Skip to main content

"கவுன்சிலர் பதவிக்குக் கூட தகுதியில்லாதவர் எடப்பாடி; ஊழல் மட்டுமே செய்தவருக்கு எங்கள் ஆட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை..." - புகழேந்தி பேச்சு

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

ு

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மூத்த தலைவர் புகழேந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும்; முதல்வர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திமுக அரசே மிகச் சிறந்த உதாரணம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் எதிர்க் கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ஆட்சி எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பதினெட்டு மாத திமுக ஆட்சி என்று கூறியுள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு உங்களின் பதில் என்ன?

 

இன்றைக்குத் தமிழக முதல்வரின் ஆட்சி இந்தியாவில் எங்குமே நடைபெறாத வண்ணம் மிகச் சிறப்பான ஒரு ஆட்சியைத் தமிழகத்தில் அவர் கொடுத்து வருகிறார். இதை இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கூட ஏற்றுக்கொள்வார்கள். எடப்பாடிக்கு ஒரு கவுன்சிலராக இருக்கக்கூடத் தகுதியில்லாதவர். இன்னும் அவர் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட அவருக்கு எந்த தகுதியும் வந்ததாக நான் நினைக்கவில்லை. யாரோ ஒருவருடைய காலில் விழுந்து பதவியைப் பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்குத் தமிழகத்திலே பெரிய அரசியல் தலைவரைப் போல் பேசி வருகிறார்.

 

ஆட்சியின் மீது தேவையில்லாத உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆட்சி எப்படி நடத்துவது என்று இவர் திமுகவுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கையை காலை பிடித்து இவர் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்ததை போல் இதுவரை தமிழகம் வேறு யாரையும் கண்டதில்லை. அவங்க தலைவி வழியில் எடப்பாடியும் சிறப்பாகக் கொள்ளையடித்து வந்தார். அவர் ஏற்கனவே சொன்னதுதானே, எங்கள் தலைவி வழியில் ஆட்சி நடத்துவோம் என்று பதவியேற்றதும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனால் அவர் ஆட்சியில் இருக்கும்போது அதை நிறைவேற்றி வருகிறார். 

 

ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர் இந்தியாவிலேயே இவருடைய தலைவி ஜெயலலிதா தான். அவர் வழியில் ஆட்சி நடத்தியதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியைப் பற்றி குற்றம் சுமத்த என்ன இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியைக் கடந்த நான்கு வருடமாகத் தொடர்ந்து கொடுத்து வந்த அவர், திமுகவைப் பற்றிப் பேசுவதற்கு உரியத் தார்மீக தகுதியையே இழந்துவிட்டார். எங்கள் தலைவர் இவரைப் போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர் இல்லை. மக்களைச் சந்தித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர். எனவே எடப்பாடி இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நினைத்துப் பார்த்தால் எங்களைப் பற்றிப் பேசவே கூச்சப்படுவார்" என்றார்.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.