Skip to main content

பாழாப்போன கரோனா... செத்துப் பிழைச்சி வந்தும் மனதளவுல மீண்டும் கொல்லுறாங்க! -குணமடைந்தவர்களின் குமுறல்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

கரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக விலகலைக் கடைபிடிக்கச் சொல்கிறது அரசு. ஆனால், ஒருவர் கரோனாவோடு தொடர்பில் இருந்தாலே போதும். அவரது ரிசல்ட் பாசிட்டிவோ, நெகட்டிவோ… சமூகம் அவரை சுத்தமாக விலக்கி வைக்கும் கொடுமை நடக்கிறது.

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அரை லட்சம் பேர் அளவுக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 255 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளனர். இதுபோக, ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா நெகட்டிவ் என அறிவிக்கப்பட்டும், இவர்களில் கணிசமானோரின் நிலைமை வேதனைக்குரியதாக இருப்பதையே, கள நிலவரம் காட்டுகிறது.

 

தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த அந்த 47 வயதுடையவர்தான், குமரி மாவட்டத்திலேயே கரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்த முதல் ஆள். அப்படி வீடுதிரும்பி 45 நாட்கள் ஆகியும், ஊர்க்காரர்கள் அவரை இன்னமும் கரோனா நோயாளியாகவே நடத்துகிறார்கள். வீட்டுக்குள் அவருக்கென தனி அறை. வெளியில் வரவே கூடாது போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தும்கூட, அவரது குடும்பத்தினர் அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் சென்றால்கூட, யாரும் ஏறிட்டு பார்ப்பதில்லை. மொத்த குடும்பத்தையும் தனிமைப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தான் வேலை. சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சொந்தஊர் திரும்பியபோது சோதனையில் அவருக்குக் கரோனா பாசிட்டிவ்வாக இருந்தது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 15 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமாகி, மருத்துவப் பணியாளர்கள் உற்சாகமாகக் கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், அவரது குடும்பத்தினரோ ஒட்டு மொத்தமாக வெளியேறி இன்னொரு வீட்டில் தஞ்சமடைந்தனர். அந்தப் பெண் தங்கியிருக்கும் வீட்டுப்பக்கம் யாரும் போவதில்லை. சாப்பாட்டை ஜன்னல் வழியே தள்ளி விடு கிறார்கள். தனது இரண்டு குழந்தைகளைக்கூட 10 மீட்டர் இடைவெளியில் வைத்தே பார்த்து ஆறுதல் அடைகிறார்.

 

வெளிநாட்டிலிருந்து கணவர் வர முடியாததால், தனியாக நாடு திரும்பினார் இரண்டு மாத கர்ப்பிணிப் பெண். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் நடந்த சோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதும், அங்கேயே தங்க வைக்கப்பட்டார். கட்டுப்படுத்த முடியாத வாந்தி, மனச்சோர்வு ஏற்பட்டதால் கர்ப்பிணி என்பதைக் கருத்தில் கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தது கேரள அரசு. வரும் வழியில் களியக்காவிளை செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நெகட்டிவ் ரிசல்ட்டைக் காட்டியும் அனுமதிக்க மறுத்தனர். ஒருகட்டத்தில் மனமிறங்கியவர்கள், 108 ஆம்புலன்சில் ஏற்றி வீட்டில் விடுகிறோம் என்று அடம்பிடித்து அதை நிறைவேற்றியும் விட்டார்கள். விளைவு, ஊர்க்காரர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு இன்றுவரை மன உளைச்சலில் இருக்கிறார் அந்தப்பெண்.

 

இவர்களைப் போல, சமூகம் ஒதுக்குவதால் மனவேதனையில் வாடுபவர்களின் மனக்குமுறல் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களில் நம்மிடம் பேசிய சிலர், "பெத்த பிள்ளையை ஒதுக்காத தாய்கூட, இன்னைக்கி ஒதுங்கித்தான் நிற்கிறாங்க. அந்தளவுக்கு பலரை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியிருக்கு இந்தப் பாழாப்போன கரோனா. இந்த நிலைமைக்கு அதிகாரிகளின் நடவடிக்கையும் முக்கியக் காரணம். ஏனென்றால், சோதனையில் நெகட்டிவாக வந்தாலும், குணமடைந்து வந்தாலும் எங்களை அழைத்து யாரிடமும் பேசாதீங்க, வெளியே போகாதீங்கன்னு ஊரைக்கூட்டி சொல்லி மீண்டும் கரோனா நோயாளியாக்கி விட்டுறாங்க. இதுபோக எங்களைக்காட்டி ஊர்க்காரங்களை மிரட்டினா, யார்தான் எங்களை மனுசனா மதிப்பாங்க. செத்துப் பிழைச்சி வந்தும் மனதளவுல மீண்டும் கொல்லுறாங்க'' என்கிறார்கள் கண்ணீரோடு.

 

இதுகுறித்து குமரி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஜிஸ்தி முகம்மது நம்மிடம், "கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோ, பரிசோதனைக்குச் சென்று நெகட்டிவாக வந்தோ வீடு திரும்புகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது போலவே, அவர்களது குடும்பத்தினருக்கும், ஊர்க்காரர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க அரசு முன்வரவேண்டும். மேலும், கரோனா பரிசோதனைக்காக ஒருவரை 108 ஆம்புலன்சில் கூட்டிச் செல்லும்போதுகூட, ஊர்க்காரர்களை பயமுறுத்தும் விதமாக பில்டப் கொடுக்கிறார்கள். இதனால், 108 ஆம்புலன்சைப் பார்த்தாலே ஒருவித பயம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. இந்த மனநிலையை மாற்றும் விதமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

 

http://onelink.to/nknapp

 

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோர், மருத்துவமனைகளில் பணியாற்றுவோர், ஊரடங்கு பணியில் நேரம் காலம் பார்க்காமல் கடமை செய்யும் காவல்துறையினர், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரையும் சமுதாயம் அச்சத்துடனேயே பார்க்கிறது. ஒதுக்கி வைக்கிறது. சமூக விலகல் என்ற சொல், சமூகக் கொடுமையாக மாறிக் கொண்டிருக்கிறது.

 

கரோனாவை விரட்ட, அதன் பாதிப்புகளின் இருந்து தப்பிக்க மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்ப்பது நியாயம்தான். அதேசமயம், அதிகாரிகளின் அணுகுமுறையும் மக்களோடு ஒத்துப்போகும் விதமாக இருந்தால் மட்டுமே, கரோனாவைக் கூட்டு முயற்சியோடு வெல்ல முடியும்.

 

 

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.