Skip to main content

"தாக்குதலில் அடையாளம் தெரியாமல் போன திமுக தலைவர்கள்; கலைஞருக்குத் தகவல் தந்ததால் கண்காணிப்பில் சிக்கினேன்” - காந்தராஜ் பேச்சு

Published on 28/11/2022 | Edited on 29/11/2022

 

y

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அமலிலிருந்த இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " நான் மருத்துவரா இருந்த காலத்தில் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தேன். அதற்காக ஒவ்வொரு வாரமும் என்னுடைய துறைத்தலைவர் என்னை அழைத்துச் செல்வார்.

 

ஆனால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பிறகு நான் சிறைக்குச் செல்லவில்லை. ஒரு 10 நாள் அந்த பக்கமே செல்லாமல் இருந்தேன். அதன்பிறகு என்னை மீண்டும் மருத்துவம் பார்க்க அழைத்தார்கள். இடைப்பட்ட இந்த நாளில் திமுகவில் உள்ள பெரும்பாலானவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்திருந்தார்கள். ஸ்டாலின், மாறன், ஆற்காடு வீரசாமி உள்ளிட்ட திமுகவின் பெரிய தலைகள் அனைவரையும் கைது செய்து சென்ட்ரல் ஜெயிலில் அடைத்து வைத்திருந்தனர். மாறன் தலைமறைவாக இருந்தார். ஆனால் கலைஞர் அவரைச் சரணடையச் சொன்னதையடுத்து அவர் ஹைதராபாத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 

 

நான் சிறைக்குச் சென்று பார்த்தபோது ஒவ்வொருவரின் நிலையும் வித்தியாசமாக இருந்தது. ஸ்டாலின் முகமெல்லாம் வீங்கியிருந்து. ஆற்காடு வீராசாமியை எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்குத் தாக்கியிருந்தார்கள். வலியும் வேதனையுடன் அவர்கள் எல்லாம் அங்கிருக்கிறார்கள் என்பதை யாரும் பார்த்த உடனே தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் நிலைமை இருந்தது. இதை அங்கே சென்று பார்த்தபோது எனக்கே கஷ்டமாக இருந்தது. ஸ்டாலினை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள். மருத்துவமனையின் நிலைமைகளை நான் கலைஞரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். நாளுக்கு நாள் அதிகார தாக்குதல் அதிகமாக அனைவரையும் அடக்கி ஒடுக்கியது.

 

குறிப்பாக எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்ற தொனியில் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தார்கள். இதற்கிடையே என்னையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். நான் தகவல்களை வெளியில் கூறுவதை மோப்பம் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தகவல் எனக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெற்றது. அதனால் நான் கொஞ்சம் உஷாரானேன். குறிப்பாக ஸ்டாலினைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திருமணம் முடிந்த கையோடு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சின்னப் பையனாக அவர் இருந்தார். இவர்களின் கொடுமையை அவர் பொறுத்துக்கொண்டுதான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அங்கு இருந்து வந்தார். இவ்வாறு தமிழகத்தில் திமுகவைக் குறிவைத்து மிகப்பெரிய கைது நடைபெற்றது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.