Skip to main content

இ.டி.யின் அடுத்த டார்கெட் முதல்வர்? 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

ED's next target is CM?

 

பா.ஜ.க.வை தொடர்ந்து எதிர்த்துவரும் கெஜ்ரிவாலை, மோடியின் பா.ஜ.க. அரசால் அடக்கமுடியவில்லை. இந்த நிலையில், அவரை முடக்க நினைக்கும் டெல்லி, அமலாக்கத்துறையை கீ கொடுத்து முடுக்கிவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அவரை மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யும் நோக்கத்தில்தான், 2ஆம் தேதி விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். 

 

ஏற்கனவே இதே விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா, சில மாதங்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதே ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி.யான சஞ்சய் சிங்கும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருக்கிறார். டெல்லியின் இந்த நடவடிக்கை, நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 

ED's next target is CM?

 

கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட உடனேயே, டெல்லி அமைச்சரான அதிஷி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளை நேர்மையான முறையில் வெல்ல முடியாத பா.ஜ.க., இப்படியான குறுக்கு வழியைக் கையில் எடுக்கிறது என்றும், கெஜ்ரிவாலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் போன்ற டெல்லிக்கு ஆகாத தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்றும், இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படலாம் என்றும் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறார். 

 

இதுபற்றி தமிழக நிலவரத்தை விசாரித்தபோது, முதல்வர் ஸ்டாலினை குறிவைத்தும், அமலாக்கத்துறையின் மூவ்கள் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

 

ED's next target is CM?

 

அதற்கு ரூட்டாகத்தான் தமிழகத்தில் மணல் விவகாரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறையினர், அடுத்து தமிழக அமைச்சரவையின் சீனியரும், நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகனைக் குறிவைத்து, ரகசியமாகக் காய்களை நகர்த்தினர். இதையறிந்த அமைச்சர் துரைமுருகன், “என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. நான் எதையும் எதிர் கொள்ளத் தயாராகவே இருக்கேன்” என்ற ரீதியில் சொல்லத் தொடங்கினார். 

 

இப்போது துரைமுருகனை நூல் பிடித்துச் சென்று, முதல்வர் ஸ்டாலின் வரை குடைச்சல் கொடுக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, பல வகையிலும் மணல் மற்றும் கிராவல் விவகாரத்தைத் துழாவி வருகிறதாம் இ.டி. 

 

இந்தியா கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. பயப்படுவதால், அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க. குறிவைப்பதாக இப்போது தி.மு.க.வினரும் புகாரை வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வினரோ, தங்கள் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்து வருவதால், ‘தி.மு.க.வை விடாதீர்கள்’ என்று டெல்லியிடம் முட்டி மோதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.  

 

 

 

 

 

 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.