Skip to main content

"அதிமுக ஆட்சி இருக்கும் நினைப்பிலேயே மோடி இருக்கிறார்... நடைபெறுவது திமுக ஆட்சி" - செல்வப்பெருந்தகை பேச்சு!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

பர


நீட் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கிட்டதட்ட 5 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த வாரம் தமிழக அரசுக்கே அதனை திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த மசோதா தமிழக மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது, "ஆளுநர் செயல்படுவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதன்படிதான் அவர்கள் செயல்பட வேண்டும். அதில் தவறு ஏற்படும் பட்சத்தில் அவர்களை நோக்கி கேள்வி எழுவதை யாராலும் தடுக்க இயலாது. இந்த மசோதா என்பது கல்வி உரிமை சம்பந்தப்பட்டது. அதாவது பொதுப்பட்டியலில் வரக்கூடியது. மாநில பட்டியலில் உள்ளதை பற்றி மாநில அரசு சட்டம் இயற்றினால் அதைப்பற்றி கேள்வி கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டம் 201 பிரிவில் கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால் பிரிவு 200ல் தெளிவாக பொதுப்பட்டியலில் உள்ளவற்றை பற்றி ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேரடியாக அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதைத்தாண்டி இதில் ஆளுநருக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. இதில் இறுதி முடிவை குடியரசுத்தலைவர் எடுப்பார். இதில் எவ்வித விளக்கமோ, தயக்கமோ ஆளுநருக்கு ஏற்பட தேவையில்லை. குறிப்பாக ஏ.கே ராஜன் அறிக்கை தவறாக இருக்கிறது என்று கூறுவதெல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக இதைவிட அதிக தரவுகளை தமிழக அரசு ஆளுநருக்கு தந்திருக்க வேண்டும் என்று அதிமுக கூறியதாக சொல்கிறீர்கள். வேறு என்ன தரவுகளை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூற வேண்டும். இன்றைக்கும் ஏ.கே ராஜன் அறிக்கை பொதுவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதைப் படித்து அதன் முக்கிய சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். எனவே தட்டிக்கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அறிவார்ந்த தமிழக மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இருந்ததைப் போல இந்த அரசு இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது திமுக அரசு, மோடி அவர்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக அரசு நினைவிலேயே தமிழகத்தை அவர்கள் அணுகக் கூடாது. எனவே மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது. ஆளுநருக்கு தகுந்த அறிவுரை கூறி, அவரை திரும்பப்பெற முயற்சிக்க வேண்டும். இந்த நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்ததை போல இன்றைய பாஜக தலைவர் கூறியுள்ளதை பற்றிக் கேட்கிறீர்கள். அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை, படிக்கவும் தெரியவில்லை. நிறைய படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் நாம் அண்ணாமலைக்கு அறிவுரை கூற வேண்டும். எனவே வாயில் வந்ததையெல்லாம் ஆதாரம் இல்லாமல்  அவர்கள் பேசக்கூடாது. இந்த நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் முதல்வர் நல்ல முறையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்" என்றார். 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.