Skip to main content

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். அதில் திருமலைராய தொண்டைமான் பெயரில் 1758 ஆம் ஆண்டு பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர் பாய்ச்சும் பாசன உரிமையுடன், பிரமன் வயல் நிலத்தை சறுவமானியமாகக் கொடுத்த தகவலடங்கிய கல்வெட்டு என தெரியவந்துள்ளது.

 

இக்கல்வெட்டு குறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது: கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையிலுள்ள எல்லைக் கல் வயலில் வாமன கோட்டுருவமும, எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது. 

 

கல்வெட்டின் காலம்: சாலிவாகன சகாப்தம் 1679,  கலியுகம் 4858 என்றும், வெகுதானிய வருடம் ஆவணி மாதம் மூன்றாம் திகதி (தேதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம். இந்த காலகட்டத்தில் விசயராகுநாதராய தொண்டைமானார் ஆட்சி பொ.ஆ. 1730 முதல் 1789 வரை நிலவியது.

 

கல்வெட்டில் உள்ள தகவல்: ஐந்தரை அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லின் இருபுறமும் 80 வரிகளுடன் எழுத்துப்பொறிப்பு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்குகிறது. சாலிவாகன ஆண்டு மற்றும் கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் என இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வளநாடு, பன்றி சூழ் நாடு, அன்பில் எனப்படும் அம்புக்கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும் என்ற சொற்றொடரில் உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. 

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

மேலும் இவ்வூரில் இருக்கின்ற பகவாந்தராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு, சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன் வயலை சறுவமானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும், வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக கிழக்கு எல்லையாக கீழக்காட்டுக்கு மேற்கு எனவும், தென்புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும், மேற்கு பக்க எல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும், வடப்பக்க எல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு இந்த பெருநான்கு எல்லைக்குட்பட்ட நஞ்சையும் புஞ்சையும் பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கல்வெட்டுப்பகுதி முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது. இறுதியாக தொண்டைமான் மன்னர் சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன் ‘ஶ்ரீ ராம செயம்’ என கல்வெட்டு நிறைவுறுகிறது.

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்: தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடப்பட்டதை உறுதி செய்கிறது. இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும். தொண்டைமான் செப்புப்பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

சறுவ மானியம் வழங்கியது யார்?
திருமலைராய தொண்டைமான் (பொ.ஆ. 1729) மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசயராகுநாதராய தொண்டைமான் பொ.ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில் தனது தந்தையாரின் நினைவாக இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த சறுவ மானியத்தை திருமலைராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆய்வின் போது தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் ஜனார்த்தனன், குமரேசன், உள்ளூர் ஆர்வலர் சாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.

Next Story

900 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
900 year old Tamil inscription discovered!

சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத் தலைவர் தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பு ஆசிரியர்களான அன்பரசி, விஜயகுமார் ஆகியோரிடம் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி இப்பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாணாபுரம் என்ற கிராமத்திற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்றனர். 

அங்கு மாணவர்கள் காட்டிய விவசாய நிலத்திற்குள் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்பட்டது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. ஆசிரியர் அன்பரசி கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிந்து, படி எடுத்த கல்வெட்டை அதன் விபரங்களை அறிந்து கொள்ள சென்னை தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் முனைவர் சு. ராஜகோபால் அவர்களிடம் படிக்கச் சொல்லி கூடுதல் தகவல் பெற்றுள்ளனர்.

900 year old Tamil inscription discovered!

அதாவது, பூமிக்கு மேல் நின்ற நிலை உள்ள செந்நிற பலகை கல் 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும் உடைய கல்லில் 12 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் கொங்கு வீரபாண்டியன் ( 1265 + 21 = 1286 ) பொது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம். நாடும் வண்ணவுடையும் கொடுத்திருக்கலாம் என்ற செய்தி கல்வெட்டில்  உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரிய வந்தது.