Skip to main content

ஊரடங்கில் ஏழை எளியோரின் மனங்களை வென்ற 'சேவை செவிலியர்' லலிதா! 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டும் என ஊரடங்கு தொடங்கிய முதல் இன்று வரை தன்னால் இயன்ற அளவுக்கு எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் திண்டுக்கல்லைச் சேந்த லலிதா. கடந்த 25.03.2020 முதல் 86 நாட்களைத் தாண்டி ஏழை எளியோர் இருக்கும் இடம் தேடி மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளை உணவுகள் செல்கிறது. செவிலியராகத் தனது பணியைத் தொடங்கி, இன்று மதர் தெரஸா கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் லலிதாவைச் சந்தித்தோம்.

 

ஒரு செவிலியராகப் பணியைத் தொடங்கிய உங்களுக்கு சமூக சேவையின் பக்கம் நாட்டம் வந்தது எப்படி?

 

சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள தம்பக்குளத்துப்பட்டிதான் எங்கள் கிராமம். எனது அப்பா சுப்பையா விவசாயி. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு செவிலியர் படிப்பு மீது ஆர்வம் இருந்தது. காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபாபா மருத்துவமனையில் படித்தேன். அங்கு டாக்டர் கௌசல்யா தேவியின் மாணவியாக இருந்தேன். அவர்களிடம் படிப்பு மட்டுமல்ல ஏழை எளியோர் வந்தால் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு உரிய மருத்துவம் பார்ப்பது எப்படி, சிகிச்சைக்காக வருபவர்களிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன். படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை பார்த்தேன். பின்னர் செவிலியர் கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்து கடந்த 2011இல் மதர் தெரஸா கல்வி நிறுவனம் தொடங்கினோம். எங்கள் கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 100 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 25 மாணவிகளுக்கு இலவசக் கல்வியுடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். காந்தி கிராமத்தில் நான் படித்ததோடு, அங்கு பணியாற்றியதால் மருத்துவ சேவை செய்வதோடு, பொதுச் சேவையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

 

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உணவு வழங்கி வருகிறீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி?

 

ஊரடங்கு போடப்பட்டால் அன்றாடம் வேலைக்குச் சென்று ஊதியம் வாங்குபவர்களுக்கு, சாலையோரம் வசிப்பவர்களுக்குக் கடும் சிரமம் ஏற்படும் என அப்போது எல்லோரும் விவாதித்துக்கொண்டிருந்தோம். ஒரு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கஷ்டப்படுகிறவர்களுக்கு நாங்கள் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து உதவினோம். அடுத்து ஊரடங்கு தொடங்கியபோது ஒரு வாரத்திற்கு உதவலாம் என உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து யாருக்கு எங்கு தேவைப்படுகிறேதா அவர்களிடத்திலேயே கொண்டு சென்று கொடுத்தோம். கரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவலாம் என முடிவு செய்து தொடர்ந்து இருவேளை உணவுகளைத் தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

 

ஊரடங்கு தொடங்கியபோது ஒரு வேளைக்கு 300 பேருக்கு உணவளித்துக் கொண்டிருந்தோம். ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிலர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது 60 பேரில் இருந்து 70 பேருக்குத் தினமும் உணவளித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தொடர்ந்து 80 நாட்களுக்கு மேலாக எளிய மக்களுக்கு உணவு வழங்க, பெரிய உழைப்பும் பணமும் தேவைப்பட்டிருக்கும். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

 

முதலில் எங்களிடம் உள்ள பொருட்களை வைத்துதான் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து வழங்கி வந்தோம். பின்னர் நண்பர்கள் தாங்களாகவே உதவ முன் வந்தார்கள். அந்த நல்ல மனங்கள் கைகொடுத்தது இப்போது பேருதவியதாக உள்ளது.

 

தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வகுப்புகள் நடக்கவில்லை. மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மாணவிகள் ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் கல்லூரி சமையலறையிலேயே உணவு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.



கல்லூரியில் சமைக்கக்கூடிய அம்மாவும் ஊரடங்கில் இங்கேயே தங்கிக்கொள்வதாகத் தெரிவித்தார். அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் எனது நண்பர்கள் மூலம் உணவுகளைத் தயார் செய்து, தேவைப்படுவோருக்கு அவர்களிடத்திலேயே கொண்டுபோய் கொடுத்து வருகிறோம்.

 

மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுத்தான் இந்த உதவிகளைச் செய்து வருகிறோம். அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இங்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்களும் தொடர்ந்து சேவை செய்யலாம் என அனுமதி அளித்தனர்.

 

உங்கள் கனவு, எதிர்கால திட்டம் என்ன?

 

எங்களால் இயன்றவரை இதுபோன்ற பொதுச் சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் இங்கு மட்டுமல்ல எங்கேயுமே தயங்குவார்கள். கரோனா காலத்தில் பலருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நானும் விவசாயக் குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். பசி என்றால் என்ன என்பது தெரியும். கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு முழுக்க முழுக்க அனைவக்கும் கட்டணம் இல்லாமல் மாணவிகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அரசு எப்போது வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என அறிவிக்கிறதோ, அப்போது இதைப் பற்றிய முடிவு எடுத்துத் தெரிவிப்போம். இப்போது எங்கள் கல்லூரியில் செவிலியர் படிப்பில் மாணவிகளை மட்டுமே சேர்த்து வருகிறோம். விரைவில் மாணவர்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

 

பொறுமை, அன்பு, பொறுப்பு, சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட நல்ல தரமான செவிலியர்களை உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அனுப்புவதுதான் எங்கள் கடமை. அதுதான் எங்களது நோக்கம். அதனை மனதளவில் நிறைவாகச் செய்கிறோம். இயலாதவர்களுக்காக இயன்றதைச் செய்யும் எங்களது பொதுச்சேவையும் தொடரும் என்கிறார் சமூக அக்கறையுடன்.

 

 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.