Skip to main content

பா.இரஞ்சித்துக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்... - இயக்குனர் சுசீந்திரன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி   

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற படங்களினால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குனர் சுசீந்திரன். இவரின் 'ஜீனியஸ்' வெளியாகியுள்ளது. இவரது படங்கள், சினிமா உலகம், திரையில் சாதி... இப்படி பல விஷயங்களைப் பேசினோம்.
 

suseenthiran



வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, சாம்பியன்... உங்கள் படங்களில் விளையாட்டு அதிகம் இடம்பெறுகிறது. என்ன காரணம்?

நான் அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரன். செய்தித்தாள் எடுத்தாலும்கூட நேரடியா கடைசி பக்கத்தைத்தான் பார்ப்பேன். அதற்கடுத்து சினிமா செய்திகளை பார்ப்பேன். அதனால் சினிமாவிற்குள் வந்துவிட்டேன். சினிமாவிற்குள் வந்ததால் விளையாட்டு சார்ந்த படங்களை எடுக்கிறேன். என் குடும்பத்தில் எல்லாரும் கபடி விளையாடுபவர்கள்.

உங்கள் படங்களான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, மாவீரன் கிட்டு போன்றவற்றில் சாதி ஏற்ற தாழ்வுக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்கள் உண்டு. ஆனால், காலா, பரியேறும் பெருமாள் படங்கள் எதிர்கொள்ளப்படும் விதமும் உங்கள் படங்கள் எதிர்கொள்ளப்பட்ட விதமும் வெவ்வேறாக இருப்பதை கவனிச்சீங்களா? காரணம் என்னவென்று நினைக்கிறீங்க?

வெண்ணிலா கபடிக்குழு சாதியை வைத்து விளையாட்டைப் பற்றி பேசும் படம். அழகர்சாமியின் குதிரை சாதிப்படம் என்பதைத்தாண்டி அது மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுத்த படம். என் படத்தில் முழுதாக சாதியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்றால், 'மாவீரன் கிட்டு'தான். 'பரியேறும் பெருமாள்' ஏன் இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகிறது என்றால், எனக்குத் தெரிந்து ரஞ்சித் அந்தப் படத்தை தயாரித்தது காரணமாக இருக்கலாம். நிறைய பேர் வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆனால், ரஞ்சித் 'இது தவறு, நான் இதற்காக குரல் கொடுப்பேன்' என்று வெளிப்படையாக பேசுகிறார். அதனால், ரஞ்சித் என்றால் இந்த சாதியை சேர்ந்தவர் என்று ஒரு கட்டம் கட்டப்படுகிறார். அதனால் மக்களும் அதை ஒரு சாதியினர் படமாகவே பார்க்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை 'பரியேறும் பெருமாள்' படத்தில் எதுவாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என்பது போன்ற முடிவைத்தான் கொடுத்திருந்தார்கள். ஒருவேளை ரஞ்சித் இந்தப் படத்தினுள் வரவில்லை என்றால் இவ்வளவு சர்ச்சைகள் வந்திருக்காது. அதே நேரம் இவ்வளவு கவனமும் வரவேற்பும் கூட இருந்திருக்காது. ஸ்டாலின் சார் பார்க்கிறார், நல்லகண்ணு ஐயா வந்து படம் பார்க்கிறார், காரணம் இரஞ்சித் தான்.

 

pa.ranjith



இன்னொரு புறம், ரஞ்சித்தின் படங்களுக்குக் கிடைக்கும் கவனமும் விவாதமும், இத்தனை நாட்களாக சுசீந்திரன் சாதியை எதிர்த்து எடுத்த படங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசப்படுகிறதே?

பல பேர் என்னை 'ஏன் நீங்கள் பொது மேடைகளில் சாதியைப் பற்றி பேச மாட்டுகிறீர்கள்' என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு சாதி படம் என்று எடுத்தால், அந்த சாதி சம்மந்தப்பட்ட மக்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் மட்டும் படம் பார்ப்பதற்கு ஏன் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. அவர்களுக்கு ஏற்கனவே அவர்களின் வாழ்வியலை பற்றித்தெரியும். இங்கு எல்லோருக்கும் போய் சேர்வதுபோல் படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவன் என்ன தவறு செயகிறான், இவன் என்ன தவறு செயகிறான் என்பது தெரியும். நான் எடுத்ததில் சாதி எதிர்ப்புப் படம் என்றால் மாவீரன் கிட்டுதான். அந்தப் படத்திற்கு வெகுஜன மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இலக்கியவாதிகள் இன்னமும் அந்தப் படத்தை பாராட்டுகிறார்கள். சில படங்கள் ரிலீசாகக்கூடிய நேரம், சூழல் போன்றவையும் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். சரியாக மாவீரன் கிட்டு ரிலீசாகும் நேரத்தில் முன்னாள் முதல்வர் அப்போலோவில் இறந்து விட்டார் என்று செய்தி பரவ ஆரம்பித்தது. அது மறுநாள் உறுதி செய்யப்பட்டது. அதனால் திரையரங்கெல்லாம் மூடப்பட்டுவிட்டது. அந்த வாரம் முழுக்க அந்தப் படம் துளி அளவிற்குக்கூட மக்களிடம் போய் சேரவில்லை. எனவே நான் அப்படி நினைக்கவில்லை.

 

maaveeran kittu



'ஜீவா' படத்தில் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் குறித்து சென்சிட்டிவாக படமாக்கினீர்கள். அதற்கு ஏதேனும் எதிர்ப்பை சந்தித்தீர்களா? 

அண்ணன் திருமுருகன் காந்தி சொன்னதுபோல்தான் இது... நீங்கள் எப்போது பொதுநலன், பொதுவாழ்வு என்று வருகிறீர்களோ அப்போது சிக்கல்களும் பிரச்சனைகளும் வருவது இயல்பு. அப்படி வரவில்லை என்றால் நாம் பொதுவாழ்விலோ பொதுநலனிலோ இல்லை என்று அர்த்தம். அந்தப் படத்தில் நான் சொன்ன சமூகம் உண்மையாக அப்படி இருந்ததுதான். அதனால் அவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். அதேபோல் அந்த சமூகம் நேரடியாகத் தாக்காமல் மறைமுகமாகத் தாக்கலாம். ஆனால், அதை பற்றி எனக்குக் கவலை கிடையாது. சினிமாவிற்கு வந்துவிட்டோம். நாம் கேள்விப்படுகின்ற, உண்மையான விஷயத்தை பதிவு பண்ண நினைக்கிறோம், அவ்வளவுதான்.


 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.