Skip to main content

டெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது! பொடி வைத்துப் பேசிய அமித்ஷா! கண்டுகொள்ளாத மோடி! எடப்பாடியின் டெல்லி விசிட்! 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021
dddd

அ.தி.மு.க.வுடனான பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வது, தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி உதவியை பெறுவது எனும் இரண்டு அம்ச திட்டத்துடன் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் சகிதம் 18-ந்தேதி டெல்லிக்கு விசிட் அடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, கே.பி.முனுசாமி எம்.பி. தலைமையில் டெல்லி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்திற்கு வரும் போதும் பலமான வரவேற்பு. சந்திப்புகளுக்குப் பிறகு எடப்பாடி அளித்த பேட்டியில் உறுதியான தொனி இருந்தாலும் உற்சாகம் மிஸ்ஸிங்.
 

மோடி மற்றும் அமித்ஷாவுடனான எடப்பாடி சந்திப்பில் நடந்தவைகள் குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ’’அமித்ஷாவிடம், "டெல்லியில் குளிர் அதிகம்' என எடப்பாடி சொல்ல, "டெல்லி குளிரை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான்' என அமித்ஷா பொடி வைத்துப் பேசினார்.

அசட்டுச் சிரிப்புடன் அதனை எதிர்கொண்ட எடப்பாடி, "அ.தி.மு.க.தான் கூட்டணியில் மேஜர் பார்ட்னர்' என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும், துக்ளக் விழாவில் "முதல்வர் எடப்பாடி ஆளுமை மிக்கவர்' என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சொன்னதற்கு அமித்ஷாவிடம் நன்றிசொன்ன எடப்பாடி, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியபோது, அமித்ஷா ரியாக்ஷன் அத்தனை உற்சாகமா இல்லை.

"இங்கே பா.ஜ.க. கூட்டணி பற்றி பேசி விட்டு, உங்கள் கட்சி யினரிடம், அதிமுகவை விட்டால் பா.ஜ.க.வுக்கு வேறு வழியில்லை என நீங்கள் பேசுகிறீர்கள்' என கோபப்படாமல் அமித்ஷா சொல்ல, அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்தபோதும், அமித்ஷா ஏற்காமல் அடுத்த விசயத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமாக அரசியல் சூழல் இருப்பது பற்றி அமித்ஷா சொன்னபோது, "அது தி.மு.க ஆதரவு தரப்பிலிருந்து உருவாக்கப்படும் கருத்து' என்றும், "அ.தி.மு.கவுக்கு எதிராக எந்த அலையும் இல்லை என்றும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வை எளிதாக தோற்கடிக்க முடியும்' எனவும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

 

சீட் ஷேரிங் குறித்த பேச்சின்போது, "180 இடங்கள் அ.தி.மு.க.வும், மீதமுள்ள 54 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கும்' என எடப்பாடி சொன்னதை ஏற்காத அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தலில் உருவான கூட்டணி அப்படியே தொடர்வதாக இருந்தால் "பாஜகவுக்கு 45 இடங்கள் வேண்டும். இதில் 30 தொகுதிகள் நாங்கள் கேட்பதும் , மீதியுள்ள 15 தொகுதிகள் உங்கள் விருப்பப்படியும் இருக்கவேண்டும். அதேசமயம், இந்த கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. மட்டுமே கூட்டணியில் இருந்தால் பா.ஜ.க.வுக்கு 100; அ.தி.மு.க.வுக்கு 134' என்கிற கணக்கை சொல்லியிருக்கிறார் (சென்னைக்கு அமித்ஷா வந்தபோது சொன்ன அதே கணக்கு). இதற்கு எடப்பாடி தரப்பில் சொன்ன எந்த விளக்கமும் ஏற்கப்படவில்லை.

அ.தி.மு.கவின் வாக்குகள் சிதறாமல் இருக்க, பிரிந்து சென்றவர்களை (சசி, தினகரன்) சேர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்த, அ.ம.மு.க.விலிருந்து 99% பேர் அ.தி.மு.கவுக்கு திரும்பிட்டாங்க. சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும் சேர்த்துக்கலாம். செல்வாக்கு இல்லாத அவங்களை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது டெல்லிக்கும் தலைவலிதான். அ.தி.மு.க ஜெயிக்க இரட்டை இலை போதும் என அழுத்தமாக விவரித்திருக்கிறார் எடப்பாடி.

 

சந்திப்பின் முடிவில், முதல்வர் வேட்பாளர் பற்றி எடப்பாடி மீண்டும் நினைவுப்படுத்திய போதும், பிரதமரிடம் விவாதிக்கிறேன் என மட்டும் சொல்லி எடப்பாடியை அனுப்பி வைத்து விட்டார் அமீத்ஷா. பிரதமருடனான முதல்வரின் சந்திப்பில் 12 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அதனை முதன்மைச் செயலாளர் மிஸ்ராவிடம் கொடுத்துவிட்டார் பிரதமர். ஜி.எஸ்.டி.யில் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை 19,500 கோடியை விரைந்து ரிலீஸ் செய்ய வேண்டும் ; கடன் வாங்கும் அளவினை அதிகரித்துத் தர வேண்டும் என்பதை விவரிக்க, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையில் என்ன இயலுமோ அதனை கவனிக்கச் சொல்கிறேன் என்றிருக்கிறார் பிரதமர் மோடி.

அரசியல் ரீதியான பேச்சை எடப்பாடி எடுத்தபோது, நேற்றே ஹோம் மினிஸ்டர் (அமித்ஷா) எல்லாத்தையும் என்னிடம் சொல்லிட்டார் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரதமர்.
 
டெல்லி பயணத்தில், கூட்டணியை இறுதி செய்வது மற்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை ஏற்க வைப்பது என்கிற அஜெண்டாவுடன் வந்திருந்தார் எடப்பாடி. அழுத்தமாக அவர் அதைச் சொன்னபோதும், அமித்ஷா எந்த உத்தரவாதமும் தரவில்லை’ என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.

எடப்பாடிக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர் எம்.பி. ஒருவரிடம் நாம் பேசிய போது, ‘’கூட்டணியை இறுதி செய்யலாம் என பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருந்தால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் டெல்லிக்கு அழைத்திருப்பார் அமித்ஷா. ஓ.பி.எஸ்.சை தனி ஆவர்த்தனம் செய்யுமாறு அவரை தூண்டிவிடுவதே பா.ஜ.க.தான். ஆனால், முதல்வர் வேட்பாளராக தன்னை பாஜக தலைமை ஏற்கும் வகையிலான சில செயல் திட்டங்களுக்கு வெவ்வேறு ரூட்டில் விதை ஊன்றி விட்டே டெல்லியிலிருந்து கிளம்பினார் எடப்பாடி‘’ என்கிறார் மிக உறுதியாக.

உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ’’""தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியை வலிமைப்படுத்துவதில் குறியாக இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். இந்த மாதத்தின் துவக்கத்தில் டெல்லி வந்த தினகரனிடம் பா.ஜ.க. மேலிடம் விரிவாகப் பேசியுள்ளது. அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பின் அவசியம், சசிகலா விடுதலை, சொத்துகளை முடக்குவது நிறுத்தம், கட்சித் தலைமை சசிகலா வசம், எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு தேர்தலில் மீண்டும் சீட் உள்ளிட்டவை தினகரனால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியிடம் அமித்ஷா இது பற்றி பேசியதன் பின்னணியும் இதுதான்.


டெல்லி பா.ஜ.கவைப் பொறுத்த வரை, ஓ.பி.எஸ். அல்லது செங்கோட்டையன் ஆகிய இருவரில் ஒருவ ரைத்தான் ஆட்சி தலைமைக்கு கொண்டுவர நினைக்கிறது. இந்த நிலையில், சசிகலா வெளியே வந்ததும், அ.தி. மு.க.வில் உருவாகும் சாதக - பாதகங்களை வைத்தே இறுதி முடிவை எடுக்க தீர்மானித் துள்ளது பா.ஜ.க. தலைமை'' என்கின்றனர் உளவுத்துறையினர்.

ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27-ந்தேதி திறக்க முடிவு செய்துள்ள எடப்பாடி, பா.ஜ.க.வின் எதிர்பார்ப்புகளை விவரித்து இறுதி முடிவெடுக்க அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தை கடந்த 22ஆம் தேதி கூட்டி விவாதித்திருக்கிறார். 
 

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.