 

காவிக் கும்பல் தான் உ.பி. சாமியார் போன்றவர்கள் தைரியமாக பேசுவதற்கு காரணம். சனாதனத்தின் பொருள் புரிந்ததால் நாங்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் அதனை விரும்புகிறீர்கள். மேலும், சனாதனம் என்பது எங்களை தொடக்கூடாது, சில இடங்களில் நடமாடக் கூடாது, படிக்கக் கூடாது, நாங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் குலத் தொழில் செய்ய வேண்டும் போன்ற கொடூரமான கருத்துகளை கொண்டிருப்பது தான். எனவே, இதனை ஆதரித்து எவராவது பேசுவார்களா. இதன் காரணமாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி அவர்கள் வள்ளலார், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் கருத்தாக பேசியுள்ளார். அதுபோன்று வன்முறையாக பேசிய சாமியார்கள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கையில் அண்ணாமலை போன்றோர் பதிலளிக்கவில்லையே. இதற்கெல்லாம் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

 

1967க்குப் பிறகு கலைஞர் 48 அணைகள் வரை கட்டி தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவர். ஆகவே அண்ணாமலை, குஜராத் போன்ற மாநிலங்களில் கழிவுநீர் தொட்டி போன்ற ஒன்றில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்கிறார்கள். மேலும், அங்குள்ள இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி படிக்க விடாமல் செய்து, இந்தியா முழுக்க வேலை செய்ய அலைகிறார்கள். ஏன், குஜாரத், உ.பி.யில் இன்றும் சாலை வசதி, 100% மின்சார வசதி கூட இல்லை. ஆனால், இவர்கள் தி.மு.க.வை கேள்வி கேட்கின்றனர். அண்ணாமலை போன்ற ஆட்களை வைத்துக் கொண்ட பாஜக உருப்படப் போவதில்லை. பாஜக தான் இவர்களுக்கு பணம் கொடுத்து இவ்வாறு பேச வைக்கிறது.

 

அண்ணா அவர்களின் பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி இல்லாத கட்சி தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும். இவர்கள் தினசரி, பெரியார், அண்ணா, கலைஞர், போன்றோரை இழிவுபடுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அண்ணா விவகாரத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷா வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால், அவரோ நட்டாவை சந்திக்க அனுப்பி வைக்கிறார். எனவே, இவர்கள் தி.மு.க.வை பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் பாஜக குறித்து கூறுகையில், ‘வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள்’ என கடுமையாக குறிப்பிட்டார். இந்த ஐந்து முறையில் தான் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இது மாதிரி அதிமுகவை சேர்ந்தோர் பாஜகவிற்கு பதிலளிக்காமல் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அண்ணாமலை ஒருமுறை ஜெயலலிதாவை ஊழல் முதலமைச்சர் என விமர்சித்தார். அதன் பின்னும் செல்லூர் ராஜு அண்ணாமலையிடம் பேசி வந்தார். இதனால், இவர்கள் பேசுவதை பெரிய அரசியல் கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தெருவில் நின்று கத்துபவர்கள் தான் இவர்கள்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 


 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.