Skip to main content

கொலை வெறி கரோனா! -குறையாத மரண எண்ணிக்கை!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
corona virus Infection - chennai - Guindy corona government hospital -

 

 

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை ’மியாட்டில்’ இரண்டு வாரங்களாக கரோனாவுக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரைப் போலவே மின்துறை அமைச்சர் தங்கமணி ‘அப்பல்லோ’வில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இதேபோல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த  மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இப்படி கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் இருக்கிறார்கள். இவையெல்லாம் மக்களை திகைக்க வைத்திருக்கும் நிலையிலும், கரோனா சென்னையில் மட்டுப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கைந்து நாட்களாக 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று இருப்பதாகவும்  அரசு தரப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறது. 

 

இப்போது தனது எண்ணிக்கையின் எல்லையாக 1500-ஐ வைத்துக்கொண்டு அதற்குள் சுகாதாரத்துறையினர் கபடி ஆடுகிறார்கள். அதன்படி 9-ந் தேதி சென்னையில் வெறும் 1,216 பேருக்கு மட்டுமே தொற்று என்று கணக்கை காட்டுகிறார்கள். உண்மையில் கரோனாவின் வேகம் குறையுமானால் மகிழலாம். ஆனால் இப்போது பெருமளவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும்  நிலையிலேயே, சென்னையில் கரோனா குறைகிறது என்பதுதான் லாஜிக்கை உதைக்கிறது. 

 

6-ந் தேதியில் இருந்து பெரும் தளர்வை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, 7-ந் தேதி 750 படுக்கைகள் கொண்ட கரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனையை கிண்டியில் திறந்து வைத்துவிட்டு, கரோனாவின் வேகம் குறைகிறது என்று மகிழ்வோடு அறிவித்தார். 

 

corona virus Infection - chennai - Guindy corona government hospital -

 

முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டதுபோல், வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் தொற்றின் எண்ணிக்கை குறைகிறது. அதிலும் வாழ்வாதாரம் கருதிதான் இந்த தளர்வு ஏற்படுத்தப்பட்டது என்று எடப்பாடி சொன்ன பிறகு, கரோனா இரக்கம் கொண்டு இப்போது படிப்படியாக சென்னையில் ’குறைவது’ ஆச்சரியத்தை தருகிறது.

 

அப்படியென்றால் சென்னையில் பழைய அளவுக்கு பரிசோதனைகள் நடக்கிறதா என்ற சந்தேகம்தான் நமக்கு எழுகிறது. ஏனெனில் தொற்றின் எண்ணிக்கை குறைவதாக சொல்லி அரசு கூத்தாடினாலும், தினந்தினம் அரங்கேறும் மரணத்தின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லையே அது எதனால், கரோனா கட்டுக்குள் வந்தால் மரணமும் கட்டுக்குள் வந்திருக்கவேண்டுமே, சென்னையில் கரோனா தொற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைகிறபோது, மரண எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்திருக்க வேண்டுமே,  அப்படியொரு ஆறுதலூட்டும் அறிவிப்பு இன்னும் வராதது ஏன்? 

 

corona virus Infection - chennai - Guindy corona government hospital -

 

சென்னையில் ஜூலை 1-ந் தேதி வரை 888 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 9-ந் தேதி வரை சென்னையில் மட்டும் 1,169 பேர் கரோனாவுக்குப் பலியாகி இருக்கிறார்கள். 

 

இந்த துக்க நிகழ்வுகளை சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது. இத்தனைக் குடும்பங்களின் கண்ணீரையும், ஒப்பாரியையும் அரசால் எளிதில் கடந்துவிட முடியாது. கடந்த நாட்களை திரும்பி பார்த்தால், மரணப் பேரழிவு தமிழகத்தை துரத்துவதை உணரமுடியும்.   

 

corona virus Infection - chennai - Guindy corona government hospital -

 

தமிழகத்தில் ஏற்பட்ட முதல் கரோனா மரணம், கடந்த மார்ச் 24-ந் தேதி மதுரையில் ஏற்பட்டது. கட்டிட ஒப்பந்ததாரரும், மசூதி நிர்வாகியுமான 55 வயது நபர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததன் மூலம் கரோனா மரணக் கணக்கு ஆரம்பமானது.  ஜூலை 9ந் தேதி வரையிலான மூன்றரை மாதத்தில் இந்த  மரண எண்ணிக்கை 1,765 ஆகிவிட்டது.   

 

பெரும் தளர்வுக் காலமான ஜூலை மாதத்தில் மரணத்தின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஜூலை 1-ல் 63 பேரும்,  ஜூலை 2-ல்  57 பேரும், ஜூலை 3-ல் 64 பேரும், ஜூலை 4-ல் 65 பேரும் என நீண்டுகொண்டே போனது. இதன்படி ஜூலை 1ல்- இருந்து ஜூலை 7 வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 232 பேர் கரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதன் பின்னும் குறையவில்லை. 8-ந் தேதி 64 பேர், 9-ந் தேதி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இப்படி 9-ந் தேதி வரை தமிழகத்தில் 1,764 பேரின் உயிரைக்குடித்து ஏப்பம் விட்ட கரோனா, மக்களைத் தாறுமாறாக துரத்திக்கொண்டிருக்கும் நிலையில்தான், யாரும் அஞ்சவேண்டாம், யாரும் கவலைப்பட வேண்டாம். அரசு துரிதாமாக கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது என்று அரசு பழைய பல்லவியையே பாடிவருகிறது.

 

Next Story

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.