Skip to main content

CBI வலையில் 12 அமைச்சர்கள்! - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

dddd

 

‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையேயான சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைப்போல தோற்றமளிக்கிறது. ஆனால் அது நீறுபூத்த நெருப்பாகத்தான் நீடிக்கிறது' என்கிறார்கள் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

 

தமிழகத்தின் பா.ஜ.க. பொறுப்பாளரான ரவி, "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.தான். அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என பேட்டியளித்தபோதே அ.தி.மு.க. - பா.ஜ.க. மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளங்களில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ‘வெற்றி பெறும் தமிழகம்' என எடப்பாடி பழனிசாமிக்குப் போட்டியாக விளம்பரங்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல ஓ.பி.எஸ் தரப்பின் விளம்பரங்கள் அமைந்திருந்தன.

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. மாணவரணி நகரச் செயலாளரான ‘பார்' அருளானந்தத்துக்கு நெருக்கமான நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார், சி.பி.ஐ.யால் தேடப்படும் லிஸ்ட்டில் உள்ள ஜேம்ஸ்ராஜா மற்றும் பொள்ளாச்சி விவகாரத்திற்கு முழுமுதற் காரணம் என விமர்சிக்கப்படும் பொள்ளாச்சி வி.ஐ.பி. ஆகியோர் பங்குபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் வேலுமணி நடத்தியிருக்கிறார். தி.மு.க.வின் கனிமொழியும் தோழமைக் கட்சியினரும் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப் போட்டியாக இந்த ஆர்ப்பாட்டம் எனச் சொல்லப்பட்டாலும், மத்திய அரசின் ஏஜென்சியான சி.பி.ஐ.க்கு சவால்விடும் விதத்திலேயே அ.தி.மு.க.வின் நடவடிக்கை அமைந்தது.

 

அ.தி.மு.க.வை மிரட்டி அதிக சீட், கூட்டணி ஆட்சியில் பங்கு ஆகியவற்றைப் பெற பொள்ளாச்சி விஷயத்தை பா.ஜ.க. கையிலெடுத்தது. அதனைத் தொடர்ந்து குட்கா ஊழலில் சி.பி.ஐ.யிடம் சிக்கிய விஜயபாஸ்கர், அறப்போர் இயக்கத்தின் தொடர் ஊழல் புகார்களால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் வேலுமணி மற்றும் மின்சாரத்துறையில் ஊழல் செய்ததாக மத்திய அரசின் நேரடி விசாரணையில் சிக்கியுள்ள தங்கமணி, இவர்களைத் தவிர அமைச்சர்கள் வீரமணி, காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.வி.உதயக்குமார், கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக உடன்பாட்டால் தள்ளிப் போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்களிடம் கேட்டபோது, "முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வித்தியாசமாக கருத்து தெரிவித்தார்கள். அவர்களைக் கூப்பிட்டு பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, ‘முதல்வர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் தேவையில்லாமல் கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம்' என கூறியுள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ரவி, இந்த முறை மாற்றிப் பேசியுள்ளார். மற்றப்படி அ.தி.மு.க. விஷயத்தில் எங்களது அணுகுமுறை மாறவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் அ.தி.மு.க.வினரை சி.பி.ஐ. கைது செய்தது, கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய கதை.

 

அந்த விவகாரத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி வி.ஐ.பி. உள்பட மற்றவர்களைக் கைது செய்யாமல் விட்டால், மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும். அதேபோல் விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில், மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர்கள் மீது மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையும் நிற்காது.

 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திக் கொண்டிருக்கும்போதே இன்னொரு அறையில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் நடத்தியது. அதுபோலத்தான் பா.ஜ.க. இந்தமுறை தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டே அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்தும். ஜனவரி மாதத்தின் இறுதியில் தமிழக அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் வேகம் பெறும்'' என்கிறது மத்திய அரசு வட்டாரம்.

 

இதற்கிடையே ஜனவரி 27-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். நேராக சென்னை வரும் அவர், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு விசிட் அடிக்க உள்ளார் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. அவரை வரவேற்க அ.ம.மு.க.வினர் மட்டுமின்றி அ.தி.மு.க.வினரும் தயாராகி வருகிறார்கள்.

 

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே நிலவும் பனிப்போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. 12-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பார்த்து, அங்கு நடந்துகொண்டிருக்கும் கட்டுமான வேலைகளை இறுதி செய்ய ஓ.பன்னீர்செல்வத்தின் துணையில்லாமல் எடப்பாடி பழனிசாமி, தனியாகச் சென்றுள்ளார். 

 

இந்த நிலையில்... சசிகலா விஜயம், ஓ.பி.எஸ். சண்டை, அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீடு மற்றும் ஜெ. நினைவகம் திறப்பு ஆகியவற்றைப் பற்றி பிரதமரிடம் பேச இன்று (18 ஜன.) டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரங்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணி நீட்டிப்பு பற்றியும் பேசி, ஒட்டுமொத்தமாக ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.