Skip to main content

விவசாயிகளைத் தூண்டிவிடுகிறார்கள்..! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

vanathi srinivasan

 

'ரத்து' என்ற ஒரு வார்த்தையை எதிர்பார்க்கிறோம். எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்களது எதிர்பார்ப்பு அதுதான் எனப் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம். இதுதொடர்பாக நம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.

 

'மன் கீ பாத்'தில் பிரதமர் விவசாயிகளுக்கு விளக்கமளித்திருக்கிறார். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும், போராட்டம் நீடிக்கிறது. அப்படியென்றால் அவர்களது அச்சம் நியாயமாகத்தானே இருக்கும்?

 

மன் கீ பாத்தில் பிரதமர் விளக்கம் அளித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள் வாயிலாக, பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அவர்களுக்கான அச்சம், சந்தேகத்திற்கெல்லாம் மத்திய அரசு பதில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. 

 

அவையில்லாமல் போராட்டக் களத்திலேயே ஒரு சில நக்சல் பின்னணி கொண்ட நபர்கள், தேசப் பிரிவினையை ஆதரிக்கக்கூடிய நபர்கள், உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. 

 

விவசாயிகளுடைய போராட்டம் என்பது விவசாயிகளுடைய நன்மையை, பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய விதத்தில் இருக்க வேண்டுமென்றால், இம்மாதிரியான தலைவர்கள், பிரிவினைவாத சக்திகள் போராட்டத்தின் உள்ளே நுழைவதை விவசாயிகள் அனுமதிக்கக்கூடாது. விவசாயிகளுடைய நியாயமான பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க எப்போதும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. 

 

சரத்பவார், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோதுதான், பட்டேல் கமிட்டி என அமைக்கப்பட்டு, விவசாய விளை பொருட்களுக்கான சந்தைகளை விரிவாக்கம் செய்வது, சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிக்கை பெறப்பட்டது. 

 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயம், இங்கு தமிழகத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது, இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டு விவசாயிகளுக்கு அந்தப் பலன் கிடைக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள் அல்லது ஆதரவு என்கிற பெயரில் விவசாயிகளைக் குழப்புகிறார்கள்.

 

போராட்டத்தில் நக்சல் பின்னணி உள்ளவர்கள், அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள் என பா.ஜ.க குற்றம் சாட்டுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கிறதே?

 

ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. அதற்கான ஆதாரத்தை, துண்டுப் பிரசுரங்களை வைத்துத்தான் மத்திய அரசு சொல்கிறது. 

 

கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு விலை நிர்ணயம் செய்கிறது. அரசே விலை நிர்ணயம் செய்தும் கூட்டுறவு ஆலைகள் தர மறுக்கும் போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் படி தருவார்களா? என்ற சந்தேகம், அச்சம் விவசாயிகளுக்கு வரத்தானே செய்யும்?

 

சர்க்கரை ஆலை பிரச்சனைகள் தொடர்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதற்குப் பின்பாக தமிழகத்தில் அவர்களுக்கு வறட்சி என்று மாநில அரசு அறிவிக்கும்போது சலுகைகள் வழங்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 

 

மத்திய அரசின் ரிசர்வ் வங்கி மூலமாகவும் நிதித்துறை செயலாளர்கள் வாயிலாகவும் சர்க்கரை ஆலைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண்பதற்காகப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில சர்க்கரை ஆலைகளின் நிர்வாகச் சீர்கேட்டினால் அவர்கள் வங்கிகள் மூலமான நடவடிக்கைக்குகூட உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் விவசாயிகளுடைய நலன் என்பதுதான் பிரதானம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 

 

cnc

 

சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவது மத்திய அரசின் பொறுப்பல்ல. அது அந்த ஆலைகளுடைய பொறுப்பு. ஆனாலும் கூட அந்த ஆலைகள் சட்டப்படி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய முதல் தொகையை விவசாயிகளுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 

 

இந்தச் சட்டம் எப்படி அந்தச் சட்டத்திலிருந்து வித்தியாசப்படுகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது தனியார்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு அவர்கள் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்றால் அவர்களுக்கு 90 நாட்களுக்கு உள்ளாக மாவட்ட கலெக்டர் வாயிலாகத் தீர்வும், கூடுதலாக அந்தத் தொகையைவிட ஒன்றரை மடங்கு அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்குவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. 

 

இந்தச் சட்டம் ஏதோ புதிதான சட்டம் அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே கான்ட்ராக்ட் ஃபார்மிங் சட்டம் அமலில் இருக்கிறது. அந்தச் சட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அந்தச் சட்டத்தின் இன்னொரு சீர்திருத்தமாக காலக்கெடுவையும், மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரத்தையும், அதற்கான அபராதத் தொகையையும் இந்தச் சட்டம் புதிதாக விவசாயிகளுக்கு வழங்குகிறது. 

 

மத்திய அரசின் விளக்கத்தை விவசாயிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களுக்கும் ஏற்கவில்லை என்கிறபோது பா.ஜ.க.வின் பதில் என்ன? 

 

இத்தனை வருடங்களாக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்களோ அதைத்தான் விவசாயிகளுக்காக இப்போது பிரதமர் செய்திருக்கிறார். ஏனென்றால் உரம், நீர், மின்சாரம் இவற்றையெல்லாம் தாண்டி விவசாயிகளுக்கான விளைபொருள் என்பதுதான் இத்தனை வருடக் காலத்தில் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக விளங்கி வந்தது. ஆக இடைத்தரகர்களை நீக்குவது மட்டுமல்ல, விவசாயிகள் தங்களது விளைபொருளை நாடு முழுவதும், எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு விற்க முடியும் என்கிற மிகப்பெரிய மாற்றத்தை இந்தச் சட்டம் கொண்டுவருகிறது. இத்தனை காலம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக, நன்மையைக் காப்பதாகக் கூறிக்கொண்டிருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், இப்போது தயவு செய்து விவசாயிகளைத் தூண்டிவிட வேண்டாம். அவர்களுக்கு ஒரு பலன் கிடைக்கிறது. சுதந்திரம் அடைந்த இத்தனை வருடக் காலத்தில் விவசாயிகளுக்கான மிகப்பெரிய மாற்றம் நிகழவிருக்கிற இந்தச் சூழலில் நீங்கள் விவசாயிகளைத் திசைதிருப்பாதீர்கள். 

 

 

 

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது