Skip to main content

கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்ட காவல்துறை; கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Delhi woman passed away case police found body parts

 

இப்படியெல்லாம் கூட கொடூரமாகக் கொலை செய்ய மனசு வருமா என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது தலைநகர் டெல்லி. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நம்பர் ஒன் நகரமென்ற மோசமான பெருமையை கடந்த மூன்றாண்டுகளாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லி, ஒரு கொடூரக் கொலைச்சம்பவத்தால் கடந்த சில நாட்களாக திகிலில் இருக்கிறது.

 

மும்பையிலுள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தவர் 26 வயதான ஷ்ரத்தா வாக்கர். அப்போது, பம்பில் 'Bumble' என்றொரு டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் அமீன் பூனவாலா என்பவனோடு பழக்கமான ஷ்ரத்தா, அந்த நட்பே பின்னாளில் காதலாக மாற, தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார். இவர்களின் காதலுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்காத நிலையில், காதலர்கள் இருவரும் மும்பையிலிருந்து டெல்லிக்கு சென்று விட்டார்கள். அங்கே மெஹ்ரவ்லி என்ற இடத்தில் வீடெடுத்துத் தங்கி லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். 

 

Delhi woman passed away case police found body parts

 

இதற்கிடையே, தனது மகளைக் காணவில்லையென ஷ்ரத்தாவைத் தேடத் தொடங்கிய அவரது தந்தை விகாஸ் மதான், மும்பையிலிருந்து டெல்லிக்கு மகள் சென்றிருக்கும் விவரம் தெரியவந்து, டெல்லிக்கு வந்து தேடத் தொடங்கியிருக்கிறார். ஷ்ரத்தாவைத் தேடித் திரிந்த அவரது தந்தை நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், அந்த வீடு அங்கே பூட்டப்பட்டிருந்திருக்கிறது. எனவே, ஷ்ரத்தாவையும் அவளோடு தங்கியிருந்த அஃப்தாபையும் பலரிடமும் விசாரித்துத் தேடியதில் சரியான தகவல் எதுவும் கிடைக்காததால், தனது மகளை அஃப்தாப் கடத்தியதாகக் கூறி டெல்லி போலீசில் ஷ்ரத்தாவின் தந்தை புகாரளித்தார். அதையடுத்து, நவம்பர் 12 ஆம் தேதி அஃப்தாப் அமீன் பூனாவாலாவை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களின் பாணியில் விசாரித்ததில் மிகக்கொடூரமான உண்மைகளைக் கக்கினார் அஃப்தாப்.

 

கடந்த மே மாதத்தில் ஷ்ரத்தாவுடன் டெல்லிக்கு வந்திருக்கிறார் அஃப்தாப் அமீன். அங்கே லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடர்ந்த நிலையில், டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் மேலும் பல பெண்களோடு தொடர்பிலிருப்பது தெரிந்ததால் ஷ்ரத்தாவுக்கும் அவருக்குமிடையே சண்டை எழுந்திருக்கிறது. லிவிங் டுகெதராக வாழ்வதால்தான் இப்படி இருக்கிறாய்... உடனே என்னைத் திருமணம் செய்துகொள் என்று அவரோடு வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அஃப்தாப் மே மாதம் 18 ஆம் தேதியன்று ஷ்ரத்தாவை அடித்துக் கீழே தள்ளி அவரது மார்பின் மீது ஏறியமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் அவனுக்குள் இருந்த சைக்கோ கண்விழித்திருக்கிறது.

 

Delhi woman passed away case police found body parts

 

கொலையை மறைக்க என்ன செய்யலாமென்று யோசித்த அஃப்தாப், கூகுளில் இதுதொடர்பாக பலவற்றையும் சர்ச் செய்ததில், முதலில் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வருகிறார். பின்னர், கூர்மையான கத்தியின் மூலம் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியவன், ரத்தச் சிதறல்களை சல்பர் ஹைபோகுளோரைட் என்ற ஆசிட் மூலமாகத் துடைத்திருக்கிறார். வெட்டிய 35 துண்டுகளைத் தனித்தனியாக பேக்கிங் செய்து அனைத்தையும் அவனது புது ஃப்ரிட்ஜினுள் வைத்து மூடிவிட்டார். 

 

Delhi woman passed away case police found body parts

 

அதன் பின்னர் தினமும் நள்ளிரவு 2 மணியளவில் விழித்துக்கொள்ளும் அஃப்தாப், ஃப்ரிட்ஜிலிருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களில் இரண்டை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று வீசியெறிந்திருக்கிறார். இப்படியாகத் தொடர்ந்து 18 நாட்களுக்கு ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசியெறிந்திருக்கிறார். அதுவரை அவரை யாரும் சந்தேகப்படவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த மே மாதத்துக்குப் பின் தற்போது நவம்பர் வரை 5 மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டில் தான் அஃப்தாப் வசித்துள்ளார். வழக்கம்போல் டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்களை அவ்வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களோடு தனிமையில் இருந்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் ஃப்ரிட்ஜில் இருக்கும் போதே இப்படி தனிமையில் இருந்ததாக அவர் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர். பிண வாடை அடிக்கக் கூடாதென்பதற்காக சாம்பிராணி புகையெல்லாம் போட்டிருக்கிறார்.

 

Delhi woman passed away case police found body parts

 

கொடூரமான கொலைகாரனான அஃப்தாப்பை உடல் பாகங்களை வீசியெறிந்த காட்டுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், இதுவரை 10 உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சைக்கோ கொலைகாரன் ஷ்ரத்தாவை மட்டும் தான் கொன்றுள்ளானா, வேறு பெண்களையும் கொலை செய்திருப்பானா என்ற கோணத்திலும் விசாரணை சென்றுள்ள நிலையில், தலைநகர் டெல்லியே பீதியில் உறைந்துள்ளது.

 

- தெ.சு.கவுதமன்

 

 

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.