Skip to main content

டெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி! பா.ஜ.க.வுக்குள் ரகசிய வேட்டை!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

eps

 

தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடந்தன. இந்த நியமனங்களில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய முக்கியஸ்தர்கள் பலருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதததும், பொறுப்புகளே சிலருக்கு கொடுக்கப்படாததும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதில் பழைய அ.தி.மு.க.வினரை தாய்க்கழகமான அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டுகளை அமைச்சர்களுக்கு தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

அப்போது, "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பா.ஜ.க.வில் உள்ள முன்னாள் அ.தி.மு.க.வினரை நாம் இழுப்பது டெல்லிக்கு கோபத்தை வரவழைக்காதா?'' என அமைச்சர் கே.சி.வீரமணி, எடப்பாடியிடம் கேட்க, "கூட்டணி உறவு ஆரோக்கியமாக இல்லை. நமக்கு எதிரானவைகளை அவர்கள் (டெல்லி) எடுக்கின்றனர். இனி அவர்களுக்கும் நமக்கும் மத்திய-மாநில அரசு என்கிற அளவில் மட்டுமே உறவு. அதனால், நமக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்'' என்றிருக்கிறார் எடப்பாடி.

 

பா.ஜ.க.வில் இணைந்திருந்த ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் எதிர்பார்த்தது தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் பதவி. ஒதுக்கப்பட்டது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி. ஏகத்துக்கும் அதிருப்தியடைந்திருந்தார் சீனிவாசன்.

 

உளவுத்துறை மூலம் இதனையறிந்த எடப்பாடி, அமைச்சர் வீரமணியிடம் அதனை விவரிக்க, உடனே சீனிவாசனிடம் பேசினார் வீரமணி. இவர் எடுத்த முயற்சியில், பா.ஜ.க.விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துகொண்டார் சீனிவாசன். இதனைப் பரபரப்பான செய்தியாக மாற்றியது அ.தி.மு.க. இதனை ஜீரணிக்க முடியாமல் டெல்லி தலைமைக்கு எடப்பாடிக்கு எதிராக போட்டுக் கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்.

 

bjp

 

அதேபோல, பா.ஜ.க. தமிழக தலைவர் பதவியை எதிர்பார்த்து பல்வேறு காய்களை நகர்த்திய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரனும் எதிர்பார்த்தது கிடைக்காததால் அதிருப்தியடைந்திருந்தார். தி.மு.க.வுக்குள் நயினாரை இழுக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதை அறிந்து, நெல்லைக்கு பறந்த பா.ஜ.க. தலைவர் முருகன், நயினாரைச் சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். நயினாரோ, பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் முன்னாள் கனிமவளத்துறை அமைச்சர் நயினாரை இழுக்கும் அசைன்மெண்ட்டை இந்நாள் கனிமவள அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்தார் எடப்பாடி.

 

admk

 

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "நயினாரிடம் பேசிய சண்முகம், பா.ஜ.க. மீது உங்களுக்குள்ள கோபம் நியாயமானதுதான். அதற்காக, தி.மு.க.வை கையிலெடுத்து விடாதீர்கள். அது உங்களின் அரசியலுக்கு நல்லதல்ல. மீண்டும் தாய்க்கழகத்திற்கு வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். நயினாரும் இதனைத் தட்டிக்கழிக்காமல், கொஞ்சம் டைம் கொடுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார். அதனால் நயினாரும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு உண்டு. மதுரை மற்றும் நெல்லைக்கு இந்த வாரம் செல்லும் எடப்பாடியின் பயணத்தில் நயினாரைச் சந்திக்க வைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது''’என்கிறார்கள்.

 

நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி வலை வீசுவதையும் பா.ஜ.க. தலைவர் முருகனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறார் முருகன். இது குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்த போது, ’’புதிய தலைவரான முருகன் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தருவதில்லை. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருகிறார். நிர்வாகிகள் நியமனத்திலேயே இதனைக் கவனிக்க முடியும். இதனால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருகிறது. இதனையறிந்து, பா.ஜ.க.வை பலகீனப்படுத்த அ.தி.மு.க.-தி.மு.க. தலைமைகள் அரசியல் செய்கின்றன. இதனை டெல்லியிடம் சொல்லியுள்ள முருகன், பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுவதாகப் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடிமீது ஏக கடுப்பில் இருக்கிறது எங்களது (பா.ஜ.க.) தேசியத் தலைமை!'' எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

CNC

 

பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுகிறாரா? என அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "மத்திய அரசின் முடிவுகளுக்கு எடப்பாடி அரசு ஆதரவாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. மற்றபடி, அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு சரியில்லை. அதனால், டெல்லியுடன் மோதும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க. அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மா.செ.க்களின் எண்ணங்களும்கூட இதுவாகத் தான் இருக்கிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்று தற்போது அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற திட்டத்தோடு ரகசிய வேட்டையைத் துவக்கியுள்ளார் எடப்பாடி. அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. தலைமை இயங்கும் நிலையில், அவர்களுடன் மோதுவது என்கிற முடிவை எடுத்ததனால் தான் பா.ஜ.க.வுக்குள் ஊடுருவுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் மிக உறுதியாக.


 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.