Skip to main content

கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்ட காவல்துறை; கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Delhi woman passed away case police found body parts

 

இப்படியெல்லாம் கூட கொடூரமாகக் கொலை செய்ய மனசு வருமா என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது தலைநகர் டெல்லி. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நம்பர் ஒன் நகரமென்ற மோசமான பெருமையை கடந்த மூன்றாண்டுகளாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லி, ஒரு கொடூரக் கொலைச்சம்பவத்தால் கடந்த சில நாட்களாக திகிலில் இருக்கிறது.

 

மும்பையிலுள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தவர் 26 வயதான ஷ்ரத்தா வாக்கர். அப்போது, பம்பில் 'Bumble' என்றொரு டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் அமீன் பூனவாலா என்பவனோடு பழக்கமான ஷ்ரத்தா, அந்த நட்பே பின்னாளில் காதலாக மாற, தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார். இவர்களின் காதலுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்காத நிலையில், காதலர்கள் இருவரும் மும்பையிலிருந்து டெல்லிக்கு சென்று விட்டார்கள். அங்கே மெஹ்ரவ்லி என்ற இடத்தில் வீடெடுத்துத் தங்கி லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். 

 

Delhi woman passed away case police found body parts

 

இதற்கிடையே, தனது மகளைக் காணவில்லையென ஷ்ரத்தாவைத் தேடத் தொடங்கிய அவரது தந்தை விகாஸ் மதான், மும்பையிலிருந்து டெல்லிக்கு மகள் சென்றிருக்கும் விவரம் தெரியவந்து, டெல்லிக்கு வந்து தேடத் தொடங்கியிருக்கிறார். ஷ்ரத்தாவைத் தேடித் திரிந்த அவரது தந்தை நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், அந்த வீடு அங்கே பூட்டப்பட்டிருந்திருக்கிறது. எனவே, ஷ்ரத்தாவையும் அவளோடு தங்கியிருந்த அஃப்தாபையும் பலரிடமும் விசாரித்துத் தேடியதில் சரியான தகவல் எதுவும் கிடைக்காததால், தனது மகளை அஃப்தாப் கடத்தியதாகக் கூறி டெல்லி போலீசில் ஷ்ரத்தாவின் தந்தை புகாரளித்தார். அதையடுத்து, நவம்பர் 12 ஆம் தேதி அஃப்தாப் அமீன் பூனாவாலாவை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களின் பாணியில் விசாரித்ததில் மிகக்கொடூரமான உண்மைகளைக் கக்கினார் அஃப்தாப்.

 

கடந்த மே மாதத்தில் ஷ்ரத்தாவுடன் டெல்லிக்கு வந்திருக்கிறார் அஃப்தாப் அமீன். அங்கே லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடர்ந்த நிலையில், டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் மேலும் பல பெண்களோடு தொடர்பிலிருப்பது தெரிந்ததால் ஷ்ரத்தாவுக்கும் அவருக்குமிடையே சண்டை எழுந்திருக்கிறது. லிவிங் டுகெதராக வாழ்வதால்தான் இப்படி இருக்கிறாய்... உடனே என்னைத் திருமணம் செய்துகொள் என்று அவரோடு வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அஃப்தாப் மே மாதம் 18 ஆம் தேதியன்று ஷ்ரத்தாவை அடித்துக் கீழே தள்ளி அவரது மார்பின் மீது ஏறியமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் அவனுக்குள் இருந்த சைக்கோ கண்விழித்திருக்கிறது.

 

Delhi woman passed away case police found body parts

 

கொலையை மறைக்க என்ன செய்யலாமென்று யோசித்த அஃப்தாப், கூகுளில் இதுதொடர்பாக பலவற்றையும் சர்ச் செய்ததில், முதலில் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வருகிறார். பின்னர், கூர்மையான கத்தியின் மூலம் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியவன், ரத்தச் சிதறல்களை சல்பர் ஹைபோகுளோரைட் என்ற ஆசிட் மூலமாகத் துடைத்திருக்கிறார். வெட்டிய 35 துண்டுகளைத் தனித்தனியாக பேக்கிங் செய்து அனைத்தையும் அவனது புது ஃப்ரிட்ஜினுள் வைத்து மூடிவிட்டார். 

 

Delhi woman passed away case police found body parts

 

அதன் பின்னர் தினமும் நள்ளிரவு 2 மணியளவில் விழித்துக்கொள்ளும் அஃப்தாப், ஃப்ரிட்ஜிலிருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களில் இரண்டை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று வீசியெறிந்திருக்கிறார். இப்படியாகத் தொடர்ந்து 18 நாட்களுக்கு ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசியெறிந்திருக்கிறார். அதுவரை அவரை யாரும் சந்தேகப்படவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த மே மாதத்துக்குப் பின் தற்போது நவம்பர் வரை 5 மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டில் தான் அஃப்தாப் வசித்துள்ளார். வழக்கம்போல் டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்களை அவ்வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களோடு தனிமையில் இருந்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் ஃப்ரிட்ஜில் இருக்கும் போதே இப்படி தனிமையில் இருந்ததாக அவர் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர். பிண வாடை அடிக்கக் கூடாதென்பதற்காக சாம்பிராணி புகையெல்லாம் போட்டிருக்கிறார்.

 

Delhi woman passed away case police found body parts

 

கொடூரமான கொலைகாரனான அஃப்தாப்பை உடல் பாகங்களை வீசியெறிந்த காட்டுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், இதுவரை 10 உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சைக்கோ கொலைகாரன் ஷ்ரத்தாவை மட்டும் தான் கொன்றுள்ளானா, வேறு பெண்களையும் கொலை செய்திருப்பானா என்ற கோணத்திலும் விசாரணை சென்றுள்ள நிலையில், தலைநகர் டெல்லியே பீதியில் உறைந்துள்ளது.

 

- தெ.சு.கவுதமன்

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.