Skip to main content

மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்... 

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

dddd


சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட விசயங்கள் கூட நம் நாட்டில் சர்வ சாதரணமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உதரணமாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருட்களை அதிக விலை வைத்து விற்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள் தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று 'கலப்படம்'. பால் முதல் மருந்துப் பொருட்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம் நுகர்வோரின் உடல் நலனுக்கே தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதுதான் மிகக் கொடுமையான விசயம்.
  
இப்படித்தான் நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லத்தில் கலப்படம் நடைபெறுகிறது. அது நுகர்வோருக்கு உயிர் கொல்லியாகவும் மாறுகிறது என்ற தகவல் நமக்கு கரூர் மாவட்டத்தில் இருந்துவர நாம் விசாரணையில் இறங்கினோம்.
   

ddd

 

கரூர் மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டரில் இருக்கிறது வெள்ளக்கல் மேடு. கரும்பு மற்றும் விவசாயம் நன்றாக விளையும் பூமி இது. இங்கே தான் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அந்த அச்சு வெல்ல தொழிற்சாலை இயங்கி வருகிறது. மிகவும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலைக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. இங்கு வேலை செய்யும் பலரும் மாஸ்க் இல்லாமலேயே வேலை செய்கிறார்கள்.
 

அதேபோல் இவர்கள் பெரிய கொப்பறை சட்டியில் கரும்புசாற்றை போட்டுத்தான் காய்ச்சுகிறார்கள். தொடர்ந்து அதில் உள்ள அழுக்கை நீக்க சோடா உப்பை குறிப்பிட்ட அளவில் போடுகிறார்கள். சிறிது நேரத்தில் அழுக்கு அப்படியே மேலே வந்து விடும். அதனை எடுத்து அகற்றி விடுகிறார்கள். பின்னர் வெல்லத்துக்கு கலர் கொடுக்க அவர்கள் நினைத்த அளவு சோடியம் ஹைட்ரோ சல்பேட்டை போடுகிறார்கள். தொடர்ந்து இரண்டு மணி நேரம் கிளறினால் கரும்பு சாறு பாகு ரெடியாகி விடும். பின்னர் நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம் தயாரித்து விடுகிறார்கள். 
  

dddd

 

இந்த சோடியம் ஹைட்ரேட் சல்பேட்டால்தான் நம் உடம்பில் பல பிரச்சினை ஆகிவிடுகின்றன என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றன. உதாரணமாக இந்த சோடியம் ஹைட்ரோ சல்பேட்டை ஒரு டம்ளரில் கால்டம்ளர் போட்டு தண்ணீர் கலந்து குடித்துவிட்டால் மரணம் நிச்சயம் என்கிறார்கள். அப்படியென்றால் மஞ்சள் நிற வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் கதி சொல்லவே வேண்டாம், வெல்லத்தை தின்பதால் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளோம் என்று தெரியாமலேயே பலரும் நோயை விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளார்கள்.
 

சரி இந்த ஹைட்ரோ சல்பேட்டை போடுவதற்கு காரணம் என்ன? முன்பெல்லாம் வெல்லம் காய்ச்சும்போது, வெல்லப்பாகில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சுண்ணாம்பைக் கலந்துவிடுவார்கள். இது வெல்லப்பாகில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதுடன், சுண்ணாம்பு சத்தாகவும் வெல்லத்தில் கலந்து ஆரோக்கியத்தைக் கொடுத்தது. ஆனால் வெல்லத்தின் இயல்பான நிறமான பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட், சூப்பர் பாஸ்பேட், கேசரிபவுடர், மைதா மாவு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

 

ddd


தமிழக மக்கள் தான் நிறத்தைப் பார்த்து மயங்குபவர்கள் ஆச்சே.. ஒரிஜனலாக அச்சு வெல்லம் தயாரித்தால் கொஞ்சம் விலைகூட அவ்வளவுதான். ஆனால், அந்த வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அது சுத்தம் இல்லாத வெல்லம் என்று மக்கள் நினைப்பதோடு அதை வாங்கவும் தயங்கினார்கள். அதனால் தான் சர்க்கரை ஆலை அதிபர்கள் ஹைட்ரோ சல்பேட்டை கலந்து, மக்கள் உயிரோடு விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஆலை அதிபரும் அதைத்தான் செய்கிறார்.

 

ddd


 

இந்தத் தொழிற்சாலை மட்டும் இங்கே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இயங்குகிறதாம். இதில் வரும் கழிவு நீரை முறையாகச் சுத்திகரிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் இந்தப் பகுதி மக்களுக்குப் பலவித நோய்களும் வருவதாகச் சொல்கிறார்கள். 

 

dddd

                                                          அசல் வெல்லம்


இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் முதல் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதல் யாரிடம் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பலத்த கவனிப்பு நடக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
 

cnc

 

இது ஒருபுறம் இருக்க, இதே கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவிரி கரை ஓரப் பகுதிகளில் நிறைய போலி நாட்டுச் சர்க்கரை மற்றும் அச்சு வெல்ல தொழிற்சாலைகள் நிறைய இயங்கி வருகின்றது. அவர்கள் 'அஸ்கா' எனப்படும் வெள்ளை சர்க்கரையைக் கலப்படம் செய்து வெல்லம் என்ற பெயரில் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சர்க்கரையைக் கூட, பெரும்பாலானவர்கள் மூன்றாம் தர சர்க்கரையைத் தான் உபயோகப்படுத்துகின்றனர். இதனால் வெல்லம் சாப்பிடுவதாக நினைத்துச் சொந்த காசில் சூனியம் வைத்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர். 
    

சமீபத்தில் தான் நாமக்கல் மாவட்டத்தில் சில போலி அச்சு வெல்ல தொழிற்சாலைக்கு சீல் வைத்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். கரூர் மாவட்ட அதிகாரிகளோ லஞ்சத்தில் 'மஞ்சள்' குளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 


 

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

தேங்காய் நீரில் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாட்சி இளைஞர் அசத்தல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Pollachi youth discovered cure for diabetes in coconut water

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது பொள்ளாச்சி நகராட்சி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் விவேகானந்தன். இவர், அப்பகுதியின் பாரம்பரிய விவசாயமான தென்னை விவசாயம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். பெரிய அளவில் விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தினால், விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி, மாற்று பொருளாக மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்க ஆசைப்பட்டுள்ளார்.

அந்த வகையில், தனது சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுவதை அறிந்து, அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது, உடைக்கப்படும் தேங்காய்களிலிருக்கும் தண்ணீர் பயன்பாடின்றி வீணாக்கப்படுவதை கவனித்துள்ளார். உடனே, அந்த தேங்காய் தண்ணீரை வைத்து வேறு ஏதேனும் மதிப்பு கூட்டு பொருட்கள் செய்யலாமா? என்ற கோணத்தில் ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்விற்கு கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை கைகொடுத்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனை உதவியுடன் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த ஆராய்ச்சியானது, தேங்காய் தண்ணீரிலிருந்து ஏதேனும் மருத்துவ பொருட்களை தயாரிக்க முடியுமா? என்ற வகையில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின் வெற்றியாக, 2023ம் ஆண்டு ஆண்டு இறுதியில் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு, நீண்ட நாட்களாக ஆராத சர்க்கரை நோய் புண், தீக்காயம் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்து சோதனைக்கு அனுப்பப்பட்டு அங்கேயும் வெற்றி கண்டுள்ளது. அதனை அங்கீகரிக்கும் வகையில், நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதும் வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கிடையில், இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், பொள்ளாச்சியிலேயே தொழிற்சாலை தொடங்கி மருந்தை தயாரிக்க அனுமதியும், காப்புரிமையும் வழங்கியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முதல் மருந்து என்பதால், வருகின்ற 2024 ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய மருந்து கண்டுபிடிப்பாளர் விவேகானந்தன், “நான் உயர்கல்வி அமெரிக்காவில் முடித்தேன். அங்கு படிக்கும்போதே, எனக்கு மருத்துவத்துறையின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக, வீணாகும் விவசாய பொருட்களிலிருந்து மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. அந்த கனவு, இரண்டரை ஆண்டுகள் செய்த உழைப்பின் பலனாக தற்போது நிறைவேறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது, அதிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுவதை அறிந்தோம். அந்த வீணாகும் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு சர்க்கரை நோய், நாட்பட்ட புண்கள் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அந்த ஆராய்ச்சியில் எனக்கு வெற்றி கிடைத்தது. ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது. மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு, மருந்து தயாரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். நாங்கள் கண்டுபிடித்த மருந்தானது பயோ செல்லுலோஸ் வகையை சார்ந்தது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கோகோ லைஃப், கோகோ ஷீல்டு, கோகோ ஹீல் போன்ற மருந்துகள் சந்தைப்படுத்த காத்திருக்கின்றன. இதனை புண்ணின் மேற்பரப்பில் மருந்துக்கட்டாக பயன்படுத்த வேண்டும். மேலும், மருந்திற்கான மூலப்பொருட்கள் விவசாயிகளிடமிருந்து தான் வாங்க இருக்கிறோம், அதன் மூலம் விவசாயிகளும் பயன் பெறுவர்” என கூறினார். 

கோவையில், வீணாகும் தேங்காய் தண்ணீரை கொண்டு மருந்து கண்டுபிடித்த சம்பவம் தமிழக மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்று வருகிறது.