Skip to main content

எம்.பி.யின் அராஜகமான பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு - இள. புகழேந்தி விளாசல்!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ela Pugazhenthi | Ramesh Bidhuri | Annamalai | Modi | BJP

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தற்போது நடைபெறுவது சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அல்ல. அது வெறுப்பு கூட்டமாக மாறிவிட்டது. இந்தக் கூட்டத்தில் சந்திரயான் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, இதுவரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே சக எம்.பி மீது பயன்படுத்தாத வார்த்தையை பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்.பி.டானிஷ் அலி மீது பிரயோகித்துள்ளார். இதற்கு, அருகில் இருந்த பாஜக எம்.பிக்களும் கை தட்டி மகிழ்கின்றனர். இதன் பின்னர், சபாநாயகர் இந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு வருத்தம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் சார்பாக மன்னிப்பு கேட்டு நாடகமாடுகிறார்கள். இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இருந்தும், டானிஷ் அலி கூறுகையில், ‘கூட்டத்திற்கு அழைத்து வந்து என்னை என் சமூகத்துடன் சேர்த்து கேவலப்படுத்துவதை உலகம் பார்க்கத் தான் அழைத்தீர்களா’ என்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி20க்கு பின்னர் ‘இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை மோசமாகவுள்ளது’ எனவும் கூறினார். மேலும், மணிப்பூர் முதலான விவகாரங்களையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. பேசியதும் தெரிய வந்துள்ளது. 

 

இது ஒவ்வொரு முறையும் மோடி அண்ட் கோ செய்யும் நாடகம் தான். ஏனென்றால், பா.ஜ.க. எம்.பி. பேசியதற்கு அவரை உடனே சஸ்பெண்ட் செய்து விடாமல் விளக்கம் கேட்பதால் சொல்கிறேன். அதுமட்டுமின்றி, இந்திய நாடு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து உலகம் முழுதும் இருக்கிறது. இந்நிலையில், மோடி அவர்கள் அந்த சம்பவத்தை கண்டித்திருந்தால் கூட உலக நாடுகள் தனது சிந்தனையை சற்று மாற்றியிருக்கும். ஏற்கனவே, அதானியும் மோடியும் உள்ள படத்தை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் காண்பித்து விமர்சித்தார். அதற்குத் தான், மோடி, நேரு குடும்பம் குறித்து பேசினார். எனவே, அவரின் ஆளாகத்தான் ரமேஷ் இன்று பேசியுள்ளார். இப்படிப்பட்ட பாஜக கட்சி வருகிற தேர்தலுடன் முடிந்துவிட்டால், இந்தியாவிற்கு நல்லது. இதனை நான் முன்பே சொல்லியிருந்தேன். ஒருவேளை, மீண்டும் பா.ஜ.க. வருமேயானால், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்கு வேலை இருக்காது. மாறாக அது சந்தைக் கடையாக மாறும்.

 

காவிக் கும்பல் தான் உ.பி. சாமியார் போன்றவர்கள் தைரியமாக பேசுவதற்கு காரணம். சனாதனத்தின் பொருள் புரிந்ததால் நாங்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் அதனை விரும்புகிறீர்கள். மேலும், சனாதனம் என்பது எங்களை தொடக்கூடாது, சில இடங்களில் நடமாடக் கூடாது, படிக்கக் கூடாது, நாங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் குலத் தொழில் செய்ய வேண்டும் போன்ற கொடூரமான கருத்துகளை கொண்டிருப்பது தான். எனவே, இதனை ஆதரித்து எவராவது பேசுவார்களா. இதன் காரணமாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி அவர்கள் வள்ளலார், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் கருத்தாக பேசியுள்ளார். அதுபோன்று வன்முறையாக பேசிய சாமியார்கள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கையில் அண்ணாமலை போன்றோர் பதிலளிக்கவில்லையே. இதற்கெல்லாம் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

 

1967க்குப் பிறகு கலைஞர் 48 அணைகள் வரை கட்டி தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவர். ஆகவே அண்ணாமலை, குஜராத் போன்ற மாநிலங்களில் கழிவுநீர் தொட்டி போன்ற ஒன்றில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்கிறார்கள். மேலும், அங்குள்ள இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி படிக்க விடாமல் செய்து, இந்தியா முழுக்க வேலை செய்ய அலைகிறார்கள். ஏன், குஜாரத், உ.பி.யில் இன்றும் சாலை வசதி, 100% மின்சார வசதி கூட இல்லை. ஆனால், இவர்கள் தி.மு.க.வை கேள்வி கேட்கின்றனர். அண்ணாமலை போன்ற ஆட்களை வைத்துக் கொண்ட பாஜக உருப்படப் போவதில்லை. பாஜக தான் இவர்களுக்கு பணம் கொடுத்து இவ்வாறு பேச வைக்கிறது.

 

அண்ணா அவர்களின் பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி இல்லாத கட்சி தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும். இவர்கள் தினசரி, பெரியார், அண்ணா, கலைஞர், போன்றோரை இழிவுபடுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அண்ணா விவகாரத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷா வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால், அவரோ நட்டாவை சந்திக்க அனுப்பி வைக்கிறார். எனவே, இவர்கள் தி.மு.க.வை பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் பாஜக குறித்து கூறுகையில், ‘வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள்’ என கடுமையாக குறிப்பிட்டார். இந்த ஐந்து முறையில் தான் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இது மாதிரி அதிமுகவை சேர்ந்தோர் பாஜகவிற்கு பதிலளிக்காமல் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அண்ணாமலை ஒருமுறை ஜெயலலிதாவை ஊழல் முதலமைச்சர் என விமர்சித்தார். அதன் பின்னும் செல்லூர் ராஜு அண்ணாமலையிடம் பேசி வந்தார். இதனால், இவர்கள் பேசுவதை பெரிய அரசியல் கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தெருவில் நின்று கத்துபவர்கள் தான் இவர்கள்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்