Skip to main content

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். அதில் திருமலைராய தொண்டைமான் பெயரில் 1758 ஆம் ஆண்டு பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர் பாய்ச்சும் பாசன உரிமையுடன், பிரமன் வயல் நிலத்தை சறுவமானியமாகக் கொடுத்த தகவலடங்கிய கல்வெட்டு என தெரியவந்துள்ளது.

 

இக்கல்வெட்டு குறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது: கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையிலுள்ள எல்லைக் கல் வயலில் வாமன கோட்டுருவமும, எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது. 

 

கல்வெட்டின் காலம்: சாலிவாகன சகாப்தம் 1679,  கலியுகம் 4858 என்றும், வெகுதானிய வருடம் ஆவணி மாதம் மூன்றாம் திகதி (தேதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம். இந்த காலகட்டத்தில் விசயராகுநாதராய தொண்டைமானார் ஆட்சி பொ.ஆ. 1730 முதல் 1789 வரை நிலவியது.

 

கல்வெட்டில் உள்ள தகவல்: ஐந்தரை அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லின் இருபுறமும் 80 வரிகளுடன் எழுத்துப்பொறிப்பு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்குகிறது. சாலிவாகன ஆண்டு மற்றும் கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் என இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வளநாடு, பன்றி சூழ் நாடு, அன்பில் எனப்படும் அம்புக்கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும் என்ற சொற்றொடரில் உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. 

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

மேலும் இவ்வூரில் இருக்கின்ற பகவாந்தராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு, சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன் வயலை சறுவமானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும், வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக கிழக்கு எல்லையாக கீழக்காட்டுக்கு மேற்கு எனவும், தென்புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும், மேற்கு பக்க எல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும், வடப்பக்க எல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு இந்த பெருநான்கு எல்லைக்குட்பட்ட நஞ்சையும் புஞ்சையும் பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கல்வெட்டுப்பகுதி முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது. இறுதியாக தொண்டைமான் மன்னர் சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன் ‘ஶ்ரீ ராம செயம்’ என கல்வெட்டு நிறைவுறுகிறது.

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்: தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடப்பட்டதை உறுதி செய்கிறது. இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும். தொண்டைமான் செப்புப்பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

சறுவ மானியம் வழங்கியது யார்?
திருமலைராய தொண்டைமான் (பொ.ஆ. 1729) மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசயராகுநாதராய தொண்டைமான் பொ.ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில் தனது தந்தையாரின் நினைவாக இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த சறுவ மானியத்தை திருமலைராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆய்வின் போது தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் ஜனார்த்தனன், குமரேசன், உள்ளூர் ஆர்வலர் சாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேநீர் மொய் விருந்து! தாய்மார்களுக்கு உதவிய சிவக்குமார்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

puthukottai tea stall owner helped 11 women in his village

 

கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. மின்சாரம் இல்லை தண்ணீர் இல்லை மொத்த விவசாயமும் காணாமல் போய் இருந்த நேரம். விவசாயிகள், பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இழந்து நின்ற நேரத்தில் அரசு, தனியார் உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அப்போது வங்கிகள், சுய உதவிக்குழு கடன், இன்ன பிற கடன்களை கட்ட நெருக்கடி கொடுத்தது. 

 

அப்போது தான், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் டீ கடைக்காரர் சிவக்குமார், ‘எனது கடையில் டீ குடித்து கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களான விவசாயிகள் கஜா புயலின் கோரபிடியில் சிக்கி தவிப்பதால் எனது கடைக்கு தரவேண்டிய கடன் தொகையை ரத்து செய்கிறேன்’ என்று போஸ்டர் எழுதி ஒட்டி சுமார் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு இவரைக் காரணம் காட்டியே அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசினர்.

 

அதன் பிறகு கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களில் உணவுக்காக தவித்த ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்காக இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு அரசி, பால் உணவுப் பொருட்களை வழங்கி வந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி திரட்டி வழங்கினார்.

 

தற்போது புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் பகவான் என்ற பெயரில் தேநீர் கடை நடத்திவரும் சிவக்குமார், கடந்த வாரம் நலிவுற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ டீ அருந்தி மொய் செய்யுங்கள் என்று தேநீர் மொய் விருந்து நடத்தினார். ஒரு நாள் முழுவதும் தேநீர் குடித்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். பலர் இணையவழியிலும் பணம் அனுப்பினர். மாலையில் ரூ.62 ஆயிரம் மொய் வசூலாகி இருந்தது. அந்தப் பணத்தில் 12 வெள்ளாடுகள் வாங்கிய சிவக்குமார் அதே பகுதியில் ஆதரவற்ற, மிகவும் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து 11 பெண்களை அழைத்து 10 பெண்களுக்கு தலா ஒரு ஆடும், ஒரு பெண்ணுக்கு மட்டும் 2 ஆடுகளும் வழங்கினார். 

 

அப்போது அவர், “இது வெள்ளாடு ஆத்தா ஒரே நேரத்துல 2, 3 குட்டி  போடும். அடுத்த வருசம் நிறைய குட்டிகளோட உன் குடும்பம் நல்லா வரனும்” என்று சொல்லி ஆடுகளை பெண்களிடம் கொடுத்தார். “நீ நல்லா இருக்கனும் தம்பி” என்று சிவக்குமாரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், ‘போன மாசம் ஒருத்தர் கட்சிக்கொடி பறக்க காவித்துண்டோட வேன்லயே வந்தாரு. கூட்ட நெரிசல் கூட ஏற்பட்டுச்சு. தன் கட்சிக்காரர் கொடுத்த செம்மறிகிடா குட்டிய வாங்கி ஒரு அம்மாட்ட குடுத்து நிறைக குட்டி போடும்னுட்டு போனாரு. ஆனா நம்ம சிவக்குமாரு பரவாயில்ல சொந்த செலவுல மொய் விருந்து நடத்தி பல பேர்கிட்ட வசூல் பண்ணி 10 குடும்பம் வாழ ஆடு வாங்கி குடுத்துட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

44 டன் விதைக் கடலையை முடக்கிய அதிகாரிகள்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Officials blocked 44 tons of seed peanuts!

 

தமிழ்நாட்டுக்கே கடலை பருப்பு, கடலை எண்ணெய்க்கு விலை வைக்கும் இடமாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. இங்கிருந்துதான் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைக் கடலை வாங்கிச் செல்கின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் பல மாவட்ட விவசாயிகளும் விதைக் கடலை வாங்க தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 

சில மாதங்களுக்கு முன்பு வரை ஏராளமான கடைகளில் இங்கு 'தரமான குஜராத், ஆந்திரா விதைக் கடலை' கிடைக்கும் என்று விளம்பர பதாகை வைத்திருந்தவர்கள், அதிகாரிகளின் சில ஆய்வுகளுக்குப் பிறகு விதை என்ற வார்த்தையை மறைத்துவிட்டு ‘தரமான கடலை கிடைக்கும்’ என்றே விளம்பர பதாகை வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விதைக் கடலை விற்பனை அதிகரித்துள்ள நிலையில், திங்கள் கிழமை புதுக்கோட்டை விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆலங்குடி கடலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வில் பல கடைகளிலும் இருந்த விதை கடலைகளுக்கு விதைச் சான்று இல்லாமல் இருப்பதும் முளைப்புத்திறன் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரூ. 35.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 43.82 டன் விதைக் கடலைகளை விற்பனை செய்யக் கூடாது என முடக்கி வைத்தனர். தொடர்ந்து விதைச் சான்று பெறாமல் விதைக் கடலை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கடந்த ஆண்டும் விதைக் கடலை மூட்டைகள் விற்பனை முடக்கப்பட்டது.

 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘ஆலங்குடி போனால் தரமான விதை கிடைக்கும் என்று நம்பியே பல மாவட்ட விவசாயிகளும் வருகிறோம். ஆனால் இங்கே முளைப்புத்திறன் குறைந்த, விதைச் சான்று பெறாத விதைகள் விற்பதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் தரமான விதை இல்லையென்றால் விற்பனை செய்யக்கூடாது என்று முடக்கியுள்ள 43.82 டன் கடலையும், அதைக் கடைகளில் அப்படியே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிகாரிகள் சென்ற பிறகு இந்தக் கடலைகளை வியாபாரிகள் என்ன செய்வார்கள் திரும்பவும் எங்களிடமே தரமான விதை என்றுதானே விற்பனை செய்வார்கள். 

 

முடக்கிய விதை என்னாச்சு என்று இதே அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற விவசாயிகள்தான். முடக்கிய கடலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்களா என்றால் இல்லை. கடமைக்கு ஆய்வு என்று இல்லாமல் தரமற்ற கடலைகளை அறவைக்கு அனுப்பிவிட்டு தரமான விதைச் சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்வதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்