Skip to main content

நிவாரணத்தில் அசத்திய கனிமொழி! தடைபோட்ட எடப்பாடி!   

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

 

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் நிவாரண உதவிகளுக்கு எடப்பாடி அரசு தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த தடை உத்தரவுக்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!

 

kkkk


           

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தேசிய ஊரடங்கை மத்திய அரசும், 144 தடை உத்தரவை எடப்பாடி அரசும் அமல்படுத்தியிருக்கின்றன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவர்களுக்கான அன்றாட அத்யாவசிய பொருட்களை தமிழக அரசியல்கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கி வருகின.  
            

இந்த நிவாரண உதவிகளுக்குத்தான் தற்போது தடைவிதித்திருக்கும் எடப்பாடி அரசு, ’’ நிவாரண உதவிப் பொருட்களை வழங்கும் சேவையிலிருந்து அரசியல்கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் விலகிக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் ‘’ என உத்தரவு பிறப்பித்துள்ளது.  
             

இந்த தடை உத்தரவு, நிவாரண உதவி வழங்கி வரும் அரசியல் கட்சிகளிடத்திலும் மக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய திமுக மா.செ.க்கள், ‘’ கரோனா வைரசை தடுப்பதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கிய கையோடு, தனது தூத்துக்குடி தொகுதிக்குள் களமிறங்கினார் திமுக எம்.பி. கனிமொழி. அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விசாரித்த அவர், டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான கரோனா தடுப்பு கவசங்கள், சானிடைஷர்கள், கவச உடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்தார். 
                 

இதனையடுத்து, பசியால் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என திட்டமிட்டு, தொகுதி முழுவதுமுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கும், அமைப்புச்சார தொழிலாளர் குடும்பங்களுக்கும் தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கினார் கனிமொழி. இதற்காக, தொகுதிக்குள்ளே 7 நாட்கள் தங்கியிருந்தார். தொகுத்திக்குள்ளேயே தங்கியிருந்த கனிமொழியை தொடர்புகொண்ட அரசு டாக்டர்கள்,  தங்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதையும், 100 ஆடைகள் கொடுத்து உதவ முடியுமா? என்றும் கோரிக்கை வைத்தனர். அவசரம் அவசரமாக  175 ஆடைகளை ஏற்பாடு செய்து உடனே அரசு மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தார் கனிமொழி.   
         

கனிமொழியின் வேகம், திமுகவில் சுறுசுறுப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் தொடங்கி திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் தங்களது மாவட்டத்திலும் தொகுதிக்குள்ளும் களமிறங்கினார்கள். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினர். 
 

eps


                

திமுகவின் வேகம் கண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களமிறங்கின. ஆனால், ஆளும் கட்சியில் அமைச்சர்கள் சிலரைத் தவிர பெரும்பாலும் முடங்கியே கிடந்தனர். இதனால், நெருக்கடியான இந்த சூழலில் திமுகவின் பணிகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றதுமல்லாமல், ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் உருவாக்கியது. இதனை ஜீரணிக்க முடியாமல்தான் நிவாரண உதவிகளுக்கு தடை விதித்திருக்கிறது எடப்பாடி அரசு. கூட்டம் சேர்க்காமல் சமூக இடைவெளியை பின்பற்றியும் ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டும்தான் நிவாரணம் வழங்கி வருகிறோம். மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டு அரசாங்கமே எல்லாம் செய்து விடலாம் என நினைத்தால் அது முடியாது. அனைத்து தரப்பு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கத்தால் நிறைவேற்றிட முடியாதுங்கிறதுதான் எதார்த்தம். 
 

இன்றைக்கு பல ஆயிரம் மக்களுக்கு ரேசன் அட்டை கிடையாது. அவர்களுக்கு எப்படி அரசின் நிவாரண உதவி கிடைக்கும் ? அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரசின் நிவாரண உதவி கொடுக்கப்படும் என எடப்பாடி அரசு அறிவிக்கிறது. ஆனால், சர்க்கரை அட்டைத்தாரர்களுக்கு நிவாரண உதவி இல்லை என பல மாவட்டங்களில் ரேசன் கடைக்காரர்கள் மறுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், எல்லாத்தையும் அரசாங்கமே பார்த்துக்கும் என்றால் எப்படி ? உதவி செய்பவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் ; கூட்டம் சேர்க்கக் கூடாது என அரசாங்கம் கட்டளையிட்டு அதனை ஒருங்கிணைக்க முன் முயற்சி எடுத்தால் அது ஆரோக்கியமானதாக  இருக்கும். அரசியல்கட்சிகள், தன்னர்வர்கள் என பலரும் உதவி செய்ய களமிறங்கினால்தான் வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களை காப்பாற்ற முடியும். . இதனைவிடுத்து, நிவாரண உதவிகளுக்கு தடை விதிப்பதும், நாடு எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையில் ஆளும் வர்க்கம் அரசியல் செய்யத் துடிப்பதும் மக்களை வஞ்சிக்கும் செயல் ! ‘’ என்கிறார்கள் ஆவேசமாக.
 


 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.