Skip to main content

தி.மு.க.வுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு... மு.க.ஸ்டாலினின் வியூகம்... உட்கட்சி அரசியலால் கலக்கத்தில் திமுகவினர்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் "ஐபேக்' நிறுவனம் தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் மு.க.ஸ்டாலின். உள்கட்சித் தேர்தல் என்பது தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்கெடுக்கும் கட்சியின் அடிமட்ட ஜனநாயக நடைமுறை. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் தேர்தல் வியூகம் என்பது கார்ப்பரேட் பாணியிலானது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட இந்த இரு வழிகளில் எதில் பயணிக்கப்போகிறது தி.மு.க. என்ற கேள்வி தொண்டர்கள் முதல் அறிவாலய நிர்வாகிகள் வரை இருக்கிறது. அதுகுறித்து, தலைமையிடம் தெரிவிக்கும் ஜனநாயக வலிமை பலருக்கும் வாய்க்கவில்லை.
 

ipac



ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங் கட்சியை மீறி எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்றது இதுதான் முதல் முறை. தி.மு.க.வுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு என்பது முக்கியமானது. அதேநேரத்தில், மறைமுகத் தேர்தலில் ஆங்காங்கே உள்ளடிகளும் பேரங்களும் தி.மு.க.வை கவிழ்த்திருப்பது கட்சித் தலைமைக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூகம் 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கியுள்ள நிலையில், அதற்கான தயாரிப்புக் களமாக அவர் தேர்ந்தெடுத்தது, திருச்சி மாநகரை.

 

dmk



தி.மு.க.வின் வரலாற்றில் திருச்சிக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் உண்டு. 1956-ல் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் 1957 பொதுத்தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்டது அண்ணா தலைமையிலான தி.மு.கழகம். அந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு வென்றது, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில்தான். அதற்கு முன்பே, 1953-ல் அதே ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்லக்குடி போராட்டத் தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கலைஞரும் மற்றவர்களும் சிறைப்பட்டதும் திருச்சி மத்திய சிறையில்தான். 2014 வரை பல திருப்புமுனை மாநாடுகளை திருச்சியில் நடத்தியுள்ளது தி.மு.க.

 

dmk



அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க.வினருக்கான மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்தார் மு.க.ஸ்டாலின். மாநாட்டை நடத்தத் தயாராக இருந்த கே.என். நேருவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பந்தல் சிவா துணையோடு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தார் நேரு. அவரும் அன்பில் மகேஷும் புல்லட்டில் வந்து ஏற்பாடுகளைக் கண்காணித்தனர்.

ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 12 பேர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 243 பேர், ஒன்றிய தலைவர்கள் 112 பேர், 512 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்ற 242 பேர், 5074 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்ற 2090 பேர் உள்பட 6522 பேருடன், சுயேச்சைகள் சிலரும் பங்கேற்க, மொத்தம் 6579 பேர் கலந்து கொண்டனர்.

அத்தனை பேரையும் மக்கள் நலன் காக்கும் உறுதிமொழியை அண்ணா, கலைஞர் மேல் ஆணையிட்டு எடுக்கச் செய்த மு.க.ஸ்டாலின் தனது தலைமையுரையில், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது முதல்வர் கலைஞரிடம் பாராட்டுப் பெற்றதைக் குறிப்பிட்டு, அது போல மக்களிடம் ஊராட்சி பிரதிநிதிகள் பெயர் வாங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி, "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் 23 நாட்கள்தான் இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தன்னிடம் அளிக்கப்பட்ட மாநாட்டுப் பொறுப்பினை, தலைமை எதிர்பார்த்தபடி நிறைவேற்றிவிட்ட நிறைவுடன், மறுநாள் (பிப்ரவரி 1) சென்னைக்கு வந்து முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார் கே.என்.நேரு. அதேநாளில் அவரது திருச்சி மாவட்ட தி.மு.க. மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (அ.ம.மு.க. மட்டுமே இதுவரை இங்கு மூன்று மாவட்ட அமைப்புகளைக் கொண்டிருந்தது) நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல, காடுவெட்டி தியாகராஜன் (திருச்சி வடக்கு), அன்பில் மகேஷ் (திருச்சி தெற்கு), வைரமணி(திருச்சி மத்திய மாவட்டம்) ஆகிய மூன்று பேருக்கு தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது.


இதில் பொதுக்குழு உறுப்பினரான வைரமணிக்கு எதிராக அன்று காலையில் தான் திருச்சி மாநகர தி.மு.க. நிர்வாகிகள், அறிவாலயத்துக்கு புகார் அனுப்பியிருந்தனர். அவரது இடத்திற்கு வழக்கறிஞர் பாஸ்கரனைத்தான் நேரு முதலில் சிபாரிசு செய்திருந்தார். அந்த இடத்தை எதிர்பார்த்திருந்த முன்னாள் துணை மேயர் அன்பழகன் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து புகார் கிளப்பியது. அன்பழகனை சென்னைக்கு அழைத்து சமாதானப்படுத்திய தலைமை, பாஸ்கரனுக்குப் பதில் நேருவின் மற்றொரு சிபாரிசான வைரமணிக்கு மா.செ. பொறுப்பு தந்தது. திருச்சியின் 3 மா.செ.க்களுக்கும் தலா 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

உதயநிதியின் குடும்ப நண்பரான அன்பில் மகேஷின் தாத்தா அன்பில் தர்மலிங்கம் கலைஞர் கால அரசியல்வாதி. கட்சிப் பொறுப்பிலும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த மகேஷின் அப்பா பொய்யாமொழி, ஸ்டாலினின் நண்பர். அன்பில் தர்மலிங்கம் 1951 ஆம் ஆண்டு முதல் 1971 ஆண்டு வரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த திருச்சி மா.செ.வாக இருந்தவர். மாவட்டச் செயலாளர் என்றால் ஜில்லா கலெக்டர் போல என காங்கிரஸ் ஆட்சிக்கால அதிகாரிகளிடம் கெத்தாகப் பேசியவர். கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாகப் பிரிக் கப்பட்ட திருச்சி தி.மு.க.வின் மா.செ. பதவி அன்பில் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த 40 வருட அரசியலில் 30 வருடங்கள் திருச்சி மாவட்ட செயலாளராக வலம் வந்த கே. என். நேரு, இன்னமும் தன் பிடி தளராதபடி கவனமாக இருக்கிறார். மற்ற மா.செ.க்கள் போல தன் வாரிசுகளை நேரு இதுவரை மாவட்ட அரசியலில் முன்னிறுத்தவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில், நேருவின் தம்பி மணிவண்ணன், ரவிச்சந்திரன் மகன் அருண் ஆகியோர் முக்கிய நிர்வாகி கள் அனைவரையும் கவனித்துக் கொண்டனர். இதுவும் தலைமையால் கவனிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளை நேரு திறமையாகக் கையாண்டதால்தான், மாநில அளவிலான பஞ்சாயத்துகளை சமாளிக்க அவருக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது என்கிறார்கள் மேல்மட்டத்தில்.

அதற்கேற்றாற்போல, தி.மு.க. தலைமைக்கு தீராத தலைவலியாக உள்ள சேலம் மாவட்ட நிர்வாகத்தில் பிப்ரவரி 3-ந்தேதி மாற்றங்கள் செய்யப்பட்டன. வீரபாண்டி ராஜாவிடமிருந்து மாவட்ட நிர்வாகம் பறிக்கப்பட்டு, அவரை தேர்தல் பணிக் குழுச் செயலாளராக நியமித்தது அறிவாலயம். சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு எஸ்.ஆர்.சிவலிங்கமும், மேற்கு மாவட்டத்துக்கு டி.எம்.செல்வகணபதியும் நியமிக்கப்பட்டிருப்பது, நீண்டகால பஞ்சாயத்தை தீர்க்குமா, வேறு சிக்கல்களைக் கிளப்புமா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் வீரபாண்டி ஆறுமுகம் காலத்து தி.மு.க.வினர். தி.மு.க. பலவீனமாக உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் நிர்வாக மாற்றம் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கட்சிக்குள்ளேயும் வெளியிலேயும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தி.மு.க. போன்ற தொண்டர்களைப் பலமாகக் கொண்ட இயக்கத்திற்கு கார்ப்பரேட் பாணி அரசியல் ஆலோசனைகள் தேவையா, அது நிர்வாகிகளை கட்டுப்படுத்துமா, தொண்டர்கள் விரும்புவார்களா என்ற கேள்விகள் தொடர்கின்றன. மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவரது மருமகன் சபரீசன் நிர்வாகத்திலான கட்டமைப்பு 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே செயல்படத் தொடங்கிவிட்டது. சுனில் என்பவர் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். ஓ.எம்.ஜி. என்ற பெயரில் ஸ்டாலி னின் நமக்குநாமே திட்டம் தொடங்கி, ஊராட்சிக் கூட்டங்கள் வரையிலான பொதுமக்கள் சந்திப்புகள் இந்த டீமால் வகுக்கப் பட்டன. அது ஸ்டாலினின் இமேஜை உயர்த்தி, தொண்டர்களை களத்தில் தீவிரமாக செயல்பட வைத்தது. நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வெற்றியைத் தந்தது. சில மாதங்களுக்கு முன் சுனிலுக்குப் பதில் பிரசாந்த் கிஷோர் என முடிவாகி, இப்போது உறுதியாகியிருக்கிறது.

2014-ல் மோடி பிர தமராவதற்கும், பீகாரில் நிதீஷ்குமாரும் ஆந்திராவில் ஜெகன்மோகனும் முதல்வர் பதவியை அடைவதற்கும் ஆலோசகராக இருந்து வியூகம் வகுத்தவர் காஸ்ட்லி பட்ஜெட்டில் செயல்படும் பிரசாந்த் கிஷோர். அதேநேரத்தில், உ.பி.யில் காங்கிரசுக்கு அவர் வகுத்த வியூகம் வெற்றி பெறவில்லை. களத்தில் வெற்றி வாய்ப்புகள் உள்ள கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தான் பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்கிறார்கள் அரசியல் வியூகம் வகுப்பாளர்கள்.

"தேர்தல் களத்திற்கான தரவுகளைத் திரட்டி வெற்றிக்கான வியூகம் வகுப்பதுதான் கார்ப்பரேட் பாணி அரசியல் ஆலோசகர்களின் வேலையாக உள்ளது. அத னை செயல்படுத்த வேண்டியது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கொண்ட கட்சியின் பலமான கட்டமைப்புதான். சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகவேண்டும் என கட்சியினரை ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கட்சியின் 15-வது உள்கட்சித் தேர்தல் பிப்ரவரி 21 முதல் தொடங்கும் என்கிற தலைமையின் அறிவிப்பு, உள்ளடிகளை மேலும் அதிகமாக்கிவிடுமோ என்ற அச்சத்தை தி.மு.க.வினரிடம் ஏற்படுத்தியுள்ளது.

கிளை அமைப்புகள் தொடங்கி மாநிலத் தலைமை வரை உள்கட்சித் தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் மா.செ.க்களே ஊராட்சி முதல் ஒன்றியம் வரையிலான பதவிகள் யாருக்கு என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தேர்தல் நாளன்று பெரும் பதட்டமும் போராட்டமுமாகி, கட்சி அமைப்பை சிதைத்துவிடுகிறது. அது பொதுத்தேர்தலில் பாதிப்பை உண்டாக்குகிறது. கட்சி அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்கும் உள்குத்துகள் சகஜமாகிவிடுகின்றன'' என்கிறார்கள் உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக சென்ற அனுபவமுள்ள தி.மு.க.வினர்.

தொண்டர்களை நிர்வாகிகளும், நிர்வாகி களை தலைமையும் அரவணைத்துப் பயணிப்பது தான் தி.மு.க. பாணி அரசியல். கட்சியின் முடிவு களை மீறுபவர்கள் மீது தாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கை பாய வேண்டும். ஆனால், அந்த முடிவு களை எடுப்பது தலைமையாக இருக்கவேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கக்கூடாது என்பதே உடன்பிறப்புகளின் அச்சம் கலந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. கலைஞர் காலத்து அரசியல் இப்போது இல்லை. தேர்தல் நடைமுறைகளும் நேர்மையாக இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை இலக்குடன் பல கட்சிகளும் செயல்படும் நிலையில், கள நிலவரத்தை "மைக்ரோ லெவலில்' துல்லியமாக தெரிந்து கொள்ள ஆலோசகர்கள் அவசியப்படுகிறார்கள். ஆனால், அவர்களால் மட்டுமே வெற்றி அமைந்துவிடாது. தி.மு.க. தனது வாக்கு வங்கியை உயர்த்துவதில்தான் வெற்றியின் சூட்சுமம் உள்ளது.

9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. கோட்டையைப் பிடிப்பதற்கேற்ப கட்சி அமைப் பையும் கார்ப்பரேட் ஆலோசகரையும் பேலன்ஸ் செய்வாரா ஸ்டாலின் என்பதை தி.மு.க.வினர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வும் உன்னிப்பாகக் கவனிக்கிறது.


-கீரன், ஜெ.தாவீதுராஜ்
 

 

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.