Skip to main content

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்- அமித்ஷா யூ-டர்ன் அடித்த பின்னணி என்ன?

Published on 19/09/2019 | Edited on 20/09/2019

“கவர்னர் கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலுக்கு திமுக பயந்துருச்சு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அதான் ஒத்தி வச்சுருச்சு” திமுக எதிர்ப்பாளர்கள் பரப்புகிறார்கள். “திமுக போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு பயந்துவிட்டது. அதனால்தான் ஸ்டாலினை அழைத்து இந்தித் திணிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது. அமித் ஷாவே ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்” என்று திமுக ஆதரவாளர்கள் கவுண்ட்டர் கொடுக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கும்?


கடைசியாக 1986ல் இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போது எம்ஜியார் உயிரோடு இருந்தார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கலைஞரையும் திமுகவினரையும் எம்ஜியார் கடுமையாக அலைக்கழித்தார். மத்திய அரசு இந்தித் திணிப்பு முயற்சியை கைவிட்டாலும், எம்ஜியார் கலைஞரை பழிவாங்கும் நோக்கில் வழக்கை நடத்தி, அவரைத் தண்டனைக் கைதியாக்கினார். தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

அதன்பிறகு இந்தித் திணிப்பு முயற்சி இல்லாமல் இருந்தது. அதேசமயம் இந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி அதிதீவிரமாக தொடர்ந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை. இந்நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி நாளை முன்னிட்டு, இந்தியாவின் பொது அடையாளமாக இந்தி இருந்தால் நல்லது என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்து, தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

 

DMK's anti-Hindi struggle return statment  What is the background of Amit Shah's U-turn

 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 35 மாநிலங்களில் 26 மாநிலங்கள் இந்தியை எதிர்க்கும் உண்மையான நிலை வெளிப்படத் தொடங்கியது. இந்தியால் சொந்த மொழியை இழந்த மாநிலங்களின் கதியும் தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநில அரசு, தங்களுக்கு சொந்தமான ராஜஸ்தானி மொழியை மத்திய அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலை உருவானது.

தமிழகத்தில் வழக்கம்போல திமுகவே முதல் எதிர்ப்பை பதிவுசெய்தது. மராத்தி, வங்காளி, ஒரியா, பிகாரி, கன்னடா என்று வரிசையாக இந்தி எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. இந்தி குறித்த தனது கருத்தை அமித் ஷா திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுக சார்பில் கடுமையான போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாநில ஆளுங்கட்சியான அதிமுகவும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் திமுகவின் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால், அதிமுகவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பான நிலை. ஆம், திமுக போராட்டத்தை தடுக்க முடியாது. திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது அதிமுகவுக்கு எதிராகவே திரும்பும் அபாயம் இருக்கிறது. திமுக போராட்டம் வெற்றிபெற்றால் பாஜகவின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். செய்வதறியாது திணறியது அதிமுக.

இதையடுத்தே ஆளுநர் மாளிகையிலிருந்த மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று திமுக தலைவரிடம் கவர்னர் உறுதியளித்ததாகவும், அதனால் இந்திக்கு எதிரான திமுகவின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஸ்டாலின் அறிவித்தார்.
 

DMK's anti-Hindi struggle return statment  What is the background of Amit Shah's U-turn

 

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அமித் ஷா தனது இந்தி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்தார். “நானே ஒரு குஜராத்திதான். இந்தியை திணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இரண்டாவது மொழியாகவேனும் இந்தியை கற்றால் நல்லது என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். எனது கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், எல்லா வகையிலும் திமுக போராட்ட அறிவிப்பால்தான் அமித் ஷா விளக்கம் அளிக்க நேர்ந்தது என்ற பிம்பத்தை உடைக்க திமுக எதிர்ப்பாளர்களுக்கு பல நிகழ்வுகள் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது. இந்தியை திணிக்க முடியாது என்றும் ஆனால் இந்தியாவுக்கு பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது என்றும் ரஜினி பேசினார். திமுக தலைவர் ஸ்டாலினை கவர்னர் மாளிகை அழைத்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையெல்லாம் ஆளாளுக்கு தங்களுக்குத் தோன்றியபடி மீம்ஸ்களையும், கற்பனை செய்திகளையும் உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் திமுக இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினால், வழக்கொழிந்த இந்திய மொழிகளுக்கு சொந்தக்காரர்கள் தாய்மொழி உணர்வைப் பெற்றுவிடுவார்கள். இந்தியா முழுமையும் இந்தப் போராட்டம் கவனத்தை பெற்றுவிடும். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திமுகவின் போராட்ட உணர்வு பேசு பொருளாக மாறிவிடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உருவாகிவிட்டது. இதைத் தவிர்க்கவே பாஜக இந்த ஏற்பாடுகளை செய்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 

கவர்னர் மாளிகையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே போராட்டத்தை திமுக வாபஸ் பெற்றதாக கூறுகிறவர்கள் ஒரு விஷயத்தை மறைத்துவிடுகிறார்கள். கவர்னரைச் சந்தித்து வெளியே வந்த ஸ்டாலின் போராட்டத்தைக் ஒத்திவைப்பதாக அறிவிக்கிறார். அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து ஏன் அமித் ஷா தனது விளக்கத்தை வெளியிட வேண்டும்? என்பதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.