Skip to main content

“ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதல்வரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை” -கே.பாலகிருஷ்ணன்

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
K.Balakrishnan-MLA

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக, பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றன என்றும் விவசாயிகளின் பெயரை குறிப்பிட்டு பயனடைந்துள்ளனர் என்றும் மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? 

 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் விவசாயிகளுக்கு புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று பேசுகிறார். நீங்கள் போட்ட சட்டம் புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று விவசாயிகள்தானே சொல்ல வேண்டும். இந்த சட்டம் பயன் அளிக்குமா? பயன் அளிக்காதா? என்பதை அனுபவத்தில் விவசாயிகள்தானே சொல்ல முடியும். 

 

அப்படியென்றால் விவசாயிகள் விவரம் தெரியாமல் போராடுகிறார்களா? புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். விவசாயிகள் இந்த அளவுக்கு கொதித்தெழுந்து போராட வந்திருக்கிறார்கள், அதனை புரிந்து கொள்ள முடியாத ஜனநாயக பண்பு இல்லாமல் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. 

 

ddd

 

விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளார்களே?

 

விவசாயிகளுக்கு பாதிப்பு வரும்போது அவர்களுக்காக போராடாத கட்சி நாட்டில் இருந்து என்ன பிரயோஜனம். அரசியல் கட்சி எதற்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு வரும்போது, அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அதனை தட்டிக் கேட்பது, அதற்காக போராடுவதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கம். 

 

விவசாயிகளுக்கு பாதிப்பான அந்த சட்டத்தை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள்
போராடுவதில் என்ன தவறு. இன்னொன்று விவசாயிகள் ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் மட்டும் போராடிட முடியுமா? 

 

இவர்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தூண்டிவிடுகிறது என்றால் கட்சியினர் மட்டும்தானே வருவார்கள். பொதுவான விவசாயிகள் எப்படி வருவார்கள். டெல்லி எல்லைகள் ஸ்தம்பிக்கும் வகையில் அவர்கள் கூடியுள்ளனர். 

 

dd

 

 

ஒப்பந்தம் போட்டப்படியே விவசாயிகளின் பொருளுக்கான விலையை கொடுப்பார்கள் என்று கூறுகிறார்களே?

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்துள்ள ஒரு சாதாரண விவசாயி எப்படி விலை பேச முடியும். ஒப்பந்தம் போட்ட நிறுவனம்தான் கடன், இடுபொருள்கள் கொடுக்கப்போகிறது. கடன் கொடுக்கிறவர்கள் சொல்கிற விலையை மீறி நீங்கள் சொல்லும் புது விலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நீங்கள் சொல்லும் விலையை ஒப்பந்தத்தில் போடுவார்களா? அப்படியே போட்டாலும் அந்த விவசாய பொருள் கொடுக்கும் நேரத்தில் அதன் தரம் குறைவாக இருப்பதாக கூறி அந்த விலையை குறைப்பார்கள். ஒப்பந்ததில் சொன்னப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் யாரிடம் முறையிடுவது.

 

அரசு அதிகாரி ஆர்.டி.ஓ.விடம் முறையிடலாம் என்று சொல்கிறார்களே?  

தனியார் கரும்பு ஆலையிடம் விவசாயிகள் தங்கள் கரும்பை கொடுப்பதாக ஒப்பந்தம் போடுகிறார்கள். இதற்கான விலையை மாநில அரசு அறிவிக்கிறது. மாநில அரசு அறிவிக்கிற விலையை தனியார் கரும்பு ஆலைகள் கொடுக்கணுமா வேண்டாமா? மாநில அரசு அறிவிக்கிற விலையை கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. 

 

ஆனால் இந்தியா முழுவதும் தனியார் கரும்பு ஆலைகள் அந்த விலையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. தமிழகம் உள்பட இந்தியா முழுக்க 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி 6 ஆயிரம் கோடி இருப்பதாக சொல்கிறார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது. இதுவரை ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதலமைச்சரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. 

 

நீதிமன்றமே சொன்ன பிறகு என்னால் கொடுக்க முடியாது என்று தனியார் ஆலை முதலாளிகள் சொல்கிறார்கள். இதனால் எந்த முதலாளியை கைது செய்தார்கள். எந்த முதலாளி சொத்துகளை பறிமுதல் செய்தார்கள். இத்தனைக்கும் இது விவசாயியும் தனியார் ஆலையும் போட்ட ஒப்பந்தம் இல்லை. இருவருக்கும் பொதுவாக மாநில அரசு நிர்ணயித்த விலை. அதையே வாங்க முடியவில்லை. 

 

இந்த மத்திய, மாநில அரசுகள் முதலில் பல வருடங்களாக பாக்கி உள்ள கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை தனியார் ஆலை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கட்டும். இதையே வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், இன்னும் பல மடங்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் போடப்பட்ட விலையை வாங்கிக்கொடுப்போம் என்பதை எப்படி நம்புவது?

 

புதிய வேளாண் திருத்த சட்டம் தேவையற்றது மட்டுமல்ல பாழ்படுத்தும் சட்டம். விவசாயிகளை நாசப்படுத்தும் திட்டம் என்றார் அழுத்தமாக.

 

 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.