Skip to main content

"அதிமுக ஆட்சி இருக்கும் நினைப்பிலேயே மோடி இருக்கிறார்... நடைபெறுவது திமுக ஆட்சி" - செல்வப்பெருந்தகை பேச்சு!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

பர


நீட் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கிட்டதட்ட 5 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த வாரம் தமிழக அரசுக்கே அதனை திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த மசோதா தமிழக மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது, "ஆளுநர் செயல்படுவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதன்படிதான் அவர்கள் செயல்பட வேண்டும். அதில் தவறு ஏற்படும் பட்சத்தில் அவர்களை நோக்கி கேள்வி எழுவதை யாராலும் தடுக்க இயலாது. இந்த மசோதா என்பது கல்வி உரிமை சம்பந்தப்பட்டது. அதாவது பொதுப்பட்டியலில் வரக்கூடியது. மாநில பட்டியலில் உள்ளதை பற்றி மாநில அரசு சட்டம் இயற்றினால் அதைப்பற்றி கேள்வி கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டம் 201 பிரிவில் கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால் பிரிவு 200ல் தெளிவாக பொதுப்பட்டியலில் உள்ளவற்றை பற்றி ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேரடியாக அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதைத்தாண்டி இதில் ஆளுநருக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. இதில் இறுதி முடிவை குடியரசுத்தலைவர் எடுப்பார். இதில் எவ்வித விளக்கமோ, தயக்கமோ ஆளுநருக்கு ஏற்பட தேவையில்லை. குறிப்பாக ஏ.கே ராஜன் அறிக்கை தவறாக இருக்கிறது என்று கூறுவதெல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக இதைவிட அதிக தரவுகளை தமிழக அரசு ஆளுநருக்கு தந்திருக்க வேண்டும் என்று அதிமுக கூறியதாக சொல்கிறீர்கள். வேறு என்ன தரவுகளை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூற வேண்டும். இன்றைக்கும் ஏ.கே ராஜன் அறிக்கை பொதுவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதைப் படித்து அதன் முக்கிய சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். எனவே தட்டிக்கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அறிவார்ந்த தமிழக மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இருந்ததைப் போல இந்த அரசு இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது திமுக அரசு, மோடி அவர்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக அரசு நினைவிலேயே தமிழகத்தை அவர்கள் அணுகக் கூடாது. எனவே மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது. ஆளுநருக்கு தகுந்த அறிவுரை கூறி, அவரை திரும்பப்பெற முயற்சிக்க வேண்டும். இந்த நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்ததை போல இன்றைய பாஜக தலைவர் கூறியுள்ளதை பற்றிக் கேட்கிறீர்கள். அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை, படிக்கவும் தெரியவில்லை. நிறைய படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் நாம் அண்ணாமலைக்கு அறிவுரை கூற வேண்டும். எனவே வாயில் வந்ததையெல்லாம் ஆதாரம் இல்லாமல்  அவர்கள் பேசக்கூடாது. இந்த நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் முதல்வர் நல்ல முறையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்" என்றார். 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.