Skip to main content

100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன் 

Published on 20/09/2018 | Edited on 07/08/2022

இன்று முன்னாள் முதல்வர் கலைஞரின் 4ஆவது நினைவுதினமாகும். கலைஞர் குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் முன்பு ஒரு மேடையில் பேசியவை இவை... 



 

karu palaniyappan



"எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் கலைஞருடன் பணியாற்றியவர்கள். ஆனால், நான் என்னை போன்று, 7 கோடி தமிழக மக்களுக்காக ஓயாமல் பணியாற்றிய கலைஞரை பற்றி பேச வந்துள்ளேன். எல்லா மாநிலத்திலும்தான் முதல்வர்கள் இருக்கிறார்கள், இவர் மட்டும் என்ன அப்படி அதிசய முதல்வர் என்றால், முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே சிறந்த நிர்வாகியாகவும், ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் போன்று வேறு யாரும் இல்லையா என்றால், இந்த மூன்று தகுதியும் கொண்ட தலைவர்களில் கவிதை எழுதுபவர்கள் இருப்பார்களா? ஒருவரோ இருவரோ இருப்பார்கள், அதிலும் கலைஞர் இருப்பார். சரி அதுமட்டுமா என்றால் திரைத்துறையில் அவர் இருப்பார். இப்படி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்தான் கலைஞர். அதனால்தான் இன்றும் தமிழ்நாடு கட்சி பாகுபாடுகளை எல்லாம் தாண்டி ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.

கலைஞர் தனது இருபதாவது வயதில், 1944-ஆம் ஆண்டு பழனியப்பன் என்னும் ஒரு நாடகத்தை எழுதுகிறார். அந்த நாடகத்தை ஒரு நாடக நடிகர் சங்கம்  நூறு ரூபாய்க்கு வாங்குகிறது. அந்த நூறு ரூபாயை வைத்து திருவாரூரில் தி.க. கூட்டத்தை நடத்தினார். அதன் பின் 1951-ஆம் ஆண்டே அவர் சொந்தமாக கார் வைத்திருந்தார். 1955-ஆம் ஆண்டே அவர் கோபாலபுரத்தின் வீட்டை வாங்கிவிட்டார். அப்போது அவரின் வயது முப்பத்திமூன்று. இதையெல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால் 1957-ல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னே கலைஞர் சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த கழக நிர்வாகிகளில் அவரும் ஒருவர். இது அனைத்தும் அவர் எழுதியே சம்பாதித்தது. அதன் பிறகு 1957-ல் எம்.எல்.ஏ ஆகுகிறார், அதன் பின் 1962-ல் திமுகவினர் ஐம்பது பேர் எம்.எல்.ஏ ஆகிறார்கள். அதில் கலைஞரும் ஒருவர்.
 

kalaignar karunanidhi



ஒருவர் வென்றதும் என்ன நினைப்பார்கள்? 'இப்போது வென்றுவிட்டோம் இதோடு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்துதானே தேர்தல், அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றுதானே நினைப்பார்கள். ஆனால், 1963-ஆம் ஆண்டு கடற்கரைக் கூட்டத்தில் 1967-க்கான தேர்தல் வியூகத்தை வைக்கிறார் கலைஞர், அப்போதுதான் அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க  முடியுமென்று. இவ்வளவு வேகத்தில் சென்றால் எப்படி நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமென்று உடன் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து போகின்றனர். அப்போது கலைஞர் சொல்கிறார் இருநூறு தொகுதிகளில் போட்டியிடுகிறோம், ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் என்று மொத்தம் பத்து லட்சம் தேவை என்றார், அந்த பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 1966-ஆம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் நடக்கின்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் தான் சொன்னதைவிட ஒரு லட்சம் அதிகமாக மொத்தம் பதினோரு லட்சத்தை நிதியாய் கொடுக்கிறார். அப்போது அண்ணா சொல்லுகிறார் 'உன் அம்மா தெரிந்துதான் உனக்கு கருணாநிதி என்று பெயர் வைத்திருக்கிறார்' என்று.

அதே வருடம் 1967-க்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெயராக வாசித்துவந்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லி சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு பதினோரு லட்சம் என்று கூறுகிறார். மொத்த உறுப்பினர்களும் மகிழ்ந்து போகிறார்கள் கலைஞர் அண்ணாவின் அருகில் நிற்கிறார். அதன் பிறகு 1967-ல் முதல்வராகிறார். திராவிடர் கழகத்தின் கொள்கைகளையும் மாநாட்டு தீர்மானங்களையும் ஒவ்வொன்றாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார். இந்தியா வியந்து திரும்பி தமிழகத்தைப் பார்க்கிறது. எதை எதையெல்லாம் இந்தியா பிற்பாடு செய்ததோ அதை எல்லாம் தமிழகம் 67-ல் இருந்து 77-க்குள் செய்தது."

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.